குவைத்தில் மூன்று F-15 அமெரிக்க போர் விமானங்களை வீழ்த்தியது யார்? நேரலை

பட மூலாதாரம், Fatemeh BahramiAnadolu via Getty Images
சௌதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரானின் புதிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ தற்போது "கட்டுப்பாட்டுக்குள்" கொண்டுவரப்பட்டுள்ளது.
இரானின் "பாகுபாடற்ற மற்றும் பொறுப்பற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை" வளைகுடா நாடுகளும் அமெரிக்காவும் ஒரு கூட்டு அறிக்கையின் மூலம் கண்டித்துள்ளன.
சனிக்கிழமையன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இரான் மீது கூடுதல் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
போராட்டம் நடத்துவதற்காக மக்கள் வீதிக்கு வர வேண்டாம் என்று இரான் அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பிபிசி பாரசீக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அதேசமயம், குவைத்தில் பல அமெரிக்கப் போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன.
இது குறித்து அமெரிக்க ராணுவம் ஓர் அறிக்கையில், "அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று கூறியது.
சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக கூறியுள்ள இரான், அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

பட மூலாதாரம், Majid SaeediGetty Images
குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கின
"பல" அமெரிக்கப் போர் விமானங்கள் குவைத்தில் விழுந்து நொறுங்கியுள்ளதாகவும், இச்சம்பவத்திற்கான சூழல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குவைத் ராணுவம் தெரிவித்திருந்தது.
தற்போது அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரானுக்கு எதிரான அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கைக்கு ஆதரவாகப் பறந்து கொண்டிருந்த மூன்று F-15 போர் விமானங்கள், "தவறுதலாக குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் வீழ்த்தப்பட்டது''
விமானங்களில் இருந்த ஆறு வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுந்து நொறுங்கிய போர் விமானம் எப்படிப்பட்டது?
கிறிஸ் பார்ட்ரிட்ஜ், பிபிசி
ஒரு F-15E ஸ்டிரைக் ஈகிள் அல்லது அதன் ஒரு வகை போர் விமானம் எனத் தோற்றமளிக்கும் ஒரு வீடியோ காட்சியில், அந்த விமானம் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறுக்குப் பிறகு, கட்டுப்பாட்டை இழந்து சுழன்று கொண்டு கீழே விழுவது தெரிகிறது. இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இப்பகுதியில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (US Central Command) இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இரான் நடத்திய தீவிரத் தாக்குதலின் போது, குவைத்தில் பல அமெரிக்கப் போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதாகவும், அந்த விமானங்களில் இருந்த வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து தப்பியதாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
F-15E ஸ்டிரைக் ஈகிள் ரக விமானங்கள், வான் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படும் பன்முகத்தன்மை கொண்ட போர் விமானங்களாகும். இந்த மோதலில் அவை தற்போது எந்த மாதிரியான பணிகளில் ஈடுபட்டுள்ளன என்பது சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், இரானிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வழிமறித்து அழிக்கும் தற்காப்பு நடவடிக்கைகளில் இவை ஈடுபடுத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.
இப்பணிக்காக இவை விமானத்தில் உள்ள வெப்பத்தை உணர்ந்து இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் (heat-seeking missiles), நீண்ட தூர ஏவுகணைகள் அல்லது இலக்கிற்கு மிக அருகில் இருந்தால் விமானத்திலுள்ள துப்பாக்கிகளைக் கூடப் பயன்படுத்தலாம். இவை தவிர லேசர் மூலம் வழிநடத்தப்படும் ராக்கெட்டுகள் போன்ற பிற ஆயுதங்களும் இவற்றில் உள்ளன.
முதல் 24 மணி நேரத்தில் 1,000 இலக்குகள் மீது தாக்குதல் - அமெரிக்கா
ஆபரேஷன் எபிக் ஃப்யூரியின் முதல் 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட இரானிய இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம், டிரோன்கள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அது பட்டியலிட்டிருந்தது.
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கூட்டுத் தலைமையகம் உள்ளிட்ட தாக்குதலுக்குள்ளான இரானிய இலக்குகளையும் இது பட்டியலிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) கருத்துகளை இது எதிரொலிக்கிறது, நடவடிக்கையின் முதல் நாள் "மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை" செய்ததாக இஸ்ரேல் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது.

