காணொளி: ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை இவர்கள் எதிர்ப்பது ஏன்?
திருச்சியில் இருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவில் ஸ்ரீரங்கம் அமைந்துள்ளது. 108 வைணவ கோவில்களில் முதன்மையானதாக இந்தக் கோவில் பார்க்கப்படுகிறது.
பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்ற கோவிலாக உள்ள ஸ்ரீரங்கம், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறை கூறுகிறது.
236 அடி ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்களுடன் 156 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றினால் சூழப்பட்ட திருநாவலந்தீவு என்ற தீவு பகுதியில் கோவில் அமைந்துள்ளது.
கோவிலைச் சுற்றியுள்ள உத்தர வீதிகள், சித்திரவீதிகள், அடைய விளைஞ்சான் எனப்படும் கோவில் பரிகார வீதிகள் என 329 ஏக்கர் நிலத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
'கோவிலைச் சுற்றியுள்ள அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கே சொந்தம்' என கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பால் தங்களின் வாழ்வாதாரமே பறிபோய்விட்டதாகக் கூறி ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி ஆற்றின் கரையோரம் மிக அமைதியாக காட்சியளிக்கும் ஸ்ரீரங்கத்தில் அடிமனை விவகாரம் ஏன் பேசுபொருளாக மாறியது என்பதைக் கண்டறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



