You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஜி-7 நாடுகளுக்கு இரான் முன்வைத்த கேள்விகள் என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. திமுக எங்களை நிர்பந்திக்கவுமில்லை, நாங்கள் அடிபணியவுமில்லை - முத்தரசன்

    தொகுதி பங்கீட்டில் திமுக எங்களை நிர்பந்திக்கவுமில்லை, நாங்கள் அடிபணியவுமில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை வழங்கியதை விட ஒரு தொகுதி குறைவாக ஒதுக்கப்பட்டிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கூட்டணி கட்சித்தலைவர்களுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன். சிபிஐ (CPI) ஒரு தொகுதி குறைவாக வாங்கியது தொடர்பாக பல இடங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது, எங்களை நிர்பந்திக்க திமுக, பாஜக அல்ல அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல என்று தெரிவித்தார்.

    திமுக தலைமையில் அமைந்திருப்பது கொள்கை கூட்டணி, தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும் நீண்ட காலம் தொடர்ந்தது இல்லை, ஆனால் திமுக கூட்டணி கொள்கை பிடிப்போடு செயல்படுவதால் 10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    எங்களுக்கு தொகுதிகள் பிரச்னை அல்ல பொது எதிரியான ஆர்.எஸ்.எஸ் ஐ விரட்டியப்பதே எங்களுக்கு முக்கியம். சிலர் அதற்கு துணை போய்விட்டனர் இவர்களை அனுமதிப்பது ஒட்டுமொத்த தேசத்திற்கே ஆபத்தானது என்றார் அவர்.

    இந்த பொறுப்புணர்வு எங்களுக்கு இருப்பதால் தொகுதி குறைவது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்தார்.

  2. ஜி-7 நாடுகளுக்கு இரான் முன்வைத்த கேள்விகள் என்ன?

    மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக, இரானின் 'நியாயமற்ற தாக்குதல்களை' கண்டித்து ஜி-7 (G-7) நாடுகள் வெளியிட்ட அறிக்கைக்கு இரான் கடும் எதிர்வினையாற்றியுள்ளது.

    "இரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவும் ஒரு அங்கமாக உள்ள ஜி-7 வெளியுறவு அமைச்சர்களிடமிருந்து வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?" என்று டோக்கியோவில் உள்ள இரானியத் தூதரகம் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

    இரான் தூதரகம் மேலும் கூறுகையில், "ஆச்சரியப்படுவதற்கில்லை; சர்வதேசச் சட்டங்களுக்கும் ஐ.நா. சாசனத்திற்கும் அப்பட்டமான மீறல்களாக அமைந்த, இரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைக் கண்டிப்பதற்குக்கூட இந்த அறிக்கை தவறிவிட்டது. இது மற்ற ஜி-7 உறுப்பு நாடுகளின் முன் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது," என்று தெரிவித்தது.

    முன்னதாக, இரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் நடத்திய 'நியாயமற்ற தாக்குதல்கள்' தொடர்பாக, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை மத்திய கிழக்கில் உள்ள தங்கள் கூட்டாளி நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

    இதற்குப் பதிலளிக்கும் வகையில் இரான், "இப்பகுதியின் எந்தெந்த நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களிலிருந்து, அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு போர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை இந்நாடுகளால் தெளிவுபடுத்த முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.

    "இரானில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகளைத் தாக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காகப் பறக்கும் அமெரிக்க KC-135 எரிபொருள் நிரப்பு விமானங்கள் எந்த வான்வழியாகப் பயணிக்கின்றன என்பதை அவர்களால் வெளியிட முடியுமா?" என்றும் இரான் கேட்டுள்ளது.

    இது தவிர, இரான் மேலும் பல கேள்விகளை எழுப்பியதுடன், ஜி-7 நாடுகளிடம், "தாக்குதல் நடத்தியவர்களின் போர்க்குற்றங்களை, குறிப்பாக மினாப் (Minab) நகரில் பாதிக்கப்பட்ட 165 அப்பாவிப் பள்ளிக்குழந்தைகள் தொடர்பான விவகாரத்தில், அவர்கள் ஏன் கண்டிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா?" என்றும் வினவியுள்ளது.

