ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் ஏவுகணைத் தாக்குதல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வானத்திலிருந்து விழுந்த பாகங்களால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அபுதாபி ஊடக அலுவலகத்தின்படி, வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்களால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல கார்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரான் தரப்பிலிருந்து புதிய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்திருந்ததுடன், இந்தத் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் கூறியிருந்தது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (மார்ச் 25) இரவு முதல் தற்போது வரை, நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் குறைந்தது மூன்று முறை தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வெளியிட்டது.
அபுதாபியிலிருந்து பிபிசி தெற்காசிய செய்தியாளர் ஆசாதே மோஷிரி, “வளைகுடா பிராந்தியத்தில் இரான் 2,100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கிறார்.
பெரும்பாலான தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறினாலும், அரசாங்கம் இன்னும் தகவல்கள் பரிமாற்றம் மீது கடுமையான கட்டுப்பாட்டைப் பேணி வருகிறது.
ஆசாதே மோஷிரியின் கூற்றுப்படி, தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தடுத்ததால் ஏற்பட்ட சேதங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததற்காக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
இரானுடன் ஏதேனும் பேச்சுவார்த்தைகள் நடந்தால், அதன் ஏவுகணை மற்றும் டிரோன் கையிருப்புகள் மீது நீண்டகால கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தொடர்பான விதிகள் வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.