2003 இராக் போரில் இருந்து அமெரிக்காவின் இன்றைய இரான் போர் எந்த வகையில் வேறுபடுகிறது?

- எழுதியவர், கோர்டான் கொரேரா
- பதவி, பாதுகாப்பு ஆய்வாளர்
- வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்
2003ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி, இராக் அதிபர் சதாம் ஹுசைனின் சிலை ஒன்று பாக்தாத் நகரின் மையப் பகுதியில் கீழே இழுத்து வீழ்த்தப்பட்டது. மக்கள் முதலில் அந்தச் சிலையின் அடிப்பகுதியில் இருந்த உலோகப் பலகையை அகற்றினார்கள். பிறகு, ஒரு பெரிய சுத்தியலைக் கொண்டு அதன் பளிங்கு அடிப்பகுதியைத் தாக்கினர்.
சில இராக்கியர்கள் அந்தச் சிலையைத் தாங்களே கீழே இழுக்க முயன்றனர். அவர்கள் அந்தச் சிலையின் மீது ஏறி, அதன் கழுத்தைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டினர். ஆனால், அவர்களால் மட்டுமே அதை வீழ்த்த இயலவில்லை. இறுதியாக, அமெரிக்க படையினர் ஒரு கவச வாகனத்தைப் பயன்படுத்தி அச்சிலையைக் கீழே இழுக்க உதவினர்.
இந்தத் தருணம் ஆட்சி மாற்றத்தின், அதாவது சதாம் ஹுசைன் அரசின் வீழ்ச்சியின், ஒரு வலிமையான அடையாளமாக மாறியது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராக்கில் போரைத் தொடங்கி வெறும் 20 நாட்களே ஆகியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இராக்கிய தலைவரைக் கொல்லும் முயற்சியாக 'க்ரூஸ்' ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகளுடனும், 'தலைமைத்துவத்தை அழிக்கும் தாக்குதல்' முயற்சியுடனும் இந்தப் படையெடுப்பு தொடங்கியது.
சதாம் ஹுசைனின் சிலை வீழ்த்தப்பட்டு சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு. புஷ், கலிஃபோர்னியா கடற்கரைக்கு அருகே நின்றிருந்த ஓர் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலின் மேடையில் தோன்றினார். அவருக்குப் பின்னால், "பணி நிறைவுற்றது (Mission Accomplished)" என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பதாகை தொங்கிக் கொண்டிருந்தது. இருப்பினும், அந்தப் போர் முடிவடைவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது.
இராக் போரின் தாக்கம் இன்றும் உணரப்படுகிறது. குறிப்பாக இரானுடனான தற்போதைய மோதலில் அதன் எதிரொலி தெளிவாகத் தெரிகிறது. இராக் போர், விரைவிலேயே கட்டுப்பாட்டை மீறிச் சென்ற பல எதிர்பாராத சிக்கல்களுக்கும் நிகழ்வுகளுக்கும் வித்திட்டது.

பட மூலாதாரம், Gamma - Rapho via Getty Images
இந்தப் போர் பெரும் அழிவையும், உயிர் பலிகளையும் விளைவித்தது. 2003 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில், இராக்கில் போர் தொடர்பான வன்முறைகள் காரணமாக சுமார் 4,61,000 பேர் உயிரிழந்ததாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இப்போர் அமெரிக்காவுக்கு சுமார் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் செலவையும் ஏற்படுத்தியது.
இந்த மோதல் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் சூழலையே மாற்றியமைத்தது. அத்துடன், போரைத் தொடங்கிய நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையையும் இது குறைத்தது.
