வியட்நாம் முதல் காஸா, இரான் வரை போர்களில் குழந்தைகள் நிலை குறித்த உலகின் பார்வை

தற்போதைய போரின் போது இரான் பள்ளி மீதான தாக்குதலில் பல குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தற்போதைய போரின் போது இரான் பள்ளி மீதான தாக்குதலில் பல குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
    • எழுதியவர், முகமது ஹனீஃப்
    • பதவி, மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் உங்களை சங்கடமடையச் செய்யலாம்)

இன்றிலிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் போர் நடந்தது. அந்த நேரத்தில் இணையமோ, மொபைல் போனோ இல்லை; வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகுதான் போரின் செய்திகள் நம்மை வந்தடையும்.

அமெரிக்கா வியட்நாம் மீது நேபாம் (Napalm) குண்டுகளை வீசியது, அவை தீப்பிழம்புகளை உருவாக்கின. பயிர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை எரித்துச் சாம்பலாக்கின.

அந்த நேரத்தில் ஒரு புகைப்படம் வெளியானது, அதில் நேபாம் குண்டால் எரிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருத்தி, நிர்வாணமாகச் சாலையில் ஓடிக்கொண்டிருந்தாள். செய்தித்தாள்களில் அந்தப் புகைப்படம் வெளியானபோதுதான், வியட்நாமில் அமெரிக்க இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரிந்தது.

அந்தச் சிறுமியின் பெயர் 'கிம்', ஆனால் அவள் 'நேபாம் கேர்ள்' (Napalm Girl) என்று அறியப்பட்டாள். மக்கள் முழக்கமிட்டு ஊர்வலங்களை நடத்தினார்கள், ஆனாலும் போர் அடுத்த மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது.

கிம்மின் புகைப்படம் போரை நிறுத்திவிடவில்லை, ஆனால் "எங்கள் பெயரிலும், எங்கள் வரிப் பணத்திலும் இவ்வளவு அநீதியை இழைக்காதீர்கள்," என்று மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை அது ஏற்படுத்தியது.

காஸாவில் குழந்தைகள் கொல்லப்பட்டுக் கொண்டே இருந்தனர்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் காஸா போரில் 70,000-கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் காஸா போரில் 70,000-கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காஸா மீது தாக்குதல்கள் தொடங்கியபோது, ஒரு புத்திசாலியான அமெரிக்கர் தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு, "காஸாவில் குழந்தைகள் கொல்லப்பட்டு அவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வந்தால், உலகம் இஸ்ரேலைத் தடுக்க வேண்டியிருக்கும்," என்று கூறினார்.

அடுத்த இரண்டரை ஆண்டுகளில் காஸாவில் பல குழந்தைகள் கொல்லப்பட்டனர், உலகம் தானாகவே "காஸா குழந்தைகளின் சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கிறது" என்று அலறியது. ஒரு நாள் வயதுடைய, இரண்டு நாள் வயதுடைய, இரண்டு மாத வயதுடைய குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

4 மாதக் குழந்தைகளாக இருந்தவர்கள், குண்டுவீச்சில் எரிந்து இறந்தனர், தங்கள் வீடுகளின் இடிபாடுகளுக்குள் புதைந்தனர், முழு குடும்பங்களும் அழிந்து போயின; நாம் நமது போன்களில் அவற்றின் நேரடி காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஏழை வீட்டுப் பிள்ளைக்குக் காய்ச்சல் வந்தால் கூட, அவனைத் தூக்கிக் கொண்டு நகரத்தின் பெரிய மருத்துவமனைக்கு ஓடும் காலத்தில்தான் இது நடக்கிறது; வளர்ந்த நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் ஒரு குழந்தை காணாமல் போனால் கூட 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன.

இந்த நேரத்தில் குழந்தைகளைக் கொல்பவர்கள் கொன்று கொண்டே இருந்தனர். எவருமே அவர்களைத் தடுக்கவில்லை. நாமும் நம் குழந்தைகளிடம் மறைத்துவிட்டு, இறந்து கிடக்கும் இந்தக் குழந்தைகளின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இரான் மகளிர் பள்ளி மீது நடந்த தாக்குதல்

தெற்கு இரான் நகரமான மினாபில் மாணவிகளின் பள்ளி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், AMIRHOSSEIN KHORGOOEI/ISNA/AFP via Getty Images

படக்குறிப்பு, தெற்கு இரான் நகரமான மினாபில் மாணவிகளின் பள்ளி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மக்கள் அநேகமாக அனைத்து வகையான அநீதிகளுக்கும் பழகிவிட்டிருக்கலாம், ஆனால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்படும் என்றும், உலகின் மற்றப் பகுதிகளில் வேலைகள் வழக்கம் போலத் தொடர்ந்து நடக்கும் என்றும் எப்போதும் நினைத்ததில்லை.

இப்போது இரான் மீது தாக்குதல்கள் தொடங்கியுள்ளன, முதல் தாக்குதலிலேயே மகளிர் பள்ளி ஒன்றின் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டுள்ளது.

150-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். இரான் நாட்டினரே அவர்களைக் கொன்றிருப்பார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். மற்றொரு புத்திசாலியான அமெரிக்கர், "இந்தச் சிறுமிகள் வளர்ந்த பிறகு புர்காதான் அணியப் போகிறார்கள், அதற்குப் பதிலாக மரணமே மேலானது," என்று கூறினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஒரு தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துபவர் அளித்த நேர்காணலைப் பார்த்தேன்.

அவர் ஒரு மசூதிக்குள் சென்று வெடிக்க வேண்டியிருந்தது, ஆனால் அவர் வெடிக்கவில்லை, சிக்கிக் கொண்டார்.

"உங்களுடைய கருத்து எதுவாக இருந்தாலும் இருக்கட்டும், ஆனால் மசூதிக்குள் அப்பாவி குழந்தைகளும் இருந்தார்களே, அவர்களும் கொல்லப்பட்டிருப்பார்களே?" என நேர்காணல் செய்தவர் கேட்டார்,

அதற்கு அந்தத் தற்கொலை குண்டுதாரி, "குழந்தைகள் அப்பாவிகள் என்று உங்களுக்கு யார் சொன்னது?" என்று பதிலளித்தார்.

அந்தத் தற்கொலை குண்டுதாரியின் சிந்தனைக்கும், வளர்ந்த நாடுகளின் தலைவர்களின் சிந்தனைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று யோசிக்கிறோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு