'கழிப்பறை காகிதம்' - அமெரிக்கா தங்களை நடத்திய விதம் பற்றி பாகிஸ்தான் அமைச்சர் பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுடனான பாகிஸ்தான் உறவு குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்த கருத்துக்கள் மீதான விவாதம் தீவிரமடைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஆப்கானிஸ்தான் போர்களில் பாகிஸ்தானின் பங்கு குறித்து பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கவாஜா ஆசிப் பேசினார்.
அப்போது, அமெரிக்கா தனது உத்தி சார்ந்த நலன்களுக்காக பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் 'டாய்லெட் பேப்பர்' (கழிப்பறை காகிதம்) போல அதைக் கைவிட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆப்கானிஸ்தான் மண்ணில் நடந்த இரண்டு போர்களிலும் பாகிஸ்தான் இஸ்லாம் மீதோ அல்லது மதம் மீதோ கொண்ட பற்றினால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார். இது ஜிகாத் அல்ல என்றும், இது வல்லரசுகளுக்கு இடையிலான போர் என்றும் கவாஜா ஆசிப் தெரிவித்தார்.
கவாஜா ஆசிஃப் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் போர்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது மதம் அல்லது இஸ்லாமிய காரணங்களால் தூண்டப்பட்டது என்ற பொதுவான கருத்தை கவாஜா ஆசிப் மறுத்தார். மேலும், நாட்டின் இரண்டு ராணுவ ஆட்சியாளர்கள் (ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப்) அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுவதற்காகவே ஆப்கானிஸ்தான் போர்களில் பங்கேற்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
1979-இல் தொடங்கிய சோவியத்-ஆப்கான் போர் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், "சோவியத் ஒன்றியம் காபூல் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஆப்கானிஸ்தானுக்கு வந்தது. அது ஒரு ஊடுருவல் அல்ல. அது ஒரு அமெரிக்கக் கோட்பாடு," என்றார்.
"அது ஜிகாத் அல்ல. அது வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு போர். அதற்காக நாம் நமது பாடத்திட்டத்தையே மாற்றினோம், 1960 அல்லது 70-களில் நாம் கற்பித்த முறைக்கு இன்னும் நம்மால் அதைத் திரும்பக் கொண்டு வர முடியவில்லை," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "அமெரிக்கத் தயாரிப்பு ஜிகாத்தை நாம் முன்னெடுக்க வேண்டியிருந்ததால், நமது அரசியல் மற்றும் மத விழுமியங்கள், ஏன் மரபுகள் கூட மாற்றப்பட்டன. ஆனால் அந்த ஜிகாத்திலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு, அவர்கள் நம்மை நிர்க்கதியாக விட்டுச் சென்றனர்." என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து ஆசிஃப் பேசியது என்ன ?
1999-க்குப் பிறகு, குறிப்பாக செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவுடன் மீண்டும் இணைந்ததால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பேரழிவு எவ்வளவு மோசமானது என்பதைப் பற்றி ஆசிப் குறிப்பிட்டுப் பேசினார்.
2001-க்குப் பிறகு, அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் போரில் பாகிஸ்தான் மீண்டும் அமெரிக்காவை ஆதரித்ததாகவும், அந்தச் செயல்பாட்டில் தாலிபன்களுக்கு எதிராகத் திரும்பியதாகவும் ஆசிப் விளக்கினார்.
அமெரிக்கா இப்பகுதியிலிருந்து வெளியேறியது, பாகிஸ்தானை நீண்ட காலமாக வன்முறை, தீவிரவாதம் மற்றும் பொருளாதார அழுத்தங்களால் பாதிக்கப்பட்டது என்பதும் அவரது கருத்தாக அமைந்தது.
"1999 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வந்த அரசாங்கமும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற மிகவும் ஆர்வமாக இருந்தது" என்று அவர் கூறினார்.
"அமெரிக்கா பாகிஸ்தானை எவ்வாறு பயன்படுத்தியது என்பது பற்றி ஹிலாரி கிளிண்டன் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை அனைத்தையும் விவரிக்கிறது. அது ஒரு முக்கிய உரை. அவர் எங்களை எப்படி ஒரு டிஷ்யூ பேப்பரைப் போல... டிஷ்யூ பேப்பர் கூட பரவாயில்லை, ஒரு டாய்லெட் பேப்பரைப் போல இங்கே விட்டுச் சென்றார்... ஆனாலும் நாம் அதிலிருந்து பாடம் கற்கவில்லை. பில் கிளிண்டன் இரண்டு மணி நேரம் இங்கு வந்தபோது, அன்றைய அரசியல்வாதிகள் பில் கிளிண்டன் வந்துவிட்டார் என்று கூறி அவருக்கு மாலை அணிவிக்கத் தொடங்கினர்."
2000-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் சில மணிநேரப் பயணமாக பாகிஸ்தானுக்குச் சென்றார்.
"மொத்தமாகக் கணக்கிட்டால், அவர்கள் (அமெரிக்கா) 20-25 ஆண்டுகளில் சுமார் 10 கோடி முஸ்லிம்களைக் கொன்றுள்ளனர். அவர்கள் கடாபியின் மகனைக் கூட விட்டுவைக்கவில்லை"என்று கவாஜா ஆசிஃப் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்றுவரை 9/11 தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை, அது நிச்சயமாக ஆப்கானிஸ்தானால் செய்யப்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்களில் பஷ்டூன் இனத்தவர் யாரும் இல்லை. ஆனால் அதிலும் கூட, இரண்டரை தசாப்தங்களாக நாம் (அமெரிக்காவிற்கு) வாடகைக்குக் கிடைப்பவர்களாக மாறினோம். ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பிற்கு அமெரிக்க ஊன்றுகோல் தேவைப்பட்டது என்பதே அதன் நோக்கமாக இருந்தது"என்றார்.