இன்று, அமெரிக்கா அந்தப் பிராந்தியத்தில் மற்றுமொரு "விருப்பப் போர்" (war of choice) என்று பலரால் அழைக்கப்படும் ஒரு மோதலைத் தொடங்கியுள்ளது. இந்த முறை இராக்கின் அண்டை நாடான இரானை எதிர்த்துப் போர் முன்னெடுக்கப்படுகிறது. இந்த இரு மோதல்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்பட்டாலும், இராக் போருக்குப் பிந்தைய காலத்தில் உலகம் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்பதையும், அப்போது நடந்த அதே தவறுகளைத் தவிர்க்க இயலுமா என்பதையும் சுட்டிக்காட்டும் வகையிலான முக்கியமான வேறுபாடுகளையும் பார்க்க வேண்டியுள்ளது.

பட மூலாதாரம், Gamma - Rapho via Getty Images
போரின் நோக்கம்
அமெரிக்கா இராக் மீது படையெடுக்க முடிவு செய்ததற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றில் சில அப்போது வெளிப்படையாக விவாதிக்கப்படவில்லை. இருப்பினும், ஒரு முக்கியக் குறிக்கோளாக, ஆட்சி மாற்றம், அதாவது இராக் தலைவர் சதாம் ஹுசைனை அதிகாரத்தில் இருந்து அகற்றுவது இருந்தது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சுற்றியிருந்த சிலருக்கு அந்தப் போர், 1991 வளைகுடா போரில் முடிக்கப்படாத வேலைகளைச் செய்வதாக இருந்தது. அந்தப் போரில், இராக் குவைத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஆனால், சதாம் ஹுசைன் இராக்கில் அதிகாரத்தில் இருந்தார்.
அதிபர் புஷ்ஷை பொறுத்தவரை, இந்தப் பிரச்னை தனிப்பட்டதாகவும் இருந்திருக்கலாம். அவரது தந்தை ஜார்ஜ் எச்.டபுள்யு. புஷ் 1991ஆம் ஆண்டில் இராக்கிற்கு எதிரான போரை வழிநடத்தினார். பிறகு, சதாம் ஹுசைனை படுகொலை செய்யச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
மனித உரிமை மீறல்கள் காரணமாக சதாம் ஹுசைனை நீக்குவது நியாயமானது என்றும் சிலர் நம்பினர். அவர் தனது சொந்த குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்திய வன்முறையை அவர்கள் சுட்டிக்காட்டினர். 1980களில் அவரது அரசாங்கம் குர்திஷ் மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது.
இந்த யோசனை தாராளவாத தலையீடு என்ற கொள்கையுடன் பொருந்தியது. இதை 1990களில் பிரதமர் டோனி பிளேரின் கீழ் பிரிட்டன் ஆதரித்தது. உதாரணமாக, கொசோவாவில் நடந்த மோதலின்போது மேற்கத்திய நாடுகள் பால்கனில் வன்முறையைத் தடுக்கத் தலையிட்டன. நாடு கடத்தப்பட்ட இராக்கியர்கள் பலரும் சதாம் ஹுசைனை வெளியேற்ற விரும்பினர். இதனால் அவர்களின் நாடு ஒரு புதிய எதிர்காலத்தைப் பெற முடியும் எனக் கருதினர்.
பெரும்பாலும் "நவ-பழமைவாதிகள்" அழைக்கப்படும் வாஷிங்டனில் உள்ள மற்றொரு குழு, இந்தப் போர் மத்திய கிழக்கை மறுவடிவமைப்பு செய்ய உதவுமென்று நம்பியது. அவர்கள் ஜனநாயகத்தை பரப்பவும் அமெரிக்காவுக்கு விரோதமான அரசுகளை அகற்றவும் விரும்பினர். பாக்தாத்திற்கு பிறகு, அடுத்த இலக்கு இரானாக இருக்கலாம் என்றும் சிலர் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
பின்னர் 2001இல் செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்தன. இந்தத் தாக்குதல்களில் கடத்தப்பட்ட விமானங்கள் உலக வர்த்தக மையத்தின் கோபுரங்கள், பென்டகன் மற்றும் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு மைதானம் ஆகியவற்றின் மீது மோதியதில் 2,977 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகு, வாஷிங்டனில் உள்ள சில கடும்போக்கு கொள்கை வகுப்பாளர்கள் அமெரிக்காவின் வலிமையைக் காட்டவும் எதிரிகளைத் தடுத்து அதன் சக்தியை மீட்டெடுக்கவும் விரும்பினர்.
அல்-கொய்தா நடத்திய தாக்குதல்கள் அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து சிந்தித்த விதத்தை மாற்றியது. தாக்குதல்களில் இராக் எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், அந்த நாடு விரைவில் அமெரிக்க கொள்கையின் முக்கிய மையமாக மாறியது.
அதே நேரத்தில், 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்கா ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் தாலிபன்களை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருந்தது. இந்த வெற்றி, அமெரிக்க ராணுவத்தால் என்ன சாதிக்க முடியும் என்பது குறித்தான நம்பிக்கையை வாஷிங்டனில் அதிகரித்தது.
இருப்பினும், இறுதியில் போருக்கு பொதுவாகக் கூறப்பட்ட முக்கியக் காரணம், இராக்கின் பேரழிவு ஆயுதங்களாகும். அணு ஆயுதம், ரசாயன ஆயுதம் மற்றும் உயிரியல் ஆயுதங்களுக்கான சாத்தியமான திட்டங்கள் மற்றும் ஏவுகணைகள் இதில் அடங்கும். அமெரிக்கா, பிரிட்டன் அரசுகளைப் பொறுத்தவரை, இந்த அச்சுறுத்தலை முன்னிலைப்படுத்துவது ராணுவ நடவடிக்கைக்கு தங்கள் குடிமக்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவதற்கான எளிய வழி. இராக் ஆயுதங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறுவதாக சர்வதேச அளவில் வாதிடவும் இது அவர்களுக்கு உதவியது.
ஆனால், சில அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஆயுதங்கள் படையெடுப்புக்கான உண்மைக் காரணம் இல்லை. அந்த நேரத்தில் சி.ஐ.ஏ-வின் இராக் செயல்பாட்டுக் குழுவுக்குத் தலைமை தாங்கிய லூயிஸ் ரூடா பின்னாளில், "சதாம் ஹுசைனிடம் ஒரு ரப்பர் பேண்ட் மற்றும் ஒரு காகித கிளிப் இருந்திருந்தால்கூட நாங்கள் இராக் மீது படையெடுத்து இருப்போம். 'ஓ, அவர் உங்கள் கண்ணைப் பிடுங்கிவிடுவார், அவரைப் பிடுங்கிவிடுவோம்' என்று நாங்கள் கூறியிருப்போம்," என்று கூறினார்.
இரான் தாக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இரான் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் பல விதமான காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பல குறிக்கோள்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரானின் ராணுவ பலத்தைக் குறைப்பது, பேரழிவு ஆயுதங்களை உருவாக்குவதில் இருந்து அதைத் தடுப்பது, இரானுடன் அதிக ஒத்துழைப்பு நல்கும் வகையில் அந்நாட்டு அரசாங்கத்தை மாற்றுவது, தங்கள் அரசின் கீழ் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் இரானிய மக்களுக்கு ஆதரவளிப்பது ஆகியவை இந்தக் குறிக்கோள்களில் அடங்கும்.
பல வகைகளில், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னரே இந்தச் சூழல் மாறத் தொடங்கியது. அந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் ஆபத்துகளை மதிப்பிடும் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டது. இரான் மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுக்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது. இந்த மாற்றமானது, இரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிப்பதை அமெரிக்காவுக்கும் எளிதாக்கியது.
இருப்பினும், இந்த முறை ராணுவ நடவடிக்கைகளுக்கான மேற்கூறிய பல்வேறு காரணங்களை அமெரிக்க அரசாங்கம் தெளிவாக விளக்கவோ அல்லது அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்தவோ முயலவில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிபர் டிரம்ப் பேசும் சூழல் மற்றும் அவர் யாரிடம் பேசுகிறார் என்பதைப் பொறுத்து, வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமான விளக்கங்களை அளித்துள்ளார்.
இந்தப் போருக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க மக்களை இணங்க வைப்பதற்கான பெரிய அளவிலான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 2003ஆம் ஆண்டில் இராக் மீது படையெடுப்பதற்கு முன்னதாக, அமெரிக்க அரசாங்கம் பல மாதங்களாகத் தனது காரணங்களை விளக்கியதுடன், பொது மக்களின் ஆதரவைப் பெறவும் தீவிரமாக முயன்றது.
அதேபோன்று, இந்த முறை ஐ.நா சபையின் வாயிலாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவும் அமெரிக்கா முயலவில்லை. 2003ஆம் ஆண்டில், இராக்கிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை எந்தெந்த நாடுகள் ஆதரிக்கும் என்பது குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்றன.
ஆனால், தற்போது இந்த முடிவை எடுப்பதில் ஐ.நா சபையோ அல்லது சர்வதேச சட்டங்களோ எவ்வித பங்கையும் வகித்ததாகத் தெரியவில்லை. உலகளாவிய சூழல் எவ்வளவு மாறுபட்டதாக மாறியுள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. மரபார்ந்த சர்வதேச அமைப்பு பலவீனமடைந்துள்ள நிலையில், எதையும் கணிக்க முடியாத இயல்புடைய ஒரு தலைவர், போருக்கான காரணங்களைத் தெளிவாக விளக்குவதற்கோ அல்லது ஒரே சீரான, உறுதியான நியாயத்தை முன்வைப்பதற்கோ குறைந்த அளவிலான அழுத்தத்தையே உணர்கிறார்.
பிரிட்டன் மற்றும் நட்பு நாடுகளின் பங்கு
கடந்த 2003ஆம் ஆண்டில், அமெரிக்கா இராக்கில் தனியாக போருக்குச் செல்லவில்லை. அதற்குப் பல நட்பு நாடுகள், குறிப்பாக பிரிட்டன் ஆதரவளித்தன.
அந்த நேரத்தில், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யு. புஷ்ஷை தீவிரமாக ஆதரித்தார். போர் தொடங்குவதற்கு முன்பு, 2002 கோடையில் புஷ்ஷுக்கு ஒரு தனிப்பட்ட குறிப்பை எழுதினார். அதில் "என்ன நடந்தாலும்" அவருடன் நிற்பேன் எனக் கூறினார்.
அமெரிக்க அரசுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதன் மூலம் பிரிட்டன் அமெரிக்க முடிவுகளில் தாக்கம் செலுத்த முடியுமென்று பிளேர் நம்பினார். பின்னர், படையெடுப்பின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு நேர்காணலில் என்னிடம் பேசிய அவர், "நான் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனாக இருந்தாலும் சரி, ஜார்ஜ் டபுள்யு. புஷ்ஷாக இருந்தாலும் சரி, முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க அவர்கள் முதலில் அழைக்கும் நபர் பிரிட்டிஷ் பிரதமரையே என்பது தெளிவாக இருந்தது," என்று கூறினார்.

பட மூலாதாரம், Reuters
இருப்பினும், பிளேரின் நெருங்கிய சகாக்கள் சிலர்கூட அவர் அமெரிக்காவை எவ்வளவு வலுவாக ஆதரித்தார் என்பது குறித்துக் கவலைப்பட்டனர். பின்னர் அக்காலகட்டத்தில் அவரது வெளியுறவுச் செயலாளராக இருந்த ஜேக் ஸ்ட்ரா, "என்ன நடந்தாலும்" ஆதரவளிப்பதாக உறுதியளித்த பிளேரின் செய்தி "ஒரு நல்ல யோசனை இல்லை" என்று கூறினார்.