பட மூலாதாரம், ATTA KENARE AFP via Getty Images
'நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதல் தொடரும்'
டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "போர் நடவடிக்கைகள் முழு பலத்துடன் தொடரும். எங்கள் அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை தொடரும்." என்று கூறியுள்ளார்.
"துரதிர்ஷ்டவசமாக இன்னும் அதிகமான அமெரிக்க உயிரிழப்புகள் இருக்கும். அதை தவிர்க்க இயலாது. அவர்களின் மரணத்திற்கு அமெரிக்கா பழிவாங்கும். நாகரிகத்திற்கு எதிராகப் போரை நடத்திய பயங்கரவாதிகளுக்கு மிகவும் தண்டனைக்குரிய அடியை வழங்கும்" என்று அவர் தெரிவித்தார்.
"இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர், போலீசார் ஆயுதங்களை கீழே போட்டால் உயிர் தப்பலாம் அல்லது நிச்சயம் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அது நிச்சய மரணம்" என்றார் அவர்.
"அணு ஆயுதங்களுடன் கூடிய இரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை" ஒழிக்க இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் "சரியானவை" மற்றும் "அவசியமானவை" என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்த சகிக்க முடியாத அச்சுறுத்தல்கள் இனி தொடராது" என்று டிரம்ப் தெரிவித்தார்.
"சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து இரானிய தேசபக்தர்களும் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், தைரியமாக இருக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று டிரம்ப் கூறினார்.
"தைரியமாக இருங்கள், வீரத்துடன் இருங்கள், உங்கள் நாட்டைத் திரும்பப் பெறுங்கள். அமெரிக்கா உங்களுடன் உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Donald Trump/Truth Social
'எங்கள் இராணுவத் திறனில் எதுவும் மாறவில்லை'
ஏபிசி நியூஸிடம் பேசிய இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரான் "சில தளபதிகளை இழந்திருந்தாலும்... எங்கள் இராணுவத் திறனில் எதுவும் மாறவில்லை" என்று கூறியுள்ளார்.
"கடந்த முறை இதுதான் நடந்தது," என்று அவர் கூறுகிறார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்களை அவர் குறிப்பிடுகிறார்.
"எங்கள் உயர் தளபதிகளில் சிலரை அவர்கள் கொன்றனர், ஆனால் அவர்கள் மிக விரைவில் மாற்றப்பட்டனர். அடுத்த 12 மணி நேரத்திற்குள், எங்களால் பதிலடி கொடுக்கத் தொடங்க முடிந்தது," என்றார் அவர்.
"இந்த முறை, அது இன்னும் வேகமாக இருந்தது."
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது இன்னும் சாத்தியமா என்று கேட்கப்பட்டது.
"நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவும்." என்று கூறிவிட்டு தொடர்ந்த அராக்சி, கடந்த வியாழக்கிழமை இரானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் "ஜெனீவாவில் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை" மேற்கொண்டனர், பின்னர் திங்களன்று வியன்னாவில் மீண்டும் ஒரு சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "சமாதானத்தை எதிர்ப்பவர்கள் அதைக் கெடுக்க முடிவு செய்தனர்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக இரான் தகவல்
அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் "ஏவுகணைகளால் தாக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கின்றன" என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியதாக இரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் பிரிட்டனும் இதனை உறுதிப்படுத்தவில்லை.
UK கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தனது தினசரி அறிவிக்கையில், அந்தப் பகுதியில் "பல கடல்சார் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்று கூறுகிறது. இரண்டு கப்பல்கள் "எறிகணைகளால்" தாக்கப்பட்டதாக அது கூறுகிறது, இதனால் தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கப்பல்கள் எங்கிருந்து வந்தன அல்லது அவை எங்கு பதிவு செய்யப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வளைகுடா மற்றும் தற்போது மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக பாதைகளில் ஒன்றாகவும், எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழியாகவும் பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images
வார இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆசியாவில் திங்கள்கிழமை காலை எரிசக்தி சந்தைகள் திறந்தபோது பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் நைமெக்ஸ் லைட் ஸ்வீட் எண்ணெய் இரண்டும் 10% க்கும் அதிகமாக உயர்ந்தன.
ஒரு கட்டத்தில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 9% உயர்ந்து $79.30 ஆக இருந்தது, அதே நேரத்தில் நைமெக்ஸ் சுமார் 8.5% அதிகரித்து $72.70 ஆக இருந்தது.
இரானுக்கு வளைகுடா கவுன்சில் எச்சரிக்கை

பட மூலாதாரம், StringerAnadolu via Getty Images
இரானிய தாக்குதல்களால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்து விவாதிக்க வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சௌதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகியவற்றைக் கொண்ட இந்த அமைப்பு இரானின் தாக்குதல்களைக் கண்டித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை இரான் மீறுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாக்குதல்களை நிறுத்துமாறு இரானை கேட்டுக் கொண்டுள்ள அந்த அமைப்பு, பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த "தேவையான அனைத்து நடவடிக்கைகளும்" எடுக்கப்படும் என்றும் இரானை வளைகுடா கவுன்சில் எச்சரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












