விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு ஊராட்சி அச்சந்தவிழ்த்தான், அதற்கு உட்பட்ட ஒரு சிறிய குக்கிராமம்தான் 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்'. இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஆனால், பல அரசு ஆவணங்களில் இந்த கிராமத்தின் பெயர் 'பரச்சேரி' என்று பதிவாகியுள்ளது. அது மட்டுமல்லாது, சுற்றியுள்ள பிற கிராம மக்கள் கூட 'பரச்சேரி' என்ற பெயரில் தான் இந்த குக்கிராமத்தை அழைக்கிறார்கள்.
சாதிய அடையாளத்துடன் கூடிய ஊர் பெயர் காரணமாக தாங்கள் பெரும் மன உளைச்சலையும் அவமானங்களையும் எதிர்கொள்வதாகவும், இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரபூர்வமாக தங்களது ஊரின் பெயரை 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' என மாற்றவில்லை என்பதால் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் இந்த கிராம மக்கள் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பிபிசி தமிழ் குழு, இந்தக் கிராமத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து காணொளி மற்றும் கட்டுரையையும் பிபிசி வெளியிட்டது.
இந்தக் கிராமத்தில் 113 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அரசு அதிகாரிகள் இந்த கிராமத்தினரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர்.
“தேர்தல் முடிந்து நிச்சயம் பெயர் மாற்றம் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தார்கள். அதை நம்பி ஏப்ரல் 23 அன்று இந்தக் கிராமத்தைச் சிலர் வாக்களித்துள்ளார்கள்” என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிபிசி வெளியிட்ட காணொளியின் எதிரொலியாக, 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' கிராமம் 'பரச்சேரி' என்று பதிவாகி இருப்பதை நீக்காதது குறித்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு (மாவட்ட ஆட்சியர்) தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விளக்கம் கேட்டு நேற்று (ஏப்ரல் 24) கடிதம் அனுப்பியுள்ளது. ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிராம மக்களின் கோரிக்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியிருந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, "அச்சந்தவிழ்த்தான் வருவாய் கிராமத்தில் உள்ள குக்கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் கவனித்து வருகிறது. அப்பகுதிக்கு மறுபெயரிடுவதற்கான முறையான முன்மொழிவு ஏற்கனவே உள்ளாட்சித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.