ஜெருசலேம் பற்றிய இந்த 6 தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவித்தார். அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது.

உலகின் புராதன நகரங்களில் ஒன்றான ஜெருசலேம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, உலகின் புராதன நகரங்களில் ஒன்றான ஜெருசலேம்

ஜெருசலேத்தை, இஸ்ரேலின் தலைநகராக, டிரம்ப் அங்கீகரித்ததை நிராகரித்த ஐ.நாவின் பாதுகாப்புக்குழுவின் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

ஜெருசலேம் சர்ச்சைக்கு பிறகு, இஸ்ரேலுடன் சமாதானமாக செல்ல அமெரிக்கா வரையறுக்கும் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

5,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட ஜெருசலேம் 3,000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்த மக்களுக்கும் தலைநகராக இருந்ததில்லை என இஸ்ரேஸ் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

ஜெருசலேம்

பட மூலாதாரம், பிபிசி

புராதன நகரமான ஜெருசலேம் எப்போதும் சர்ச்சைக்குள்ளான ஒரு நகரமாகவே இருந்து வந்துள்ளது. ஜெருசலேம் பற்றிய முக்கிய சில தகவல்களை சுருக்கமாக தெரிந்துக்கொள்வோம்.

•பழைய ஜெருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்தாக (World Heritage) வகைப்படுத்தப்பட்டுள்ளது. அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது பழைய ஜெருசலேம்.

•ஹீப்ரு மொழியில் 'யெருஷ்லாயீம்' என்றும், அரபியில் 'அல்-குதஸ்' என்றும் அழைக்கப்படும் ஜெருசலேம் நகரம் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று. அல் குதஸ் என்ற அரபியவார்த்தையின் பொருள் அமைதியின் உறைவிடம்.

•இஸ்ரேல்-அரபு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளில் பிரதானமாக விளங்குகிறது ஜெருசலேம். அதற்கு காரணம் யூதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதத்தினர் இந்த நகரை புனித நகராக கருதுவதே.

யூதர்களின் குடியிருப்பில் இருந்து கிழக்குபுறமாக எடுக்கப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, யூதர்களின் குடியிருப்பில் இருந்து கிழக்குபுறமாக எடுக்கப்பட்ட புகைப்படம்

•நபிகள் நாயகத்தின் வாழ்க்கையுடன் இணைந்த ஜெருசலேம் நகரை இஸ்லாமியர்கள் புனிதமான இடமாக கருதுகின்றனர். முகமது நபி ஜெருசலேமிலிருந்து விண்ணகப் பயணம் சென்று திரும்பினார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.

•பைபிளின் புதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறிஸ்து தனது இறுதி காலத்தில் வாழ்ந்த இடம் ஜெருசலேம். அவர் உயிர்நீத்த சிலுவை ஜெருசலேமில் கண்டெடுக்கப்பட்டது. எனவே கிறித்தவர்கள் ஜெருசலேத்தை புனித நகரமாக கருதுகின்றனர்.

•பைபிளின் பழைய ஏற்பாட்டின்படி, ஏறக்குறைய கி.மு. 1000 ஆண்டுகளில் இஸ்ரேல் மன்னர் தாவீது இஸ்ரேல் ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைநகராக ஜெருசலேம் நகரை நிறுவினார். தாவீது மன்னரின் மகன் சாலமன் ஜெருசலேமில் புகழ்வாய்ந்த ஆலயம் ஒன்றை கட்டமைத்தார். எனவே, இஸ்ரேலுக்கு ஜெருசலேம் புனித நகராக மாறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :