இந்திய பெருவெள்ளம்: பனிச்சிகரத்தில் புதைந்த அணு ஆயுதங்கள் காரணமா?

Nanda Devi

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவை இணைக்கும் கிழக்கு இந்திய எல்லையில் உள்ள மலைச்சிகரம்
    • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவின் உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ராய்னி கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பனிமலைக்கடியில் புதைந்த அணு ஆயுத வெடிப்பின் சீற்றமே தாங்கள் எதிர்கொண்ட கோரத்துக்குக் காரணம் என அங்குள்ள கிராமவாசிகள் பீதியடைந்தனர். ஆனால், 50 பேருக்கும் அதிகமானோர் பலியான அந்த சம்பவத்துக்கு பனிமலைச்சிகரத்தின் ஒரு பகுதி உடைந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

ஆய்வாளர்களின் இந்த கூற்றை 250 குடும்பங்கள்வரை வசிக்கும் ராய்னி கிராம மக்கள் நம்பத்தயாராக இல்லை.

"ஆராய்ச்சியாளர்களின் பேச்சை நாங்கள் நம்ப மாட்டோம். அது எப்படி குளிர்காலத்தில் ஒரு பனிப்பாறை பிளக்கும்? பனிமலைக்கடியில் புதைந்த அணு ஆயுதங்கள் பற்றி அரசாங்கம் விசாரிக்க வேண்டும்," என்கிறார் ராய்னி கிராமப்பெரியவர் சங்ராம் சிங் ராவத்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

இந்த கிராம மக்களின் இதயத்தில் குடிகொண்ட அச்சத்துக்கு பின்னணியில் ஒரு பயங்கரமான ஜேம்ஸ் பாண்ட் திகில் உளவுக்கதை உள்ளது. அது உலகின் தலைசிறந்த மலையேறும் வீரர்கள், மின்னணு உளவு கதிரியக்க சாதனங்களுடன் சென்றதாக நீளுகிறது.

1960களில் சீனாவின் அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளை பரிசோதிக்க இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து இமயமலை பகுதியில் இந்த அணு ஆற்றல் வாய்ந்த கண்காணிப்பு சாதனங்களை மறைத்து வைத்ததாக ஒரு கதை பேசப்படுகிறது. 1964ஆம் ஆண்டில்தான் சீனா தனது முதலாவது அணு ஆயுத சோதனையை நிகழ்த்தியதாக உலகுக்கு அறிவித்தது.

"அப்போது மக்கள் பனிப்போர் கால பிரமையில் இருந்தனர். எந்த திட்டமும் வெளிப்படையாக நடக்கவில்லை. முதலீடு பெரியதாக இல்லை. திட்டங்கள் நியாயப்படுத்தப்படவில்லை," என்று அமெரிக்காவின் "ராக் அண்ட் ஐஸ்" என்ற இதழின் ஆசிரியர் பீட் டகேடா இந்த விஷயம் பற்றி தனது குறிப்பில் விரிவாக எழுதியுள்ளார்.

"அது அக்டோபர் 1965. இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மலையேறும் குழு, இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான சிகரமான 25 ஆயிரத்து 643 அடி உயரத்தில் உள்ள நந்தா தேவி சிகரத்தில் வைப்பதற்காக 57 கிலோ எடையுள்ள கண்காணிப்பு சாதனங்களுடன் கூடிய 7 புளூட்டோனியம் காப்ஸ்யூல்களை கொண்டு சென்றனர். அந்த இடம் சீனாவையும் வடகிழக்கு இந்தியாவையும் இணைக்கும் பகுதி."

"ஒரு பனிப்புயல் அந்தக் குழுவின் திட்டத்துக்கு இடையூறாக வந்ததால் அவர்கள் அந்த சாதனங்களை அங்கேயே விட்டு, விட்டுத் திரும்பினர். ஆறு அடி நீள ஆன்டெனா, இரண்டு ரேடியோ தகவல்தொடர்பு பெட்டிகள், ஒரு பவர் பேக் மற்றும் புளூட்டோனியம் காப்ஸ்யூல்கள் அதில் அடங்கும்."

"ஒரு மலைக்குகை பகுதியில் குழுவினர் தஞ்சமடைய வேண்டியிருந்தது. அவர்கள் திரும்பியிருக்காவிட்டால் பலத்த பனிக்காற்றில் சிக்கி வீரர்கள் உயிரிழந்திருப்பார்கள்," என்று ஒரு பத்திரிகை செய்தி கூறியது.