  3. இரானின் ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறியது என்ன?

    இரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், "கேட்கப்பட்ட சத்தங்கள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்டவை" என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

    இத்தகைய தாக்குதல்கள் இரான் தரப்பிலிருந்து நடத்தப்படுவதாகவும், அவை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை மாலையும் தெரிவித்திருந்தது.

  4. திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகல்

    திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகுவதாக அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்திருக்கிறார்.

    தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தான் நீண்ட காலமாக முன்வைத்து வரும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் இந்த முடிவை கட்சி எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

    சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய தி.வேல்முருகன், "திமுகவின் பேச்சுவார்த்தைக் குழு தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு இந்தத் தேர்தலில் 1 இடம் கொடுப்பதாக அறிவித்தது. நாங்கள் கூடுதல் இடங்கள் கேட்டோம். அடுத்தபடியாக, இடங்களை ஒதுக்குவதில் முன்பின் இருந்தாலும், எங்கள் கட்சி விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், தாய்மார்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் கண்ணீரைப் போக்கக்கூடிய 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு முதல்வர் ஆவன செய்யவேண்டும் என்று கேட்டிருந்தேன்" என்று கூறினார்.

    "இந்த கோரிக்கைகள் சார்பாக சட்டமன்றத்திலும் பல ஆண்டுகளாக வலுயுறித்தி பேசியிருந்தேன். ஆனால், திமுக அரசு அந்த கோரிக்கைகள் குறித்து சிறிதளவும் அவர்கள் பொருட்படுத்தவில்லை." என்று குற்றம்சாட்டிய அவர், பாரதிய ஜனதா இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.

    2019 & 2024 மக்களவைத் தேர்தல்கள், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெற்றிருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வேல்முருகன் எம்எல்ஏ ஆனார்.

  5. இரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேலில் அனைத்துப் பள்ளிகளும் மூடல்

    இஸ்ரேலில் டிமோனா மற்றும் அராட் நகரங்கள் மீதான இரானிய தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

    இதுகுறித்து இஸ்ரேலிய கல்வி அமைச்சர் யோவ் கிஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் அனைத்துத் தளர்வுகளும் முடிவுக்கு வரும் என்றும், நேரடி வகுப்புகள் எதற்கும் அனுமதி இல்லை என்றும் நான் முடிவு செய்துள்ளேன்," என்று பதிவிட்டுள்ளார்.

    சிறப்புக் கல்விக்கான விலக்குகள் இந்த காலகட்டத்தில் ரத்து செய்யப்படும் என்றும், நாடு முழுவதும் தொலைதூரக் கல்வி (இணையவழி வகுப்புகள்) நடைமுறையில் இருக்கும் என்றும் கல்வி அமைச்சர் யோவ் கிஷ் தெரிவித்தார்.

    செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாக நிலைமையை மீண்டும் ஆய்வு செய்த பின்னரே அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

    தெற்கு நகரமான அராட் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலின் அவசரக்கால சேவைகள் தெரிவிக்கின்றன. 88 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தாக்குதல்களை "மிகவும் கடினமான மாலைப் பொழுது" என்று குறிப்பிட்டுள்ளார்.

  6. ‘ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்களை அச்சுறுத்தும் இரானின் திறனுக்கு பாதிப்பு’- அமெரிக்கா

    அமெரிக்க குண்டுவீச்சிற்குப் பிறகு ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்களை அச்சுறுத்தும் இரானின் திறன் 'குறைந்துள்ளது' என்று சென்ட்காம் (Centcom) கூறுகிறது.

    இந்த வாரம், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களைச் சேமித்து வைத்திருந்த இரானின் ஒரு நிலத்தடி தளத்தை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையை அச்சுறுத்தும் இரானின் திறன் ‘குறைந்துள்ளது’ என்று அமெரிக்க ராணுவம் கூறுகிறது.

