"இராக்கிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்" - தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு மக்களை இராக்கிலிருந்து "உடனடியாக" வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க அழைப்பு விடுத்த டிரம்ப் - நாடுகளின் பதில் என்ன?

    டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    சனிக்கிழமையன்று 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வேண்டுகோளுக்குப் பல நாடுகள் பதிலளித்துள்ளன.

    பிரிட்டன்: பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "நாங்கள் முன்பே கூறியது போல, இப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எங்கள் நட்பு நாடுகளுடனும் கூட்டாளிகளுடனும் பல்வேறு வழிமுறைகள் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.

    சீனா: வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் CNN-இடம் பேசுகையில், மோதல் போக்குகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதாகத் தெரிவித்தார். டிரம்ப்பின் வேண்டுகோளை சீனா ஏற்றுக்கொண்டு செயல்படுமா என்பதை அந்தச் செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை; இருப்பினும், நிலையான மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

    ஜப்பான்: அமெரிக்காவைத் தனது மிக நெருங்கிய நட்பு நாடாகக் கருதும் ஜப்பான், டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலை வெளியிடவில்லை. எனினும், புதன்கிழமை தொடங்கவுள்ள, பிரதமர் சனே தகாய்ச்சியின் (Sanae Takaichi) அமெரிக்கப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இப்பிரச்னையும் சேர்த்துக்கொள்ளப்படலாம் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பானிய ஊடகமான என்எச்கே-விடம் தெரிவித்தனர். டிரம்ப்பின் வேண்டுகோளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஜப்பான் உடனடியாகத் தனது கடற்படைக் கப்பல்களை அனுப்பாது என்று வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி தெரிவித்தார். அந்த அதிகாரி, "ஜப்பான் தனது நடவடிக்கைகளைத் தானே தீர்மானித்துக்கொள்கிறது; சுதந்திரமான முடிவுகளை எடுப்பதே எங்களின் அடிப்படை கொள்கையாகும்," என்று கூறினார்.

    பிரான்ஸ்: பிரான்ஸ் அரசும் இதுவரை உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான பதிலையும் வெளியிடவில்லை. எனினும், சனிக்கிழமையன்று—டிரம்ப்பின் பதிவு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு—ஹோர்முஸ் நீரிணைக்கு பிரான்ஸ் தனது போர்க்கப்பல்களை அனுப்புவதாக வெளியான செய்திகளை, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (முன்னாள் Twitter) கணக்கு மறுத்தது. அந்தப் பதிவில், "இல்லை; எங்கள் விமானந்தாங்கி கப்பலும், அதைச் சார்ந்த தாக்குதல் படைக் குழுவும் கிழக்கு மத்தியதரைக் கடலிலேயே தொடர்ந்து நிலைத்திருக்கும். தற்போதைய சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்களின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தற்காப்பு சார்ந்ததே ஆகும்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    தென் கொரியா: தென் கொரியாவும் டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இதுவரை எந்தப் பதிலையும் வெளியிடவில்லை.

  2. இலங்கை : இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்

    இலங்கை எரிபொருள்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    இலங்கையில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதன்படி, இன்று காலை 6 மணி முதல் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்திலேயே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இரான், அமெரிக்கா, இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியில் இலங்கையில் தீடீரென எரிபொருள் நிரப்ப நிலையங்களில் அதிகளவானோர் வரிசையில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டனர்.

    இதனால் களஞ்சியத்தில் இருந்த எரிபொருள் முடிவடைந்ததாக கூறி கடந்த வாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

    புதிய விலையில் எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டமை காரணமாகவே விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில், இன்று முதல் QR முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி, எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது.

    www.fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய தகவல்களை பதிவேற்றி, QR குறியீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    முன்னர் QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இன்று காலை 6.00 மணி முதல் www.fuelpass.gov.lk இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்களுக்கான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு

