மதுரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோதி, எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?

பட மூலாதாரம், X/Narendra Modi
தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக அமைத்துள்ள கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக கூட்டணி இன்னும் பிரசாரத்தை தொடங்கவில்லை. அதிமுக கூட்டணி தான் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. அதிமுக முதல் வெற்றி பெற்றது தென் மாவட்டத்தில் தான். வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சி அமைக்க தென் மாவட்ட மக்கள் உறுதுணையாக இருப்பார்கள். மோதி பிரதமராக ஆன உடன் இந்தியாவே வளர்ச்சி அடைந்திருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டுக்கு எதுவும் தரவில்லை என அவதூறான பிரசாரம் மேற்கொள்கிறார்கள். அதிமுக கொண்டு வந்த பல திட்டங்களை திமுக முடக்கிவிட்டது." என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, ''வெற்றிவேல், அனைவருக்கும் வணக்கம்'' என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். அதன் பிறகு தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்,
"பாண்டிய நாடு, வீரம் விளையும் மண். இந்த நிலத்திலிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரன் அழகுமுத்து கோன் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களின் பங்களிப்பை நினைவுகூர்கிறேன்," என்றார்.
"இங்கு வருவதற்கு முன்பாக நான் திருப்பரங்குன்றம் சென்றேன். அதே நேரம் எனது இதயம் கணத்தது. திமுக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், இறுதியில் வாய்மையே வெல்லும், முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்." என்று தெரிவித்தார்.
இந்தத் தேர்தல் மாநிலத்துக்கு ஒரு திருப்புமுனை தேர்தல் என்பதை மக்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்ட மோதி, ''திமுக வெளியேற்றப்பட்டாக வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை மக்கள் அறிவார்கள்'' என்றும் கூறினார்.
"2021-இல் 25 ஆண்டுகள் கழித்து திமுக முதல் முறையாக பெரும்பான்மை ஆட்சி அமைத்தது, ஆனால் அவர்கள் சரியான ஆட்சி வழங்கவில்லை. வாரிசு அரசியலை முன்னெடுத்தார்கள். ஏழைகளுக்கு பணியாற்ற மாட்டார்கள். மற்றவர்களையும் பணியாற்ற விடமாட்டார்கள். காங்கிரசும்-திமுகவும் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு திட்டங்களை கொண்டு வரவில்லை. ரயில்வே திட்டங்களுக்கு திமுக-காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட பாஜக ஆட்சியில் 8 மடங்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்டிஏ ஆட்சிக்கு வந்த உடன் நாங்கள் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவோம். திமுக பல ஊழல்களைச் செய்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸை 60 ஆண்டுகளாக விலக்கி வைத்தது. காங்கிரஸிடமிருந்து விடுதலை பெற்ற முதல் மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான்." என்றும் பேசினார்.



