    "நாங்கள் அந்த தளத்தை மட்டும் அழிக்கவில்லை, கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்ட உளவுத்துறை ஆதரவு தளங்கள் மற்றும் ஏவுகணை ரேடார் ரிலேக்களையும் அழித்துள்ளோம்," என்று அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (Centcom) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.

    "இதன் விளைவாக ஹோர்மூஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் இரானின் திறன் குறைந்துள்ளது, மேலும் இந்த இலக்குகளைத் தொடர்ந்து குறிவைப்பதை நாங்கள் நிறுத்த மாட்டோம்," என்றும் அவர் கூறினார்.

    அதே வீடியோவில், 130 இரானிய கப்பல்கள் உட்பட 8,000-க்கும் மேற்பட்ட இரானிய ராணுவ இலக்குகள் அமெரிக்காவால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

  7. இரானுடனான உறவு குறித்து ரஷ்யா வெளியிட்ட புதிய அறிக்கை

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இரானியத் தலைவர்களுக்கு நவ்ரூஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார், 'ரஷ்யா எப்போதும் இரானின் நண்பராகவும் நம்பகமான கூட்டாளியாகவும் இருந்து வருகிறது' என்றும் கூறினார்.

    ரஷ்யாவின் கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையின்படி, "அதிபர் விளாதிமிர் புதின் இரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமனெயி மற்றும் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோருக்கு இரானிய புத்தாண்டு (நவ்ரூஸ்) வாழ்த்துகளைத் தெரிவித்தார், மேலும் இரானிய மக்கள் கடினமான சவால்களை கண்ணியத்துடன் முறியடிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்."

    முன்னதாக, "இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் அழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளன. இது ஒரு பெரிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியுள்ளது," என்று ரஷ்யா கூறியிருந்தது.

    ‘ஆயதுல்லா அலி காமனெயி கொலைக்கு காரணமான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளையும்’ ரஷ்யா கடுமையாகக் கண்டித்துள்ளது.

    ரஷ்யா இரானுக்கு உளவுத்துறை உதவிகளை வழங்கி வருவதாகச் சில ஊடக அறிக்கைகள் முன்னதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ரஷ்யா செயற்கைக்கோள் படங்கள் மற்றும் மேம்பட்ட டிரோன் தொழில்நுட்பத்தை இரானுக்கு வழங்குவதாகக் கோரிய வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையைக் கிரெம்ளின் நிராகரித்தது.

  8. ‘நடான்ஸ் அணுசக்தி தளம் மீது தாக்குதல்’- ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அறிக்கை

    இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் இன்று (மார்ச் 21) காலை தாக்குதலுக்கு உள்ளானதாக இரான் கூறியதைத் தொடர்ந்து, "அணுசக்தி விபத்து ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க ராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு" ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நடான்ஸ் தளம் இன்று தாக்கப்பட்டதாக இரான் தங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.

    "தளத்திற்கு வெளியேயான கதிர்வீச்சு அளவுகளில் அதிகரிப்பு எதுவும் பதிவாகவில்லை. இது குறித்த அறிக்கையை IAEA ஆய்வு செய்து வருகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அணுசக்தி விபத்து ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க ராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று IAEA அமைப்பின் தலைமை இயக்குனர் ரஃபேல் குரோசி தொடர்ந்து வலியுறுத்துவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவால் குண்டுவீசித் தாக்கப்பட்ட இரானின் மூன்று நிலத்தடி அணுசக்தி நிலையங்களில் நடான்ஸ் தளமும் ஒன்றாகும்.

    தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதிக்கானது என்று இரான் உறுதியாகக் கூறுவதோடு, தான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்வதையும் மறுக்கிறது.