    01.பேருந்து: 60 லிட்டர்

    02. மோட்டார் சைக்கிள்கள்: 5 லிட்டர்

    03. வேன்கள் : 40 லிட்டர்

    மோட்டார் வாகனங்கள் (கார்) : 15 லிட்டர்

    04.மோட்டார் லாரிகள்: 200 லிட்டர்

    05.காணி வாகனங்கள் : 25 லிட்டர்

    06.முச்சக்கர வண்டிகள் (ஆட்டோ) : 15 லிட்டர்

    07.விசேட தேவைக்கான வாகனங்கள்: 40 லிட்டர்

    08.குவாட்ரி சைக்கிள்கள் (Quadricycle): 5 லிட்டர்

    நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

    தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காணப்பட்ட காலப்பகுதியில் எரிபொருளை பெற்றுக் கொள்ள இந்த QR முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

    பொருளாதார நெருக்கடி வலுப்பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் QR முறையில் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், தற்போது மீண்டும் QR முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

  3. "இராக்கிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்" - தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

    அமெரிக்க தூதகம் மீது தாக்குதல்
    படக்குறிப்பு, அமெரிக்க தூதகம் மீது தாக்குதல்

    பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு மக்களை இராக்கிலிருந்து “உடனடியாக” வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. அங்கு தங்குவது குறித்து யோசித்துள்ளவர்கள் அதுகுறித்து “மறுபரிசீலனை” செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    “இரான் மற்றும் அதன் பயங்கரவாத ஆயுதக்குழுக்கள் இராக்கில் உள்ள பொதுமக்கள் ஆபத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. அமெரிக்க குடிமக்கள், அமெரிக்க நலன்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெறுகின்றனர்,” என அதன் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை இராக்கில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    “இராக் வான்வெளியில் ராக்கெட்டுகள், ட்ரோன்கள் மற்றும் சிறுபீரங்கிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், பாக்தாத்தில் உள்ள தூதரகம் அல்லது எர்பிலில் உள்ள துணை தூதரகத்திற்கு வருவதற்கு முயற்சிக்காதீர்கள்.” என தூதரகம் தெரிவித்துள்ளது.

  4. வணக்கம் நேயர்களே!

    இன்று (15-03-2026) மதியம் வரையிலும் நேரலைப் பக்கத்தில் முக்கிய செய்திகளை தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி.

  5. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் நாளை காலை 6 மணி முதல் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் சர்வதேச செய்திகள் நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்கப்படும்.

  6. கரூரில் கல்லூரி பேருந்து மீது மோதிய சரக்கு ரயில் - 25-க்கும் மேற்பட்டோர் காயம்

    தமிழ்நாடு, கரூர், ரயில் விபத்து

    கரூர் மாவட்டத்தில் கல்லூரி பேருந்து மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்து சனிக்கிழமை மாலை கரூர் மாவட்டத்தின் ஜல்லிப்பட்டி அருகே உள்ள ஆளில்லா ரயில்வே பாதையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    காவல்துறை தெரிவித்துள்ள தகவல்களின்படி, கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலிருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகளை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்து, மாலை சுமார் 6 மணி அளவில் வெள்ளியணை வழியாக ஜல்லிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஜல்லிப்பட்டி அருகே உள்ள ரயில்வே கேட்டை பேருந்து கடக்க முயன்றபோது, சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் பேருந்தின் பின்புறத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் பேருந்து சேதமடைந்ததுடன், பேருந்தில் இருந்த ஓட்டுநர் உட்பட 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். காயமடைந்த சிலர் கரூர் அரசு மருத்துவமனையிலும், மற்ற சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்பட்ட காரணம் மற்றும் ரயில்வே கேட்டின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  7. இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிலை என்ன?

    இந்தியா, இரான்

    பட மூலாதாரம், Getty Images

    மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக இரண்டு இந்திய கப்பல்கள் தலா 46,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எல்.பி.ஜி.யை ஏற்றிக் கொண்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    வெளியுறவு துறையின் கூடுதல் செயலாளர் (வளைகுடா பிராந்தியம்) அஸீம் மகாஜன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "தற்போது மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலில் ஐந்து இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளனர். அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றன." என்றார்.

    தற்போது இந்திய கொடி ஏந்திய 22 கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் உள்ளன.