இந்த தகவலை கூறியது, இந்திய எல்லை பகுதி கண்காணிப்பு அமைப்புக்காக பணியாற்றிய இந்திய அணிக்கு தலைமை தாங்கிய மன்மோகன் சிங் கோஹ்லி தெரிவித்தார்.

அதே மலையேற்றக்குழுவினர், அடுத்து வந்த வசந்த காலத்தில், முன்பு சாதனங்களை விட்டுச் சென்ற அதே பகுதிக்குச் சென்றபோது அவை காணாமல் போனதை அறிந்தனர்.

MS Kohli

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலக அளவில் பிரபலமான மற்றும் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் எம்.எஸ். கோஹ்லி.

அரை நூற்றாண்டு கழிந்த பிறகும் நந்தா தேவி சிகரத்தில் பல தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டபோதும், அந்த அணு சாதனங்கள் என்னாவாயின என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

நந்தா தேவிக்கு மேற்கொள்ளப்பட்ட பல தேடுதல் பயணங்களுக்குப் பிறகு, காப்ஸ்யூல்களுக்கு என்ன ஆனது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

இதுநாள்வரை தொலைந்து போனதாக கருதப்படும் புளூட்டோனியம், ஒரு பனிப்பாறையில் இருக்கும் சாத்தியம் உள்ளது. ஒருவேளை தூசுப்படலத்தால் தூண்டப்பட்டு, அது கங்கையை நோக்கி ஊர்ந்து நகரலாம்" என்று குறிப்பிடுகிறார் டகேடா.

ஆனால், இதை மிகைப்படுத்தப்பட்ட கதை என்கிறார்கள் விஞ்ஞானிகள். புளூட்டோனியம் என்பது அணுகுண்டு தயாரிப்பின் முக்கிய மூலப்பொருள். ஆனால் புளூட்டோனியம் பேட்டரிகள் "புளூட்டோனியம் -238" எனப்படும் வேறுபட்ட ஐசோடோப்பை (ஒரு வேதியியல் தனிமத்தின் மாறுபாடு) பயன்படுத்துகின்றன. இது 88 வருட ஆயுளைக் கொண்ட தனிமத்தின் (கதிரியக்க ஐசோடோப்பின் ஒரு பாதி சிதைவதற்கு எடுக்கும் நேரம்) பாதி அளவே இருக்கும்.

Nanda Kot

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நந்தா கோட் பகுதியில் ஒரு வகை சாதனங்கள் நிறுவப்பட்டன.

விந்தை பயணத்தின் எஞ்சிய கதைகள் என்ன?

பிரிட்டிஷ் பயண எழுத்தாளர் ஹக் தாம்சன், "நந்தா தேவி: எ ஜர்னி டு தி லாஸ்ட் சேன்க்சுரி", என்ற தனது புத்தகத்தில் அமெரிக்க மலையேறும் வீரர்களிடம் தங்களுடைய சருமத்தின் நிறத்தை கருமையைாகக் காட்டும் விதத்தில் ஒரு வித மையை கொடுத்து பூசிக் கொள்ளச் சொன்னதாகவும், அது உள்ளூர் மக்களிடையே உயர் செங்குத்தான பகுதியில் மனித உடலில் குறையும் பிராண வாயு பற்றிய தங்களுடைய ஆராய்ச்சிக்காக வந்த ஆராய்ச்சியாளர்கள் என கூற அந்த மை உதவியதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களின் உடைமைகளை சுமந்து சென்ற சுமைதூக்கும் கூலிகளிடம், அந்த பெட்டியில் ஒரு வித புதையல் இருப்பதாக அவர்கள் கூறியிருந்ததாகவும் அனேகமாக தங்கப் புதையலாக அது இருப்பதாக கருதப்பட்டதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த குழுவினர், வடக்கு கரோலைனாவில் உள்ள சிஐஏ முனையமான ஹார்வீ பாயின்ட் என்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அணு உளவுப்பணிக்கான குறுகிய கால பயிற்சியை பெற்றதாக "அவுட்சைட்" என்ற இதழின் செய்தி கூறுகிறது.

1978 ஆம் ஆண்டில் அவுட்சைட் இதழின் தகவல்களை, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிடும்வரை, இந்தியாவில் இந்த பயணம் தொடர்பான தகவல் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டது.

அதில், சீனாவை உளவு பார்க்க இமயமலையின் இரண்டு மலைச்சிகரங்களில் அணு ஆற்றல் சாதனங்களை நிறுவுவதற்காக, எவரெட்ஸ்ட் மலை சிகரத்துக்கு சமீபத்தில் சென்று வெற்றி கண்ட குழுவினர் உள்ளிட்ட அமெரிக்க வீரர்களை அமெரிக்கா பணியமர்த்தியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி கூறுகிறது.