சில விமர்சகர்கள் பிளேரின் வலுவான ஆதரவுக்கு ஈடாக உண்மையில் அதிக செல்வாக்கைப் பெற்றாரா என்றும் கேள்வி எழுப்பினர். போருக்குச் செல்வதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலைப் பெற முயலுமாறு வாஷிங்டனை அவர் வற்புறுத்தினார். ஆனால், அமெரிக்கா இந்த முயற்சியை வலுவாகத் தொடரவில்லை, இறுதியில் அது தோல்வியடைந்தது.
போரில் இருந்து பின்வாங்க பிளேருக்கு ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். போர் சரியான முடிவு என்று தான் நம்புவதாக அவர் கூறினார். கடந்த 2003இல் அதுகுறித்து விளக்கிய அவர், "அந்த நேரத்தில் பிரதமராக இந்த முடிவுகளை எடுக்க வேண்டிய இடம் அதுதான்," என்று கூறினார்.
"அரசியல் ரீதியாக நான் இருந்த கடினமான சூழ்நிலைக்காக அவர்கள் வருத்தப்பட்டதால் எனக்கு வெளியேறுவதற்கான வழியை வழங்கினர். ஆனால், அது உறவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியில், பிளேருக்கு அரசியல் ரீதியாக ஏற்பட்ட விலை மிக அதிகமாக இருந்தது. போருக்கு முக்கியக் காரணம் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருந்தன என்பதாகும். ஆனால், அந்த ஆயுதங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது பிளேரின் நற்பெயரைச் சேதப்படுத்தியது. அரசியல் தலைவர்கள் மீதான பொது மக்களின் நம்பிக்கையைக் குறைத்தது.
ஜேக் ஸ்ட்ரா பின்னர் இதன் விளைவு பற்றிச் சிந்தித்தார். "இது பொது வாழ்வில் நம்பிக்கையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தியது. அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை."
ஜார்ஜ் டபுள்யு. புஷ்ஷின் அதிபர் பதவியின் இறுதி ஆண்டுகளிலும் இராக் போர் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் மக்கள் அவரது தலைமையை மதிப்பிடும் விதத்திலும் இது தாக்கம் செலுத்தியது. இது அமெரிக்க அரசியலையும் மாற்றியது. ஒபாமா அதிபரானபோது, இதேபோன்ற ராணுவ தலையீடுகளைத் தவிர்க்க விரும்பினார். சுவாரஸ்யமாக, டொனால்ட் டிரம்பும் இதுபோன்ற போர்களைத் தவிர்க்க விரும்புவதாகக் கூறினார்.
இரானுடனான இன்றைய நிலைமை வித்தியாசமானதாகத் தெரிகிறது. இம்முறை, அமெரிக்கா முக்கியமாக பிரிட்டன் அல்லது பிற நட்பு நாடுகளுடன் அல்லாமல் இஸ்ரேலுடன் இணைந்து வேலை செய்கிறது.
தற்காலிக பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர், வாஷிங்டனில் இருந்து கொஞ்சம் இடைவெளியைக் கடைபிடித்தார். முதலில், அமெரிக்க படைகள் ஆரம்பகட்ட தாக்குதலுக்கு பிரிட்டிஷ் ராணுவ தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்துவிட்டார். பின்னர், அவற்றை "தற்காப்பு" நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதித்தார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
இராக் போரினால் ஏற்பட்ட அரசியல் சேதத்தை தொழிலாளர் கட்சி இன்னும் நினைவில் வைத்திருப்பதால், இந்த முடிவு ஓரளவுக்கு கணிக்கப்படலாம். அதிபர் டிரம்ப் மீது பிரிட்டன் உண்மையில் எவ்வளவு செல்வாக்கைக் கொண்டிருக்க முடியும் என்பதில் இருக்கும் சந்தேகங்களையும் இது பிரதிபலிக்கக்கூடும்.
இப்போது ஒரு பெரிய கேள்வி என்னவெனில், பிரிட்டன் - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்படுகிறதா என்பதுதான். பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இன்னும் வலுவாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இருப்பினும், அந்த நெருக்கம் முக்கியமாக, வழக்கமான பழக்கத்தில் இருந்து தொடர்வதாக சிலர் நம்புகிறார்கள். அதேநேரத்தில், அமெரிக்கா படிப்படியாக அதன் உலகளாவிய மூலோபாயத்தை மாற்றி, பிரிட்டன் நீண்ட காலமாக ஆதரித்து வரும் சர்வதேச அமைப்பைப் பலவீனப்படுத்துகிறது.
கடந்த காலத்தில், சில பிரிட்டிஷ் தலைவர்களும் அமெரிக்க போர்களில் இணைய வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளனர். உதாரணமாக, ஹேரோல்ட் வில்சன், வியட்நாம் போரில் இருந்து பிரிட்டனை விலக்கி வைத்தார். ஆனால், பலரும் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை முந்தைய கருத்து வேறுபாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது எனக் கருதுகின்றனர்.
அடுத்தது என்ன?
இராக் போரின் பாரம்பரியத்தை, வாஷிங்டனில் உள்ள தலைவர்கள் இன்றைய இரானுடனான மோதலைப் பற்றிப் பேசுவதில் தெளிவாகக் காணலாம். தற்போதைய நிலைமை இராக்கில் நடந்ததைவிட வேறுபட்டது என்பதை அவர்கள் அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். உதாரணமாக, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இரான், இராக் போன்றதல்ல என்றும், இந்த மோதல் "நீடித்த போராக" மாறாது என்றும் கூறியுள்ளார்.
ஒரு முக்கியமான வேறுபாடு என்னவெனில், அமெரிக்கா ஆட்சி மாற்றம் பற்றிப் பேசினாலும், அது இரானுக்கு தரைப் படைகளை அனுப்பவில்லை. 2003ஆம் ஆண்டில், இராக் படையெடுப்பின்போது, சுமார் 150,000 துருப்புகள் தரையில் நிறுத்தப்பட்டன. இது இராக் அதிபர் சதாம் ஹுசைனை அதிகாரத்தில் இருந்து விரைவாக அகற்ற அமெரிக்காவுக்கு உதவியது. அவரைக் கொல்வதற்கான முதல் முயற்சியில் சதான் ஹுசைன் உயிர் பிழைத்தார், ஆனால் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இன்று, இராக்கில் செய்தது போல அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்புவதை அமெரிக்கா தவிர்க்க விரும்புகிறது. ஆனால், இது அதனால் செய்யக்கூடியதைக் கட்டுப்படுத்துகிறது. தரையில் சண்டையிடும் வலுவான கிளர்ச்சிக் குழு இல்லாவிட்டால், வான்வழித் தாக்குதல்களை மட்டுமே பயன்படுத்தி ஓர் அரசாங்கத்தை அகற்றுவது மிகக் கடினம்.
சிலர் இரானிய அரசுக்கு எதிராக குர்திஷ் ஆயுதக்குழுக்களை ஆதரிக்கப் பரிந்துரைத்துள்ளனர். 2003ஆம் ஆண்டு இராக் போரின்போது குர்துக்கள் உதவினர். இருப்பினும், அவர்கள் மிகப்பெரிய அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகளுடன் இணைந்து போரிட்டனர்.

பட மூலாதாரம், Reuters
கடந்த 2003இல் விரைவான ராணுவ வெற்றிக்குப் பிறகு, இராக்கில் நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது. அமெரிக்க படைகளுக்கு எதிராக கிளர்ச்சிக் குழுக்கள் போராடி உள்நாட்டுப் போர் உருவாகி வருவதால், நாடு நீண்ட ஆக்கிரமிப்பைச் சந்தித்தது. மீண்டும் இதேபோன்ற சூழ்நிலையில் சிக்குவதைத் தவிர்க்க அமெரிக்க அரசு இப்போது விரும்புகிறது.
இருப்பினும், இது ஒரு சிக்கலை உருவாக்குகிறது. சில அமெரிக்க குறிக்கோள்களை, குறிப்பாக ஆட்சி மாற்றத்தை, ஆழமான ராணுவ உறுதிப்பாடு இல்லாமல் அடைவது கடினமாக இருக்கலாம். அமெரிக்கா இரானின் ராணுவத்தை பலவீனப்படுத்தலாம் அல்லது அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம். ஆனால், ஆட்சியை முழுமையாக மாற்றுவதற்கு அதிக ஈடுபாடு தேவைப்படலாம்.
இராக் போருக்கும் தற்போதைய மோதலுக்கும் இடையிலான மற்றோர் ஒற்றுமை, சண்டைக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதற்கான திட்டமிடல் இல்லாதது. 2003ஆம் ஆண்டில், அமெரிக்க அதிகாரிகள் இராக்கின் எதிர்காலம் குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தனர். அதோடு, தெளிவான திட்டத்தில் ஒருபோதும் முழுமையாக உடன்படவில்லை. இதன் விளைவாக, போர் முடிந்த பிறகு நாட்டை ஆள்வதற்குச் சிறிய அளவிலான ஏற்பாடுகளே இருந்தன.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்தத் தவறு குறித்த தனது பார்வையை விளக்கினார். அப்போது அவர், "இராக்கியர்களுக்காக ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க முயன்றதில் தவறு நிகழ்ந்தது. நாம் இராக்கியர்களிடம் 'வாழ்த்துகள், உங்கள் சொந்த அரசாங்கத்தை நீங்களே அமைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறியிருக்க வேண்டும்" என்று கூறினார்.
இராக்கில் இருந்து தொடங்கி, மத்திய கிழக்கு முழுவதிலும் ஜனநாயகத்தைப் பரப்புவதற்கு அமெரிக்கா தீவிரமாக முயல வேண்டுமென நம்பிய மற்றவர்களின் கருத்துகளில் இருந்து இந்தக் கருத்து மாறுபட்டிருந்தது.
இன்று, போருக்குப் பிந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இராக் மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. அதோடு, சதாம் ஹுசைன் இப்போது அதிகாரத்தில் இல்லையென்பது பலருக்கும் நிம்மதியை அளித்துள்ளது. ஆனால், அந்தப் படையெடுப்பின் பரந்த நோக்கங்கள் எதிர்பார்த்தவாறு நிறைவேறவில்லை. சிலர் கணித்திருந்ததைப் போல, மத்திய கிழக்கு முழுவதிலும் ஜனநாயகம் பரவவில்லை.
உண்மையில், அந்தப் படையெடுப்பால் அதிகம் பயனடைந்த தரப்புகளில் ஒன்று இரான். தனது முதன்மைப் போட்டியாளரான சதாம் ஹுசைன் அகற்றப்பட்ட நிலையில், இராக்கிலும் அந்தப் பிராந்தியத்தின் பிற பகுதிகளிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்த இரானால் முடிந்தது. இந்தப் போரானது பிரிட்டன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரிக்கவும் காரணமாக அமைந்தன.
போர்கள் பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதையும், தலைவர்கள் தொடக்கத்தில் திட்டமிட்டதில் இருந்து அதன் இறுதி விளைவு முற்றிலும் மாறுபட்டதாக அமையக்கூடும் என்பதையும் இந்த அனுபவம் உணர்த்துகிறது.

பட மூலாதாரம், Reuters
ஒருங்கிணைந்த திட்டம் இல்லை
இராக், இரான் ஆகிய இரண்டுமே மிகவும் வேறுபட்ட நாடுகள். ஆனால், இராக் போரில் இருந்து பெறப்பட்ட சில படிப்பினைகள் இன்றும் பயனுள்ளதாக இருக்கலாம்.