    கப்பல்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா இதைப்பற்றி பேசுகையில், "இதில் 6 எல்.பி.ஜி டேங்கர்களும், 1 எல்.என்.ஜி டேங்கர்களும். 4 கச்சா எண்ணெய் டேங்கர்களும், 3 சரக்கு கப்பல்களும், ரசாயன பொருட்களை ஏற்றி வரும் 1 கப்பலும் 2 பெரிய சரக்கு கப்பலும் 1 ட்ரெஜ்ஜர் கப்பலும் அடங்கும்." எனத் தெரிவித்தார்.

    நாட்டில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாகவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு திறனில் இயங்கி வருவதாகவும் பெட்ரோலியம் அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்தார்.

    "எல்.பி.ஜி. விநியோகத்தைப் பொருத்தவரை, தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இது கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது. மக்கள் பதற்றத்தில் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வருகிறார்கள். நேற்று 75 லட்சம் முன்பதிவு இருந்தது இன்று 88 லட்சமாக உயர்ந்தது. இது பதற்றத்தில் செய்வதன்றி வேறு எதுவும் இல்லை." என்றும் அவர் கூறினார்.

  8. "என்ன நடந்தாலும்..." ஹோர்முஸ் நீரிணை பற்றி டிரம்ப் கூறியது என்ன?

    இரான், அமெரிக்கா, டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    ஹோர்முஸ் நீரிணையை "என்ன நடந்தாலும்" அமெரிக்கா திறக்கும் என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பல நாடுகளும் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்புமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    "இரானின் ராணுவ வலிமையின் 100 சதவிகிதத்தை நாங்கள் அழித்துள்ளோம். ஆனால் அவர்கள் எவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்டாலும் டிரோன் அனுப்புவது அல்லது கண்ணிவெடியை போடுவது, குறுகிய தூரத்திலிருந்து ஏவுகணையை செலுத்துவது அவர்களுக்கு எளிமையானது," என டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

    "முழுமையாக சரிந்த ஒரு நாட்டால் ஹோர்முஸ் நீரிணை அச்சுறுத்தப்படாமல் இருக்க சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் இதர நாடுகள் தங்களின் கப்பல்களை அனுப்பும் என நம்புகிறேன்," என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

    உலகளாவிய கடல்சார் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவிகிதத்தை ஹோர்முஸ் நீரிணை எடுத்துச் செல்கிறது. ஆனால் அதைக் கடந்து செல்லும் கப்பல்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவது உலகளவில் கவலைகளை அதிகரித்துள்ளது.

  9. "அமெரிக்கா மன்றாடி வருகிறது" - இந்தியாவை சுட்டிக்காட்டி இரான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?

    இந்தியா, இரான்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி

    ரஷ்ய எண்ணெய் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தற்போது ரஷ்ய எண்ணெயை வாங்க வேண்டும் என அமெரிக்கா மன்றாடி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இந்தப் பொருளாதார தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியுள்ள நிலையில் அராக்சியின் இந்தக் கருத்து வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஏற்கெனவே கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெயை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாங்குவதற்கு அனுமதிக்கிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் தேசிய பாதுகாப்பு குழு இந்த முடிவை எடுத்ததாக செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறினார்.

    இந்தியா பொறுப்பான அணுகுமுறையை வெளிப்படுத்தி தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டது என்றும் தெரிவித்தார்.

    ராய்டர்ஸ் செய்தி முகமையின்படி, அமெரிக்காவின் அறிவிப்பு ஏப்ரல் 11 வரை ஏற்கெனவே கப்பல்களில் ஏற்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை விற்க அனுமதிக்கிறது.

    "பல மாதங்களாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்துவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது வந்தது. ஆனால் இரான் உடனான மோதலில் இரண்டு வாரங்கள் கடந்த உடனே இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்க வேண்டும் என அமெரிக்கா மன்றாடி வருகிறது," என அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

  10. ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் சேமிப்பு நிலையம்

    இரான், ஐக்கிய அரபு அமீரகம்

    பட மூலாதாரம், Getty Images

    இன்று காலை ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான ஃபுஜைரா துறைமுகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடமாகும் மற்றும் மத்திய கிழக்கின் பெரிய எண்ணெய் சேகரிப்பு நிலைகளில் ஒன்றாகும்.