1965ஆம் ஆண்டில் முதல் பயணம், தோல்வியில் முடிந்தது என்பதை தனது செய்தியில் உறுதிப்படுத்திய அந்த நாளிதழ், "இரண்டாவது பயணம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த வேளையில் அதை பகுதியளவு வெற்றி என முன்னாள் சிஐஏ அதிகாரி கூறியதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டது.

1967ஆம் ஆண்டில், புதிய சாதனங்களை நிறுவும் முயற்சி, நந்தா கோட் என்ற பக்கவாட்டுப் பகுதி மற்றும் 6,861 மீட்டர் (22,510 அடி) வெற்றி பெற்றதாகவும், மூன்று ஆண்டுகளாக தொடர்ந்த இந்த பணிக்காக நியமிக்கப்பட்ட 14 பேருக்கு தலா மாதம் 1,000 டாலர்கள் ஊதியம் வழங்கப்பட்டதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.

Jim Lovell in full astronaut gear

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, பயிற்சியின்போது புளோட்டியம் அடங்கிய பெட்டியுடன் அப்பல்லோ 13 குழு தலைவர் ஜிம் லோவெல்.

மூன்றாவது முயற்சி, இந்த முறை நந்தா கோட் என்று அழைக்கப்படும் 6,861 மீட்டர் (22,510 அடி) மலையில், அருகிலுள்ள மற்றும் எளிதான மலையில் அமைந்தது. மொத்தம் 14 அமெரிக்க ஏறுபவர்களுக்கு, மூன்று ஆண்டுகளில் உளவு சாதனங்களை இமயமலையில் வைப்பதற்காக மாதத்திற்கு $ 1,000 வழங்கப்பட்டது.

ஒரு தகவலின்படி, 1978ஆம் ஆண்டில் இந்திய பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் இந்திய நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய தகவலை வெளியிட்டார்.

அது, நந்தா தேவி சிகரம் மீது அணு ஆற்றல் வாய்ந்த சாதனங்களை நிறுவ அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு சேர்ந்தது என்பதுதான்.

ஆனால், அந்த திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்ற விவரத்தை மொரார்ஜி தேசாய் வெளியிடவில்லை என்கிறது அந்த தகவல்.

அமெரிக்க உள்துறையின் வெளிப்படுத்தப்பட்ட ஆவண தொகுப்பில், டெல்லியில் உள்ள தூதரகத்துக்கு வெளியே சுமார் 60 பேர், இந்தியாவில் சிஐஏ செயல்பாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்தியாவை விட்டு சிஐஏ வெளியேறு, எங்கள் நீரை சிஐஏ நச்சுப்படுத்துகிறது போன்ற வரிகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததாக அந்த உள்துறை தகவல் கூறுகிறது.

இமயமலையில் தொலைந்து போனதாக கூறப்படும் அந்த அணு சாதனங்கள், கடைசிவரை என்ன ஆயின என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. "அந்த சாதனம் பனிப்புயலில் சிக்கி எங்காவது இருக்கலாம். அவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கடவுளே அறிவார்," என குறிப்பிடுகிறார் அமெரிக்க மலையேற்ற வீரர்களில் ஒருவரான டகேடா.

ராய்னி கிராமத்தில் உள்ள சிறிய நிலையத்தில் வழக்கமாக அங்குள்ள நீரையும் மண் வளத்தையும் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்வார்கள் என்றும் அங்கு கதிரியக்க தாக்கம் உள்ளதா என்பதை அறிய இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் மலையேற்ற வீரர்கள் கூறுகின்றனர்.

"அணுக்கதிரியத்துக்கு மூலாதாரமாகக் கருதப்படும் புளோட்டோனியம் பலவீனம் அடைய இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம். அதுவரை அந்த சாதனம், இமயமலை பனியில் புதைந்தவாறு கங்கை நோக்கி வரும் இந்திய நதி நீரோட்டத்தில் ஒருவித கசிவுக்கான அச்சுறுத்தலாக இருக்கலாம்," என்று அவுட்சைட் இதழ் கூறியிருக்கிறது.

தற்போது 89 வயதாகும் கேப்டன் கோஹ்லியிடம், இமயமலையில் அணு சாதனங்களை அப்படியே விட்டு வந்ததற்காக வருத்தப்படுகிறீர்களா என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர் அளித்த பதில், "இதில் சந்தோஷப்படவோ வருத்தப்படவோ எதுவும் இல்லை. நான் உத்தரவுக்கு கட்டுப்பட்டே நடந்தேன்," என்பதாகும்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: