திருமணம் ஆகவில்லை என்பதை நிரூபிக்க நீதிமன்றப்படி ஏறிய பாகிஸ்தானிய நடிகை!
- எழுதியவர், ஹென்னா சயீத்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தனக்கு திருமணம் நடந்ததா, இல்லையா என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஏழு வருடங்களாக நீதிமன்ற வழக்கு ஒன்றை சந்தித்து வருகிறார் பாகிஸ்தான் நடிகை.

பட மூலாதாரம், AFP
மீரா என்று அறியப்படும் இர்டிசா ருபாப், பல வெற்றிகரமான வணிகரீதியான படங்களில் நடித்துள்ளார். அதற்காக பல உள்ளூர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
ஆனால் தற்போது, வேறு சில காரணங்களால் பிரபலமாகியுள்ளார் மீரா. இதற்கு காரணம், அவரது கணவர் என்று கூறிவரும் நபருக்கு எதிராக மீரா நடத்தி வரும் நீதிமன்ற போராட்டம்.
யார் இந்த மீரா?
லாகூரில் உள்ள பாகிஸ்தான் சினிமா துறையான லோலிவுட்டில் புகழ்பெற்ற நடிகராக கருதப்படுபவர் மீரா.
40 வயதான மீரா, சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், அரசியலுக்கு வர ஆர்வம் இருப்பதாகவும் அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் மீரா பதிவிட்ட வீடியோக்களும் மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. அவரது ஆங்கில உச்சரிப்பை பாகிஸ்தானிய மக்கள் பலரால் கேலி செய்யப்பட்டாலும், அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் வழக்கமுடையவர் மீரா.
சர்ச்சையில் சிக்கியது எப்படி?
கடந்த 2009 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, ஃபைசலாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆதிக் உர் ரெஹ்மான், 2007 ஆம் ஆண்டு தனக்கும் மீராவிற்கும் திருமணம் நடைபெற்றதாக கூறினார்.
தன்னை கணவர் என்று மீரா வெளிப்படையாக சொல்லாதது வருத்தமளிப்பதாக குறிப்பிட்ட அவர், ரசிகர்களிடம் மீரா தாம்திருமணம் ஆகாதவர் என்று கூறி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
மீரா தனது மனைவி என்பதை நிரூபிக்க அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்றும், தன்னை விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள கூடாது, மீரா வாழும் வீடு தனக்கு வேண்டும் மற்றும் வெளிநாடுகள் செல்ல மீராவிற்கு தடை விதிக்க வேண்டும் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி ரெஹ்மான் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பட மூலாதாரம், AFP
மீராவின் கன்னித்தன்மை குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று ரெஹ்மான் வழக்கு தொடர்ந்துள்ளதாக, பிபிசியிடம் கூறிய மீராவின் வழக்கறிஞர் பலக் ஷெர் கோசா, மேலும் அந்த மனுவில் மீரா கன்னித்தன்மை உடையவர் அல்ல என்றும் அவர் திருமணம் ஆகாதவர் என பொய் சொல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த வழக்கை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாகிஸ்தானில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே இது போன்ற மருத்துவ பரிசோதனைகள் அனுமதிக்கப்படும்
"ஆனால், இது போன்ற வழக்குகளில், சம்பந்தப்பட்ட பெண் ஒப்புதலோடுதான் மருத்துவ பரிசோதனையை அனுமதிக்க முடியும். ரெஹ்மானின் வழக்கில் அடிப்படை இல்லாததால் நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது."
ரெஹ்மானின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த மீரா, தனக்கு திருமணம் ஆகவில்லை என்றார். திருமண சான்றிதழை எதிர்த்து 2010 ஆம் ஆண்டு அவர் எதிர்மனு தாக்கல் செய்திருந்தார்.
யாரை நம்புவது?
பாகிஸ்தான் முழுவதும் இந்த செய்தி பரவியதையடுத்து பல தரப்பட்ட மக்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்தனர்.