தற்போது, அமெரிக்கா இரானில் என்ன சாதிக்க விரும்புகிறது அல்லது நாட்டிற்கு எத்தகைய எதிர்காலத்தைக் கொடுக்க விரும்புகிறது என்பதற்கான விரிவான திட்டத்தைக் கொண்டுள்ளது என்பதற்கான தெளிவான சான்றுகள் எதுவுமில்லை. அதற்கு மாறாக, தற்போதைய அணுகுமுறை நெகிழ்வுத்தன்மையை சார்ந்திருப்பதாகத் தெரிகிறது. இது அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் வெற்றியாகக் காட்டுவதைத் தேர்வு செய்து, பின்னர் தனது சொந்த "இலக்குகள் அடையப்பட்டன" என்ற தருணத்தை உருவாக்குவதற்கு அனுமதிக்கிறது.
உதாரணமாக, இரானின் ஏவுகணை அமைப்புகள் மற்றும் கடற்படைகளை பலவீனப்படுத்துவது போதுமானது என்றும், ஆட்சி மாற்றத்தை இரானிய மக்களே மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் பின்னர் கூறலாம். சில நேரங்களில் ஆட்சி மாற்றத்தை விரும்புவது பற்றி அவர் பேசியிருந்தாலும்கூட இப்படி நடக்கலாம்.
அப்படி நடந்தால், இரானின் தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க முடியும். ஆனால் பலவீனமான, விரோதமான நிலையில் இருக்கும். இந்த நிலைமை 1991 வளைகுடா போருக்குப் பிறகு நடந்ததைப் போன்றதாக இருக்கும். அந்தப் போரில், சதாம் ஹுசைன் குவைத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், பாக்தாத்தில் ஆட்சியில் இருந்தார். இது பல வருட பதற்றம், அவ்வப்போது வான்வழித் தாக்குதல்கள், பேரழிவு ஆயுதங்கள் குறித்த அச்சங்கள் மற்றும் இறுதியில் 2003இல் மற்றொரு போருக்கு வழிவகுத்தது.

இராக்கில் இருந்து கிடைத்த ஒரு முக்கியமான பாடம் என்னவெனில், ஒரு போரின்போது ஓர் அரசாங்கத்தை அழிப்பது, பின்னர் ஒரு நிலையான நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதைவிட எளிதானது. இரானிய அரசின் சில பகுதிகள் தற்போதைய மோதலால் சேதமடைந்து வருகின்றன.
இந்தப் போர் அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் தங்கள் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்துகிறது. பிரிட்டன் போன்ற நாடுகள், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பல இரானுடன் தொடர்புடைய தாக்குதல்களை எதிர்கொண்டன. அவை உண்மையில் எவ்வளவு பாதுகாப்பானவையாக உள்ளன என்பதை மறுபரிசீலனை செய்கின்றன.
அமெரிக்காவுக்கு அரசியல் விளைவுகளும் ஏற்படலாம். மோதலின் பொருளாதார விளைவுகள் அதிபர் டிரம்ப் எதிர்பார்க்காத வழிகளில் பரவக்கூடும். இது உள்நாட்டு அரசியலைப் பாதிக்கலாம்.
ராணுவ தலையீடுகளைத் தொடங்க முடிவு செய்யும்போது தலைவர்கள் பணிவுடன் இருக்கவேண்டும் என்பது கடந்த காலப் போர்களில் இருந்து கிடைத்த ஒரு முக்கியப் பாடம். போர்களைக் கணிப்பது கடினம், அவற்றின் முடிவுகளும் நீண்டகால தாக்கமும் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும்.
பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 'சாதிய பாகுபாடு' நிலையில் மாற்றம் உள்ளதா? உங்கள் அனுபவம் மற்றும் கருத்துகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