    ஆனால், சிவில் அணுசக்திக்குத் தேவையான அளவைத் தாண்டி, ஆயுதத் தரம் வாய்ந்த யுரேனியத்திற்குத் தேவையான 90%-க்கு நெருக்கமான 60% தூய்மைக்கு அது யுரேனியத்தைச் செறிவூட்டி வருகிறது.

  9. போருக்கு மத்தியில் இரான் அதிபருடன் பேசிய பிரதமர் மோதி- என்ன விவாதித்தார்?

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு ஈத் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோதி அந்தப் பதிவில், "அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசினேன். ஈத் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தத் திருவிழாக் காலம் மேற்கு ஆசியாவிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்று நாங்கள் பரஸ்பர நம்பிக்கையை வெளிப்படுத்தினோம்," என்று கூறியுள்ளார்.

    "பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைப்பதாகவும் உள்ள, அப்பகுதியின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நான் கண்டித்தேன். கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், கப்பல் பாதைகள் திறந்தும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நான் வலியுறுத்தினேன்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    "இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பிற்காக இரான் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவைப் பாராட்டினேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மத்திய கிழக்கில் நிலவி வரும் ராணுவ மோதலால் ஹோர்மூஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சில நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

  10. பிரிட்டன்- அமெரிக்கா கூட்டு ராணுவ தளத்தை நோக்கி ஏவுகணைகளை வீசிய இரான்

    டியாகோ கார்சியாவில் உள்ள பிரிட்டன்-அமெரிக்க கூட்டு ராணுவ தளம் மீது இரான் ஏவுகணைகளை ஏவியது என்பதை பிபிசி நியூஸ் அறிந்து கொண்டுள்ளது.

    ஆனால், இந்தத் தாக்குதல் தோல்வியடைந்தது என்றும், நேற்று (மார்ச் 20) இரவு பிரிட்டிஷ் தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு தாங்கள் அனுமதிப்பதாக பிரிட்டன் அறிவிப்பதற்கு முன்பே இது நடந்தது என்றும் பிபிசி நியூஸ் அறிந்து கொண்டுள்ளது.

    டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க - பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளத்தை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதா என்பதை பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

    இந்தியப் பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவு டியாகோ கார்சியா ஆகும், மேலும் இது பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆயுதப் படைகளின் கூட்டு ராணுவத் தளத்தைக் கொண்டுள்ளது.

    பிரிட்டிஷ் நலன்கள் அல்லது உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் இரான் ஏவுகணைகளை ஏவுவதைத் தடுப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளுக்காக, இந்தத் தளம் மற்றும் குளோஸ்டர்ஷையரில் உள்ள ஆர்ஏஎஃப் ஃபேர்ஃபோர்டு (RAF Fairford) ஆகியவற்றை பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரிட்டன் இந்த மாத தொடக்கத்தில் அனுமதி வழங்கியது.

    ஹோர்மூஸ் நீரிணையை இலக்கு வைக்கும் இரானிய இடங்கள் மீது தாக்குதல்களை நடத்த பிரிட்டிஷ் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த பிரிட்டன் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) ஒப்புக்கொண்டது.

    டியாகோ கார்சியா பெரும்பாலான பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாகும், மேலும் இது அருகிலுள்ள நிலப்பரப்பிலிருந்து சுமார் 1,000 மைல் (1,609 கி.மீ) தொலைவில் உள்ளது.

    இந்தத் தீவு பிரிட்டன் மற்றும் மொரிஷியஸ் இடையேயான நீண்டகால எல்லைத் தகராறின் மையமாக இருந்து வருகிறது. கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, பிரிட்டன் டியாகோ கார்சியாவை ஆண்டுக்கு சராசரியாக 101 மில்லியன் பவுண்டுகள் செலவில் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும்.

  11. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரான் எச்சரிக்கை - என்ன காரணம்?

    ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல்-கைமா நகரை கடுமையாக தாக்குவோம் என்று இரான் அச்சுறுத்தியுள்ளது.

    பாரசீக வளைகுடாவில் உள்ள இரண்டு தீவுகள் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் நிலவி வரும் நீண்டகால தகராறு காரணமாக இரான் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளது.

    டெலிகிராமில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், இரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர், "அபு மூசா (Abu Musa) மற்றும் கிரேட்டர் தன்ப் (Greater Tunb) தீவுகள் மீது ஏதேனும் புதிய ஆக்கிரமிப்பு நடந்தால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அந்த நகரம் மீது தாக்குதல் நடத்தப்படும்" என்று எச்சரித்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அந்தச் செய்தியில் ஆக்கிரமிப்பின் தன்மை குறிப்பிடப்படவில்லை, ஆனால் இந்த இரண்டு தீவுகளும் பல தசாப்தங்களாக இரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் நேரத்தில் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.

    இந்தத் தீவுகள் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ளன மற்றும் வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் இவ்விரண்டையும் உரிமை கோரி வருகிறது.

  12. ஹோர்மூஸ் நீரிணை வழியாக ஜப்பானியக் கப்பல்கள் செல்ல அனுமதிக்க தயாராக இருப்பதாக கூறும் இரான்

    ஜப்பானுடன் தொடர்புடைய கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்க இரான் தயாராக இருப்பதாக, இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஜப்பானின் 'கியோடோ நியூஸ்' (Kyodo News) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

    கியோடோ நியூஸ் அறிக்கையின்படி, இந்தத் தடையை தற்காலிகமாக நீக்குவது குறித்து ஜப்பான் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளதாக அராக்சி கூறினார்.

    அராக்சியின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஒரு ஜப்பானிய அரசு அதிகாரி கியோடோவிடம், "தடைகளை நீக்குவதற்கு மிகவும் பயனுள்ள வழி, இரானிய தரப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதே ஆகும்," என்று கூறினார்.

    அமெரிக்காவைச் சீண்டும் வகையிலான நடவடிக்கைகளைத் தவிர்க்க, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    ஜப்பானியக் கப்பல்கள் இந்த கடல் வழித்தடம் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும் கூட, அது தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வாக அமையாது என்றும் அவர் கூறினார்.

    அராக்சியின் அறிக்கைக்குப் பின்னாலுள்ள "உண்மையான உள்நோக்கத்தை" "கவனமாக மதிப்பிட வேண்டும்" என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் மற்றொரு அதிகாரி கியோடோவிடம் தெரிவித்தார்.

  13. இரான் மீது புதிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல்

    இரானியத் தலைநகரான தெஹ்ரானில், "இரானியத் தீவிரவாத ஆட்சியின் இலக்குகள்" மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் (IDF) தெரிவித்துள்ளன.

    இத்தாக்குதல் குறித்த மேலதிக விவரங்களை இஸ்ரேல் ராணுவம் இதுவரை வெளியிடவில்லை; மேலும், இதுகுறித்து இரானிடமிருந்தும் எவ்விதப் பதிலும் வெளியாகவில்லை.

    லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்தே, இரான் மீதான இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

    முன்னதாக, பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது. இத்தாக்குதல் நடைபெறுவதற்குச் சற்று முன்னதாகவே, பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு குடியிருப்புப் பகுதிகளிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அது எச்சரிக்கை விடுத்திருந்தது.

  14. இரான் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசியதாக கூறும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை

    இரான் தன்னை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், அவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் அந்த அச்சுறுத்தலைத் தடுக்க தனது பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

    "கடந்த சில நிமிடங்களில், உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கைபேசிகளுக்கு நேரடியாக ஒரு ஆரம்பகட்ட உத்தரவை வெளியிட்டுள்ளது," என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மக்கள் பொறுப்புடன் செயல்பட்டு, அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், இது உயிர்களைக் காப்பாற்றக்கூடும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வலியுறுத்தியுள்ளது.

    ஒரு எச்சரிக்கை கிடைத்தவுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று, புதிய அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.

    அவ்வாறு செய்யுமாறு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்போது மட்டுமே மக்கள் பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

  15. இரான் எண்ணெய் ஏற்றுமதிக்கான அமெரிக்க தடைகள் நீக்கம்

    தற்போது கடலில் உள்ள இரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும்.

    உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே அமெரிக்காவின் இந்த முடிவின் நோக்கமாகும்.

    அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இந்தக் குறுகிய கால அங்கீகாரம், சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உலகச் சந்தைகளில் நுழைய அனுமதிக்கும்" என்று கூறினார்.

    இந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு நிதிப் பலன்களையும் இரான் "பெறுவது கடினமாக இருக்கும்" என்று பெசண்ட் கூறினார்.

    "இந்த அங்கீகாரம், ஏற்கெனவே வந்துகொண்டிருக்கும் எண்ணெய்க்கு மட்டுமே கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் புதிய கொள்முதல் அல்லது உற்பத்தியை இது அனுமதிக்காது. இதன் விளைவாக, எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருக்க, இரானின் பீப்பாய்களையே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவோம்," என்று பெசண்ட் கூறினார்.

    போர் தொடங்கியதிலிருந்தும், மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான இரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்தும், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

    பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 112 டாலரை எட்டியுள்ளது;

  16. இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல் - புதிய தகவல்

    இராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் (Islamic Resistance) என்ற ஆயுதக் குழு, கடந்த 24 மணி நேரத்தில் 27 நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதில் “இராக் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எதிரி இலக்குகளுக்கு எதிரான" டஜன்கணக்கான ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களும் அடங்கும் என்றும் கூறியுள்ளது.

    பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க தூதரகத்தின் மீது மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது.

    அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் தூதரக மற்றும் தளவாட மையத்தின் மீது குறைந்தது மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்குத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    மூன்றாவது தாக்குதலுக்குப் பிறகு அந்தத் தளத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதை ஓர் அதிகாரி ஏஎஃப்பி-யிடம் உறுதிப்படுத்தினார்.

    சில நாட்களுக்கு முன்புதான், இராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது பல ஆளில்லா விமான மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; கடந்த வாரமும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது.

  17. வணக்கம் நேயர்களே!

    இன்று (21-03-2026) பிற்பகல் வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை சுருக்கமாக தொகுத்து தருவது நந்தினி வெள்ளைச்சாமி.

  18. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை கூட்டணியாக சந்திக்கும் ராமதாஸ் & சசிகலா

    நடக்கவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் மருத்துவர் ராமதாஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

    "தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்" என்று கூறிய ராமதாஸ், தங்கள் கூட்டணியில் இணைய விரும்புபவர்கள் தன்னிடமோ அல்லது சசிகலாவிடமோ அதுபற்றி விவாதிக்கலாம் என்று கூறினார்.

    "தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும் தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டணி செயல்படும்" என்று அவர்களின் கூட்டணி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  19. சிரியாவின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் கூறும் விளக்கம்

    சிரியாவின் அல்-சுவைதா பிராந்தியத்தில் உள்ள ட்ரூஸ் (Druze) மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சிரிய அரசாங்கத்துடன் தொடர்புடைய இலக்குகளைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதல்கள் தெற்கு சிரியாவில் நடத்தப்பட்டதாக ஐடிஎஃப் கூறுகிறது.

    "வியாழக்கிழமை இரவு தெற்கு சிரியாவில் உள்ள அரசாங்க ராணுவ முகாம்களில் உள்ள தலைமையகம் மற்றும் ஆயுதக் கிடங்குகளை ஐடிஎஃப் தாக்கியது," என்று இஸ்ரேலிய இராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    "அல்-சுவைதா பகுதியில் ட்ரூஸ் பொதுமக்கள் தாக்கப்பட்ட வியாழக்கிழமை சம்பவங்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சிரியாவில் உள்ள ட்ரூஸ் மக்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதை இஸ்ரேலிய ராணுவம் அனுமதிக்காது, அவர்களைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். தெற்கு சிரியாவின் முன்னேற்றங்களை ஐடிஎஃப் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது, அறிவுறுத்தல்களின்படி செயல்படும்." என்று கூறப்பட்டுள்ளது.