தனது நண்பர் ஒருவர் மூலம் ரெஹ்மானை சந்தித்ததாகவும், சில சுற்றுப் பயணங்கள் மற்றும் கச்சேரிகளில் அவருடன் இணைந்து பணியாற்றியதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார் மீரா.
"ஒரு நாள் போலி புகைப்படங்கள் சிலவற்றை காட்டி என்னை நீ திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறினார்…. அவர் என்னை மனைவி என்று அழைப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?" நான் ஒரு புகழ்பெற்ற பிரபலம். நான் எப்படி இவ்வளவு எளிமையாக திருமணம் செய்து கொண்டிருக்க முடியும்? என்றார் மீரா
இந்நிலையில் ரெஹமானின் வழக்கறிஞர் அலி பொகாரி பிபிசியிடம் கூறகையில், "மீரா அவரது தாய் மற்றும் அவரது மாமா முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். அவர் ரெஹ்மானின் மனைவிதான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்" என்றார்.
இதற்காக நீதிமன்ற படிகள் ஏறுவதா?

திருமணம் குறித்து இது மாதிரியான பல வழக்குகளை சந்தித்துள்ளது பாகிஸ்தானிய குடும்பநல நீதிமன்றங்கள். ஆனால் இதில் பிரபலம் சம்பந்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
தன் மனைவி யாரையும் திருமணம் செய்து கொள்ள கூடாது என பல ஆண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஏழு ஆண்டுகளாக மீரா போராடுவதில் இருந்து, பாகிஸ்தான் குடும்பநல நீதிமன்றங்களின் மந்தமான நிலை தெரிய வருகிறது.
"எனக்கு திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் நேரம் கடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கால் எனது வேலை மற்றும் மனநலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த தடையும் இல்லாமல் நான் தொடர்ந்து வேலை செய்து கொண்டு என் பயணங்களை மேற்கொள்கிறேன்" என்றார் மீரா.
தற்போது நடப்பது என்ன?
ரெஹ்மான் வேண்டும் என்றே இந்த வழக்கை தாமதப்படுத்துகிறார் என மீராவின் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"தனது வழக்கறிஞரை பல முறை மாற்றி விட்டார் ரெஹமான். வழக்கு விசாரணை நடைபெறும் நாளில் அவர்கள் நீதிமன்றத்திற்கே வருவதில்லை" என்கிறார் மீராவின் வழக்கறிஞர் பலக் ஷெர் கோசா.
இந்நிலையில் கடந்த வாரம், மீரா யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என ரெஹமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது லாகூர் சிவில் நீதிமன்றம்.
இதுகுறித்து தீர்ப்பளித்த நீதிபதி பாபர் நதீம், திருமண சான்றிதழ் உண்மையா, போலியா என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை , ஆனால் குடும்பநல நீதிமன்ற சட்டம் 1964ன்-படி மீரா வேறொரு திருமணம் செய்து கொள்வதை தடுக்க முடியாது என்றார்.
ஆனால், அந்த திருமண சான்றிதழ் உண்மை தான் என தெரிய வந்தால் அதற்கான சட்ட விளைவுகளுக்கு மீரா பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.
எனினும், இதனை வெற்றியாக கருதிய மீரா, "இறுதியாக தனக்கு நீதி வழங்கப்பட்டது" என்றார்.
இருபக்க விவாதங்களையும் விரைவாக முடிக்க உத்தரவிட்ட நீதிபதி பாபர், வரும் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.
பிற செய்திகள்
- 15 நாள் டெங்கு சிகிச்சைக்குப்பின் இறந்த சிறுமி; மருத்துவக் கட்டணமோ ரூ. 16 லட்சம்
- மோதியின் சொந்த கிராமத்திற்கு சென்றடையாத “தூய்மை இந்தியா” திட்டம்
- 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் வெளியான `பத்மாவதி'
- இரட்டை குடியுரிமை: பதவி இழக்கும் 9-ஆவது ஆஸ்திரேலிய எம்.பி.
- ''அதிமுக = அனைத்திந்திய மோடி முன்னேற்றக் கழகம்?''
.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












