நேரலை, காரைக்குடியில் ப.சிதம்பரம் அலுவலகம் மீது பாட்டில் குண்டு வீச்சு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. காரைக்குடியில் ப.சிதம்பரம் அலுவலகம் மீது பாட்டில் குண்டு வீச்சு

    காரைக்குடியில் ப.சிதம்பரம் அலுவலகம் மீது பாட்டில் குண்டு வீச்சு

    காரைக்குடியில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அலுவலகம் மீது நள்ளிரவில் பாட்டில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.

    காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு முதல் வீதியில் ப.சிதம்பரம் எம்.பி மற்றும் அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். காலையில் காவலாளி பார்த்தபோது, பாட்டில்கள் சிதறி கிடந்துள்ளன.

    இது குறித்து எம்.பி., அலுவலக உதவியாளர் செந்தில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை ஆய்வில் ப.சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்திருக்கும் தெரு பகுதியில் அவரது அலுவலகத்தை நோக்கியிருந்த ஒரு சி.சி.டி.வி., கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அப்பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். தகவல் அறிந்த சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    சமீபத்தில் வார்த்தைப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க.- காங்கிரஸ் இடையே சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு இறுதியானதில் ப.சிதம்பரம் முக்கிய பங்கு வகித்தார். இது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி மோதல் எதிரொலியாக நடந்திருக்குமா என்று காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

    அத்துடன்,அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட இரான் உச்ச தலைவர் காமனெயி குறித்த கார்த்தி சிதம்பரம் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. காரைக்குடியில் அவருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  2. 'ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி' - அமெரிக்கா

    ஊடக செயலாளர் கரோலின் லெவிட்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஊடக செயலாளர் கரோலின் லெவிட்

    இரானுடனான தற்போதைய மோதலுக்கு மத்தியில், எரிசக்தி விநியோகத்தை பராமரிக்க, அமெரிக்கா தற்காலிகமாக இந்தியாவுக்கு ஏற்கெனவே கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதித்துள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஊடக செயலாளர் கரோலின் லெவிட் இந்த தகவலை தெரிவித்தார்.

    “இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளிகள் பொறுப்பான அணுகுமுறையைக் காட்டியதாலும், ரஷ்ய எண்ணெயை வாங்குவதை முன்பே நிறுத்திவிட்டதாலும் அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் தேசிய பாதுகாப்பு குழு இந்த முடிவை எடுத்ததாக” அவர் கூறினார்.

    "இரான் நெருக்கடியால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தற்காலிக இடைவெளியை நிரப்ப நாங்கள் இப்போது முயற்சிக்கிறோம், தற்காலிகமாக அவர்கள் (இந்தியா) ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதித்துள்ளோம்" என்று லெவிட் கூறினார்.

    இந்த ரஷ்ய எண்ணெய் ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்டு கடலில் நிற்பதாகவும் அவர் கூறினார். எனவே, இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே, இது ரஷ்ய அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  3. வணக்கம் நேயர்களே!

    இன்று (11-03-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் முக்கிய செய்திகளை தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி

  4. இரானில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் எத்தனை பேர்?

    இரான்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் நடைபெற்று வரும் போரில் தற்போது வரை 1300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது.

    பிபிசி அரேபிய மொழி சேவையின்படி, அமெரிக்க-இஸ்ரேலிய வான் மற்றும் ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததோடு சுமார் 1,332 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இரான் தூதர் தெரிவித்துள்ளார்.

    "206 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,332 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 193 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்," என இரானிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஃபாடமா மொஹாஜெரானி கூறியுள்ளார்.

    "கொல்லப்பட்டவர்கள் இளைய பெண் எட்டு மாத குழந்தை, காயமடைந்தவர்களில் இளைய பெண் நான் மாத குழந்தை," என்றும் அவர் குறிப்பிட்டார்.

    செவ்வாய்கிழமை காலை வரை கிடைத்த தகவலின்படி, போர் தொடங்கியதில் இருந்து 52 சுகாதார மையங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

  5. இரானில் இன்று 'பெரிய தாக்குதல்' - அமெரிக்கா

    இரானில் இன்று ஒரு பெரிய தாக்குதல் - அமெரிக்கா

    அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இன்று இரானில் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியதுடன், இரானின் புதிய அதி உயர் தலைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். '

    'இரான் மீது இன்று ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படும். உளவுத்துறை எப்போதும் இல்லாத அளவுக்குத் துல்லியமாகவும் சிறப்பாகவும் உள்ளது" என்றார்.

    இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி காயமடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,''அணு ஆயுதங்களைத் தொடர வேண்டாம் என்ற டிரம்பின் எச்சரிக்கையை மொஜ்தபா காமனெயி ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்'' என கூறிய அவர், மொஜ்தபா காமனெயி காயமடைந்தது குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை

  6. கோவை பள்ளி மதிய உணவில் பல்லி: 44 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு

    கோவை

    கோவையில் அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    கோவை கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்தது தெரியவந்தது. பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட, 44 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு நடத்தினார்.

    மொத்தம் 44 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் செய்தியாளர்களிடம், ''உணவில் பல்லி விழுந்த சம்பவத்தில் மாணவர்களை 10 மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்''" என்றார்.

    கோவை
    படக்குறிப்பு, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்

    உணவில் பல்லி விழுந்ததாகச் சொல்லப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    "அங்குள்ள உணவுக் கூடத்தில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.இது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். விசாரணை நடத்தப்படுகிறது." என்று தெரிவித்தார்.

    முன்னதாக, குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்குள் நுழைய முயன்றபோது அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  7. "எண்ணெய் விலை உயர்வுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் தான் காரணம்" - இரானிய வெளியுறவு அமைச்சர்

    இரான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (கோப்புப் படம்)

    அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இந்த விவகாரத்தில் தங்களுக்கு 'கசப்பான அனுபவம்' இருந்ததாக தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க தொலைக்காட்சியான பிபிஎஸ் நியூஸிற்கு அளித்த பேட்டியில், இந்தப் போர் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் இரானை தொடர்பு கொண்டார்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்குப் பதிலளித்த அவர், "இப்போது பேச்சுவார்த்தை மேசையில் முடிவு எடுக்கப்படும் என நான் நினைக்கவில்லை. அமெரிக்கர்களுடன் பேசுவதில் இரானுக்கு 'மிகவும் கசப்பான அனுபவம்' உள்ளது." என்றார்.

    "அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கு மனதில் எந்த இறுதி இலக்கும் இருப்பதாக தெரியவில்லை. தற்போது வரை அவர்களின் அனைத்து நோக்கங்களையும் அடைய அவர்கள் தவறிவிட்டனர்." என்றும் குறிப்பிட்டார்.

    அதி உயர் தலைவராக மொஜ்தபா காமனெயியின் நியமனம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஆயதுல்லா அலி காமனெயியின் மகனின் நியமனம் என்பது அவர் தந்தையின் ஆட்சி தொடர்கிறது என்பதைக் குறிக்கும், மேலும் இது நிலைத்தன்மையை வழங்குகிறது." என்று கூறினார்.

    கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது பற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அராக்சி, "எண்ணெய் விலை உயர்வு எங்களின் தவறு அல்ல, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்புதான் அதற்கு காரணம், நாங்கள் அதற்கு பொறுப்பல்ல." என்றார்.

    ஹோர்முஸ் நீரிணையை இரான் மூடவில்லை என்று கூறும் அராக்சி போக்குவரத்தை தாங்கள் தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

  8. இந்திய வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு அபராதம் விதித்த ஐசிசி - பின்னணி என்ன?

    கிரிக்கெட், ஐசிசி, அர்ஷ்தீப் சிங்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நடத்தை விதிகளை மீறியதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு போட்டிக்கான சம்பளத்தில் 15% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    நடத்தை விதிகளின் பிரிவு 2.9-ஐ அர்ஷ்தீப் சிங் மீறியதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அந்த பிரிவின்படி, "ஒரு சர்வதேச போட்டியின்போது மற்ற வீரர்களை நோக்கி நியாயமற்ற மற்றும் ஆபத்தான முறையில் பந்து அல்லது வேறு எந்த கிரிக்கெட் உபகரணத்தையும் எறிவது விதிமீறல் ஆகும்."

    டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் 11வது ஓவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தன்னை நோக்கி வந்த பந்தை தடுத்து கையில் எடுத்த அர்ஷ்தீப் அதனை எறிந்தபோது அது டேரில் மிட்செலின் பேடில் பட்டது.

    15% அபராதத்தோடு அர்ஷ்தீப் சிங்கிற்கு 1 டீமெரிட் புள்ளியும் சேர்க்கப்பட்டது.

  9. "போர் எப்போது முடியும் என்பதை இரான் தீர்மானிக்கும்" - புரட்சிகர காவல் படை

    இரான், அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) எதிர்வினை ஆற்றியுள்ளது.

    இரானுடன் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் எனக் கூறிய டிரம்ப் தேதி எதையும் குறிப்பிடவில்லை.

    போர் எப்போது முடியும் என்பதை இரான் முடிவு செய்யும் என புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் 'ஒரு லிட்டர் எண்ணெய் கூட இந்தப் பிராந்தியத்திலிருந்து ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படாது' என ஐஆர்ஜிசி தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக பதற்றம் நிலவுவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. உலகின் 20% எண்ணெய் இந்த நீர் வழித்தடம் வழியாக செல்கிறது.

  10. நீதித்துறை பற்றி பாடம் - மன்னிப்பு கேட்ட என்.சி.இ.ஆர்.டி

    உச்ச நீதிமன்றம்

    பட மூலாதாரம், Getty Images

    கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) புத்தகத்தில் நீதித்துறையின் ஊழல் என்கிற பாடம் இடம்பெற்றதற்கு அவ்வமைப்பு மன்னிப்பு கேட்டுள்ளதோடு அந்த புத்தகம் திரும்பப் பெறப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

    இந்தப் பாடத்திற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து என்.சி.இ.ஆர்.டி மன்னிப்பு கோரி அனைத்து புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டதாக அறிவித்துள்ளது.

    என்.சி.இ.ஆர்.டி இன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "என்.சி.இ.ஆர்.டி சமீபத்தில் வெளியிட்ட 'சமூகத்தை ஆராய்தல்: இந்தியா மற்றும் அதற்கு அப்பால்' என்கிற எட்டாம் வகுப்பு புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் "நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு' என்கிற தலைப்பில் நான்காவது அத்தியாயம் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த புத்தகம் திரும்ப பெறப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளது.

  11. வணக்கம் நேயர்களே!

    இன்று (10-03-2026) இரவு வரையிலும் நேரலைப் பக்கத்தில் முக்கிய செய்திகளை தொகுத்து அளிப்பது மோகன்.

  12. சமையல் எரிவாயு தட்டுப்பாடு- அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்

    சமையல் எரிவாயு தட்டுப்பாடு- அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்

    பட மூலாதாரம், ANI

    சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ECA) அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரைப் பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமலானதால் அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் சமையல் எரிவாயு உற்பத்தியை (எல்பிஜி) அதிகரிக்க வேண்டும்.

    இந்த உத்தரவின்படி, குறிப்பிட்ட துறைகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம், போக்குவரத்துக்கான சிஎன்ஜி (CNG) உள்ளிட்டவை இந்தத் துறைகளில் அடங்கும்.

    “எல்பிஜி தயாரிக்க பயன்படும் ப்ரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.”

    “வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இயற்கை எரிவாயு உற்பத்தியாளர், இறக்குமதியாளர், சந்தைப்படுத்துபவர் அல்லது விநியோகஸ்தர் ஒவ்வொருவரும் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, ஒதுக்கீடு, வழங்கல் மற்றும் நுகர்வு தொடர்பான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  13. சமையல் எரிவாயு தட்டுப்பாடு - தமிழ்நாட்டில் ஓட்டல்கள் மூடப்படுமா?

    தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடப்படும் அபாயமா?

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகலாம் என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

    வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடசுப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஓட்டல்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். தற்போது பல ஓட்டல்களில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கேஸ் சிலிண்டர்கள் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் படிப்படியாக ஓட்டல்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மத்திய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விநியோகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். கேஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டால், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கும் பெரும் சிரமம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

    "தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஓட்டல்கள் செயல்படுகின்றன. ஓட்டல் துறையில் மட்டும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஓட்டல்கள் மூடப்பட்டால், பெருமளவில் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதுடன் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படும்" என அவர் எச்சரித்தார்.

    ஓட்டல்கள் வெளியில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்றும், தொழில்துறை கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஓட்டல்களுக்கு சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு மானியம் வழங்கி அனுமதி அளித்தால் அதைப் பயன்படுத்தி சமையல் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தற்போதைய சூழ்நிலையில் உணவகங்களின் செயல்பாட்டு நேரத்தை குறைப்பதுடன், உணவு வகைகளையும் குறைத்து அத்தியாவசிய உணவுகளை மட்டும் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலை நீடித்தால் உணவகங்களை மூடுவதையே தவிர வேறு வழியில்லை என்றும், வாடிக்கையாளர்கள் இந்த சூழ்நிலையை புரிந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் வெங்கடசுப்பு கேட்டுக்கொண்டார்.

  14. எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: பெங்களூருவில் உணவகங்கள் மூடல்

    எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு

    பட மூலாதாரம், Getty Images

    வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் எதிரொலியாக, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று (மார்ச் 10) முதல் உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக பெங்களூரு உணவகங்கள் சங்கம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது மார்ச் 9 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் அதை நம்பியுள்ள பிற மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்வார்கள். எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நமது ஹோட்டல் துறையும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், “70 நாள்களுக்கு எரிவாயு விநியோகத்தில் பாதிப்பிருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனால், திடீரென எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது உணவக தொழிலுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தைச் சீர்படுத்தவும் அதன்மூலம், உணவக தொழிலுக்கு ஆதரவு தரவும் கேட்டுக்கொள்கிறோம். எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதால் மார்ச் 10 முதல் உணவகங்கள் மூடப்பட்டிருக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  15. வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் என்ன மாற்றம்?

    எல்பிஜி விநியோகம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வணிக ரீதியான எல்பிஜி விநியோகம் தடைபட்டால், தங்கள் ஹோட்டல்களை மூட வேண்டியிருக்கும் என்று பெங்களூருவில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும், அதிகப்படியான உற்பத்தியை உள்நாட்டு பயன்பாட்டிற்கு திருப்பிவிடவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் எரிவாயு பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள் முன்பதிவு காலத்தை அமல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    வீடுகளுக்கு அல்லாத எரிவாயு விநியோகங்களில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வணிக பயன்பாட்டிற்கா எரிவாயு சப்ளை, முதலில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற மிகவும் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அமைச்சகத்தின் கூற்றுப்படி, வீட்டு உபயோகம் அல்லாத பயன்பாட்டிற்கு எரிவாயு விநியோகம் தொடர்பான விஷயங்களை மறுஆய்வு செய்ய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று நிர்வாக இயக்குநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற தொழில் துறையினரின் கோரிக்கைகள் பற்றி இந்தக் குழு முடிவு செய்யும்.

  16. வணக்கம் நேயர்களே!

    இன்று (10-03-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் முக்கிய செய்திகளை தொகுத்து அளிப்பது சிராஜ்.

  17. இரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் முக்கிய ஆலோசனை

    இரான்

    பட மூலாதாரம், Contributor/Getty Images

    இரானில் போர் நிலவி வரும் சூழலில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

    தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், இரானை விட்டு வெளியேற நில எல்லைகளுக்குச் செல்லும் முன், கண்டிப்பாகத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்தியத் தூதரகம் தனது ஆலோசனையில் கூறியுள்ளதாவது, "இந்தியக் குடிமக்கள் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்காமல் இரானில் இருந்து வெளியேற எந்தவொரு நில எல்லைக்கும் செல்ல வேண்டாம். நில எல்லையை நோக்கிச் செல்வதற்கு முன் தூதரகத்திடம் இருந்து தெளிவான வழிகாட்டுதல்களைப் பெறுவது மிகவும் முக்கியம்."

    இந்தியத் தூதரகம் அவசர உதவிக்கான எண்களையும் வெளியிட்டுள்ளது.

    மொபைல் எண்கள்: +98 9128109115, +98 9128109102, +98 9128109109, +98 9932179359

    மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in

  18. 'மத்திய கிழக்கு போர் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்' - ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், ANI

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்விலும் கடும் அமளி காணப்பட்டது.

    அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையிலான போர் இந்தியாவிற்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஊடகங்களிடம் பேசுகையில், "மத்திய கிழக்கு நமது பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். பிரதமர் மோதி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் நாடு பெரிய அடியைச் சந்திக்கப் போகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்," எனத் தெரிவித்தார்."

    அவர் கூறியதாவது, "எரிபொருள் விலை உயர்வும் பொருளாதார நெருக்கடியும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இல்லையா? இவை பொதுமக்களின் பிரச்னைகள். இவற்றை நாங்கள் முக்கியமானதாகக் கருதுகிறோம், விவாதிக்கவும் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் இதை விவாதிக்க விரும்பவில்லை, ஏனெனில் அது பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும், பிரதமரின் நிலைப்பாடு அம்பலமாகும். அவர் எவ்வாறு சமரசம் செய்துகொண்டார் என்பதும், அவர் எவ்வாறு அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறார் என்பதும் வெளிப்படும். அதனால்தான் அவர்கள் விவாதிக்க மறுக்கிறார்கள்" என்று கூறினார்.

    அவையில் நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் தொடங்கின, ஆனால் அமளி காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  19. துருக்கி நோக்கி வந்த இரான் ஏவுகணை வீழ்த்தப்பட்டது

    மார்ச் 4 துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள சிரியாவின் பகுதியில் விழுந்த ஏவுகணையின் படம்

    பட மூலாதாரம், Getty Images

    இரான் ஏவிய இரண்டாவது ஏவுகணை, துருக்கியின் வான்வெளிக்குள் நுழைந்தபோது நேட்டோவின் வான்வழி மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அதை சுட்டு வீழ்த்தின என துருக்கி தெரிவித்துள்ளது.

    அந்த ஏவுகணையின் சிதிலங்கள் காலியான நிலப்பரப்பில் விழுந்ததாகவும், இதில் எவருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.

    கடந்த வாரமும் துருக்கி வான்வெளியை நோக்கி வந்த ஓர் இரானிய ஏவுகணை, நேட்டோ பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

  20. இரானின் புதிய அதி உயர் தலைவருக்கு புதின் வாழ்த்து

    புதின் - இரான்

    பட மூலாதாரம், Sputnik

    இரானின் புதிய அதி உயர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனேயிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.

    "இரானிய இஸ்லாமியக் குடியரசின் உச்ச தலைவராக நீங்கள் நியமிக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று கிரெம்ளின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் புதின் தெரிவித்துள்ளார்.

    இரான் ரஷ்யாவின் ஒரு "நம்பகமான கூட்டாளியாகத் தொடரும்" என்றும் ரஷ்ய அதிபர் உறுதியளித்துள்ளார்.

    மேலும் அவர், "இரான் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், இந்த உயரிய பதவியில் உங்களது செயல்பாடுகளுக்கு நிச்சயமாக பெரும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் தேவைப்படும். உங்கள் தந்தையின் பணிகளை நீங்கள் கண்ணியத்துடன் தொடர்வீர்கள் என்றும், இந்த கடுமையான சோதனையை எதிர்கொள்ள இரானிய மக்களை ஒன்றிணைப்பீர்கள் என்றும் நான் நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Now