    இரானுடனான போருக்கு மத்தியில், இஸ்ரேல் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது, இப்போது சிரியா மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

    கடந்த ஆண்டிலும், ட்ரூஸ் சமூகத்தின் பாதுகாப்பைக் காரணம் காட்டி இஸ்ரேல் சிரியாவில் ராணுவத் தாக்குதல்களை நடத்தியது.

    ட்ரூஸ் சமூக மக்கள் யார்?

    ட்ரூஸ் மக்கள் சிரியா, லெபனான், இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் (Golan Heights) வாழும் ஒரு மத சிறுபான்மையினர் ஆவர். இவர்கள் அரபு மொழி பேசுபவர்கள். ட்ரூஸ் மதம் என்பது ஷியா இஸ்லாத்தின் ஒரு கிளையாகும், இது தனக்கென ஒரு தனித்துவமான அடையாளம் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது.

    இதைப் பின்பற்றும் சுமார் 10 லட்சம் மக்களில் பாதி பேர் சிரியாவில் வாழ்கின்றனர். அங்கு அவர்கள் மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ளனர். இஸ்ரேலில், ட்ரூஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவ சேவையில் பங்கேற்பதன் காரணமாக அந்நாட்டிற்கு விஸ்வாசமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

    இஸ்ரேலின் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின்படி, சுமார் 1,50,000 ட்ரூஸ் மக்கள் இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளிலும் வாழ்கின்றனர்.

  20. அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுத்தது ஏன்?

    அமெரிக்காவிற்கு சொந்தமான இரண்டு போர் விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கு அமெரிக்காவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது என இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே குறிப்பிட்டார்.

    அதேவேளை, இரானுக்கு சொந்தமான 3 கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வருகைத் தர அனுமதி கோரிய போதிலும், அதனையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்ததாக அவர் கூறுகின்றார்.

    அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரண்டு நாடுகளினாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

    இரானிய கப்பலுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என சிலர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

    ''இரானிய கப்பலுக்கு அனுமதி வழங்கியிருந்தால், தமது நாட்டின் ஒட்டு மொத்த நடுநிலைத் தன்மையும் சீர்குலைந்திருக்கும்'' எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

    ''இந்தப் பிரச்னையில் எமது தொடர்ச்சியான நிலைப்பாடு நடுநிலைத்தன்மை என்பதாகும். எமது தாய் நாட்டின் கௌரவம், நீதி தொடர்பான பிரச்னை மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலமே நாம் வென்றெடுக்க முடியும். எனவே, எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும், இந்த நடுநிலைத்தன்மை கை நழுவிப் போக நாம் இடமளிக்க மாட்டோம். ஆனால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில தரப்பினரும் நாம் குறிப்பிட்ட ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயற்படுவதாகவும், சில தீர்மானங்களைச் சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்றும் பல்வேறு கருத்துகளை முன்வைப்பதை நான் அறிவேன். அவை முற்றிலும் உண்மையற்றவை.'' எனவும் அவர் கூறினார்.

    ''இரானியக் கப்பல்கள் மார்ச் 09 மற்றும் 13 ஆம் தேதிகளில் இலங்கைக்கு வருகை தர பிப்ரவரி 26-ஆம் தேதி அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதே வேளை, அன்றைய தினம் மாலையில் அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை இலங்கையின் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது. எமது நாட்டின் நடுநிலைத்தன்மை குறித்து நாம் மிகத் தெளிவான முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் மோதல்களுக்கான அறிகுறிகள் தென்பட்டிருந்தன. எனவே, நாம் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை.'' என அநுர குமார திஸாநாயக்க கூறினார்.

Trending Now