கடந்த 22-23 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்கு, இன்று பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரிக்க வழிவகுத்துள்ளது என்று கவாஜா ஆசிப் கூறினார். "இது அதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவு " என்று அவர் குறிப்பிட்டார்.
ஆசிபின் கூற்றுக்கு எத்தகைய எதிர்வினை உருவானது?
அமெரிக்காவிற்கு எதிரான கவாஜா ஆசிப்பின் பேச்சு பாகிஸ்தானிய ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறவில்லை.
உண்மையில், டான் நியூஸ் மற்றும் தி நேஷன் ஆகியவற்றின் செய்திகள், அவரது உரையை எதிர்க்கட்சித் தலைவர் மஹ்மூத் கானின் கருத்துக்கு அளிக்கப்பட்ட பதிலடியாக விவரித்தன. மஹ்மூத் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கை பொறுப்பற்றது என்று விமர்சித்திருந்தார்.
"பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இரண்டு ஆப்கான் போர்களில் பாகிஸ்தானின் பங்கை ஒரு தவறு என்று குறிப்பிட்டார். இன்று நாட்டில் நிலவும் பயங்கரவாதம் கடந்த கால சர்வாதிகாரத் தலைவர்களின் தவறுகளின் விளைவாகும் என்று அவர் கூறினார்," என டான் நியூஸ் எழுதியுள்ளது.
தங்கள் அரசியல் நலன்களுக்காக தலைவர்கள் இப்போது ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகளில் கூட கலந்து கொள்வதில்லை என்று கவாஜா ஆசிப் கூறிய கருத்திற்கும் டான் நியூஸ் இடமளித்துள்ளது.
டான் நியூஸ் தகவலின்படி, பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்தியா மீது கவாஜா ஆசிப் குற்றம் சாட்டினார். "இந்தியா எங்களுக்கு எதிராக ஆப்கான் பயங்கரவாதிகளைப் பயன்படுத்துகிறது. இந்தியா பாகிஸ்தானில் ஒரு நிழல் யுத்தத்தை நடத்துகிறது," என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது.
இருப்பினும், ஆசிப்பின் அறிக்கை விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் சல்மே கலீல்சாத் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அதில், "9/11-க்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தனது நாட்டை அமெரிக்காவிற்கு வாடகைக்கு விட்டதாக கவாஜா ஆசிப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உதவியதற்குப் பதிலாக பாகிஸ்தான் ராணுவ மற்றும் நிதி உதவியைப் பெற்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல," என்று கூறியுள்ளார்.
மேலும், "அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிடுபவர்களை பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாத்து வந்ததும் அனைவரும் அறிந்ததே. அப்படியானால், அமெரிக்காவைப் பலவீனப்படுத்த மற்றொரு சக்தியிடமிருந்து வாடகை பெறுவதற்காக அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறதா? அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிட்டவர்களைப் பாதுகாத்ததற்குப் பதிலாக அரசாங்கம் எதைப் பெற்றது, யாரிடமிருந்து பெற்றது என்பதை அமைச்சர் ஆசிப்பால் விளக்க முடியுமா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக அரசாங்கம் இதைச் செய்ததா? இதற்கான பதில்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்," என்றும் அப்பதிவு கூறுகிறது.
ஏற்ற தாழ்வுகள் நிறைந்த அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள்

பட மூலாதாரம், Getty Images
கடந்த நாற்பதாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட அனைத்து ராணுவத் தலையீட்டிலும் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
1980-களின் சோவியத் எதிர்ப்புப் போராட்டம் முதல், 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய அமெரிக்க ராணுவ நடவடிக்கை மற்றும் 2021-இல் படைகள் வாபஸ் பெறப்பட்டது வரை, பாகிஸ்தான் அமெரிக்காவிற்குத் துணையாக நின்று வருகிறது.
2001 தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளியாக பாகிஸ்தான் மாறியது. இதற்குப் பதிலாக, அமெரிக்காவிடமிருந்து ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை அது தொடர்ந்து பெற்று வருகிறது.
இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன.
உதவிக்கு ஈடாக தனது கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் சரியான பதிலளிக்கவில்லை என்று அமெரிக்கா கருதியது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அமெரிக்கா நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். இது பாகிஸ்தானின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பல பில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கூட அவர் நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, ஜோ பைடன் காலத்திலும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படவில்லை.
ஏப்ரல் 2022-இல் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, இம்ரான் கான் அமெரிக்காவை பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கினார். தான் பிரதமர் பதவியை இழந்ததற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் சீராகி வருவதாகத் தெரிகிறது.
கடந்த மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகித்ததாக டிரம்ப் கூறினார். அடுத்த மாதம், பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் அசீம் முனீரை வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அவர் அழைத்தார்.
பாகிஸ்தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரைப் பரிந்துரைத்தது. மேலும், காஸாவில் போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க அமைதி வாரியத்தில் இப்போது பாகிஸ்தான் உறுப்பினராகவும் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