    கப்பல்களுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்பும் முக்கியமான இடமாகவும் இது இருந்து வருகிறது. ஃபுஜைரா துறைமுகம் பாரசீக வளைகுடாவில் இல்லாமல் ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ளது. இதனால் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க வேண்டியதில்லை.

    சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய போரால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இன்று காலை இணையத்தில் வெளியான காட்சிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு கரையில் உள்ள வளாகத்தில் புகை வருவதைக் காண்பித்தன.

    இரானின் கார்க் தீவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் துறைமுகங்கள், கப்பல் நிறுத்தும் இடங்கள், ராணுவ தளங்கள் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க நலன் சார்ந்த இடங்கள் சட்டப்பூர்வ இலக்குகள் ஆகியுள்ளதாக இரானிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இரானின் எண்ணெய் துறை மற்றும் பரந்துபட்ட பொருளாதாரத்திற்கு இந்த தீவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

  11. மின் அடுப்புகள் பயன்படுத்தும் உணவகங்களுக்கு மானியம் - தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?

    தமிழ்நாடு, எரிவாயு தட்டுப்பாடு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வீட்டு மற்றும் வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பலரும் தற்காலிகமாக மின் அடுப்புகளை நோக்கி நகர்கின்றனர்.

    இந்த நிலையில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக ஆராய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உணவகங்களுக்கான சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

    அதன்படி மின் அடுப்புகளுக்கு மாறும் உணவகங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் வரை மின் கட்டணத்தில் 2 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    "உணவகங்கள். டீக்கடைகள். கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவிற்கு (LPG) பதிலாக மின் அடுப்புகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு. யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும். ஒன்றிய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்த மானியம் வழங்கப்படும்," என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதர முக்கிய அறிவிப்புகள்:

    • மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.
    • இந்த மாதம் பொது விநியோக திட்டத்திற்கு கூடுதலாக 3228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
    • எல்.பி.ஜி தட்டுப்பாட்டால் உணவகங்கள் விறகுகளைப் பயன்படுத்துவதால் விறகு எரிப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்அனுமதி பெறத் தேவையில்லை.
  12. ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள் பற்றி மத்திய அரசு முக்கிய தகவல்

    இந்தியா, இரான்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, கப்பல் துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா

    ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவைக் கொண்டு வரும் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரண்டு கப்பல்கள் மார்ச் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்திய துறைமுகத்தை வந்தடையும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

    "பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அவர்களுக்கு எந்த எதிர்மறையான சம்பவமும் நடக்கவில்லை. ஹோர்முஸ் நீரிணையை ஒட்டிய பாரசீக வளைகுடாவில் இந்திய கொடி ஏந்திய 24 கப்பல்கள் இருக்கின்றன," என கப்பல் துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

    மேலும் அவர், "ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரண்டு கப்பல்கள் 92,700 டன் எல்பிஜியை கொண்டு வருகின்றன. இவை மார்ச் 16-ஆம் தேதி முந்த்ரா துறைமுகத்தையும் மற்றும் மார்ச் 17-ஆம் தேதி கண்ட்லா துறைமுகத்தை அடையும்." எனத் தெரிவித்தார்.

    பாரசீக வளைகுடாவில் உள்ள 22 இந்திய கொடி ஏந்திய கப்பல்களில் 611 மாலுமிகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சூழ்நிலையைக் கவனித்து வருவதாகவும் கூறினார்.

  13. "பெட்ரோல். டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது," - மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

    பெட்ரோல், டீசல்

    பட மூலாதாரம், Getty Images

    நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும் எரிபொருள் நிரப்பப்படும்போது பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    "வாடிக்கையாளர்கள் தவறான கொள்கலன்களில் பெட்ரோல் அல்லது டீசலை நிரப்பவோ அல்லது வீடுகளில் சேமித்து வைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பாதுகாப்பு ஆபத்துகளை ஏற்படுத்தலாம்," என பெட்ரோலிய அமைச்சகத்தின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விதிகளை மீறும் அல்லது தவறிழைக்கும் பெட்ரோல் நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஒரு வாடிக்கையாளர் தவறான கொள்கலனில் பெட்ரோல் நிரப்பிச் சென்றதை மேற்கோள் காட்டிய அந்த அறிவிப்பில், அது ஆபத்தாக முடியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  14. அண்டை நாடுகளை இரான் தாக்க வேண்டாம் என ஹமாஸ் வேண்டுகோள்

    ஹமாஸ், இரான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    இரான் அதன் அண்டை நாடுகளைத் தாக்குவதை தவிர்க்க வேண்டும் எனக் கோரியுள்ள ஹமாஸ் அமைப்பு போரை உடனடியாக நிறுத்த உலக நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ், மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்று வரும் போரை ஆழ்ந்த கவலையுடன் பார்ப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இது இந்தப் பிராந்தியம் மற்றும் உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளது.

    இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறுவதாக டெலகிராமில் ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைத்து ஆக்கிரமிப்பை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

  15. வணக்கம் நேயர்களே!

    இன்று (14-03-2026) இரவு வரையிலும் நேரலைப் பக்கத்தில் முக்கிய செய்திகளை தொகுத்து அளிப்பது மோகன்.

  16. தொழுபவர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம்

    அலகாபாத் உயர் நீதிமன்றம்

    பட மூலாதாரம், Getty Images

    உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் ரமலான் மாதத்தில் தொழுகை நடத்துபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது.

    லைவ் லா (Live Law) செய்தியின்படி, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது அரசின் பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி அதுல் ஸ்ரீதரன் மற்றும் நீதிபதி சித்தார்த் நந்தன் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று அஞ்சி தொழுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்பினால், அவர்கள் ஒன்று ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது இடமாற்றம் கோர வேண்டும் என்று தெரிவித்தது.

    சாத்தியமான சட்டம் ஒழுங்கு சூழலைக் கருத்தில் கொண்டே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் வாதிட்டார், ஆனால் நீதிமன்றம் இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரித்தது.

    உள்ளூர் நிர்வாகம், அதாவது காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர், சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த தங்களுக்குத் திறன் இல்லை என்று கருதினால், அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது சம்பலை விட்டு இடமாற்றம் கோர வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

    லைவ் லா (Live Law) செய்தியின்படி, முன்சிர் கான் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின் போது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. பிளாட் எண் 291-இல் ஒரு மசூதி இருப்பதாகவும், அங்கு ரமலான் மாதத்தில் தொழுகை நடத்த தனக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அவர் அந்த மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

    அந்த இடத்தில் 20 பேர் மட்டுமே தொழுகை நடத்த நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும், அதே சமயம் ரமலான் காலத்தில் அங்கு இன்னும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  17. மோஜ்தபா காமனேயி பற்றிய தகவல் தந்தால் 1 கோடி டாலர் பரிசு - அமெரிக்கா

    மோஜ்தபா காமனேயி

    பட மூலாதாரம், Getty Images

    இரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC - ஐஆர்ஜிசி) "முக்கிய தலைவர்களை" கைது செய்ய உதவும் தகவல்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வெகுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் மொத்தம் 10 நபர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர், இருப்பினும் ஆறு பேரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மோஜ்தபா காமனேயி மற்றும் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி ஆகியோரும் அடங்குவர்.

    அலி லாரிஜானி இதற்கு முன்பு இரானில் நடைபெற்ற அரசு ஆதரவு பேரணி ஒன்றில் காணப்பட்டார்.

    இந்த நபர்கள் ஐஆர்ஜிசி-ன் ராணுவப் பிரிவுகளின் பல்வேறு பகுதிகளை வழிநடத்தி இயக்குவதாக அமெரிக்கா கூறுகிறது.

    மோஜ்தபா காமனேயி உள்ளிட்ட இரானிய தலைவர்கள் பற்றிய தகவல்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் வெகுமதி அறிவிப்பு

    பட மூலாதாரம், US State Department

  18. "இரான் ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது" - டிரம்ப்

    டொனால்ட் டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை 'போலி செய்தி ஊடகங்கள்' சரியான முறையில் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    தன்னுடைய ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் கூறியதாவது, "இரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதைப் பற்றி செய்தி வெளியிடப் போலி செய்தி ஊடகங்கள் தயங்குகின்றன." என்று பதிவிட்டார்.

    அதிபர் டிரம்ப் மேலும் கூறுகையில், "இரான் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது, இப்போது ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள விரும்புகிறது. ஆனால் இப்போதைக்கு நான் அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்கமாட்டேன்," என்றார்.

    அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்து ஊடகங்களில் பல்வேறு விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில் இந்த அறிக்கை வந்துள்ளது.

    அமெரிக்காவின் தாக்குதல்களில் இரானின் பல ராணுவ தளங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  19. ஜிம்பாப்வே வீரர் முசர்பானியை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்

    முசர்பானி - ஐபிஎல்

    பட மூலாதாரம், Getty Images

    ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிளெஸிங் முசர்பானியை ஐபிஎல் 2026 தொடருக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

    பிசிசிஐ-யின் அறிவுறுத்தலால் கேகேஆர் அணியிலிருந்து விலக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தாஃபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று சில செய்திகள் வந்தாலும், அதை நைட் ரைடர்ஸ் நிர்வாகம் உறுதி செய்யவில்லை.

    முசர்பானி அணியில் இணைந்திருக்கிறார் என்று மட்டுமே நைட் ரைடர்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யாருக்குப் பதில் அவர் மாற்று வீரராக இணைந்திருக்கிறார் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. தற்போது அந்த அணியின் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவும் காயமடைந்திருக்கிறார். அவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையின்போது காயமடைந்து வெளியேறியிருந்தார்.

    இந்நிலையில், கொல்கத்தா அணியில் இணைவதற்காக முசர்பானி பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்திலிருந்து விலகியிருப்பதாக இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ, கிரிக்பஸ் போன்ற தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    பிஎஸ்எல் ஏலத்தில் ஏலம் போகாத முசர்பானி, இஸ்லாமாபாத் யுனைடட் வீரர் ஷமார் ஜோசஃப் காயமடைந்ததால் அவருக்குப் பதில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஐபிஎல் தொடர் மார்ச் 28 தொடங்கவுள்ள நிலையில், பிஎஸ்எல் தொடர் மார்ச் 26-ம் தேதியே தொடங்குகிறது. அதனால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிஎஸ்எல் தொடரிலிருந்து முசர்பானி விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட முசர்பானி, இந்தத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சராசரியாக ஒவ்வொரு 11 பந்துக்கும் அவர் 1 விக்கெட் கைப்பற்றியிருந்தார்.

  20. இரான் மீது அடுத்த வாரம் அமெரிக்கா ஒரு பெரிய தாக்குதலை நடத்தும் - டிரம்ப்

    டொனால்ட் டிரம்ப்

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸிற்கு அளித்த பேட்டியில், அடுத்த வாரம் இரான் மீது அமெரிக்கா "மிகவும் வலுவான தாக்குதலை" நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

    "நாங்கள் ஏற்கனவே அவர்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம், அதிலிருந்து அவர்கள் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்" என்று டிரம்ப் கூறினார்.

    போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கேட்கப்பட்ட போது, ​​அவர், "அதைக் என்னால் உங்களிடம் சொல்ல முடியாது," என்றார்.

    அவர் மேலும், "எனக்கென ஒரு கணிப்பு இருக்கிறது; ஆனால் போர் தரும் பயன் என்ன? அந்த பலனைப் பெற எவ்வளவு காலம் அவசியமோ, அவ்வளவு காலம் போர் நீடிக்கும். அவர்கள் (இரான்) முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்," என்று கூறினார்.

    இரானின் புதிய அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனேயி குறித்து, "அவர் காயமடைந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவர் ஏதோ ஒரு வடிவத்தில் உயிரோடு இருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார்.

    ஹோர்முஸ் நீரிணை குறித்துப் பேசுகையில், தேவைப்பட்டால் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கும் அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் என்று டிரம்ப் கூறினார். "என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறி, சுமூகமான பயணத்திற்கான நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

Trending Now