You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டன் வரை இரான் ஏவுகணைகள் தாக்குமா? டியாகோ கார்சியா 'தாக்குதல்' எழுப்பும் கேள்விகள்
- எழுதியவர், நிக் எரிக்சன்
- பதவி, பிபிசி உலக சேவை
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் உள்ள பிரிட்டன் -அமெரிக்கக் கூட்டு ராணுவத் தளத்தை நோக்கி இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியிருப்பது, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலின் வெளிப்படையான தீவிரத்தைக் காட்டுகிறது.
குறிவைக்கப்பட்ட இலக்கு தாக்கப்படவில்லை, ஆனால் போர் தொடங்கிய பிறகு இவ்வளவு நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று இஸ்ரேல் ராணுவம் (ஐடிஎப்ஃ) தெரிவித்துள்ளது.
ஏவுகணைகளை ஏவியதை இரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, இரானிய ஊடகங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டியே இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தோல்வியுற்ற தாக்குதலின் விளைவுகள் மற்றும் இது எதிர்காலத்தில் மற்ற சாத்தியமான இலக்குகளுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து நிபுணர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர்.
உதாரணமாக, பெர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பியத் தலைநகரங்கள் எதிர்காலத்தில் குறிவைக்கப்படலாமா?என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், லண்டனை அடையும் திறன் கொண்ட நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் இரானிடம் இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ள கூற்றை "உறுதிப்படுத்துவதற்கான எந்த மதிப்பீடும் இல்லை" என்று பிரிட்டன் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"இரானின் ஏவுகணைத் திட்டம் நீண்ட காலமாகச் சர்வதேசக் கண்காணிப்பின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது" என்று கூறும் பிபிசி நியூஸ் பெர்ஷியனின் கோன்சே ஹபிபியாசாத்,"தனது ஏவுகணை மேம்பாடு முற்றிலும் தற்காப்பு சார்ந்தது மற்றும் தேசியத் தடுப்பு உத்தியை அடிப்படையாகக் கொண்டது என்று இரான் கூறினாலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் பிராந்தியப் பாதுகாப்புச் சூழலை மாற்றக்கூடும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்"என்றும் குறிப்பிட்டார்.
இரானின் அணுசக்தி லட்சியங்கள் குறித்த கவலைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் தாக்குதலைத் தொடங்கிய போது மேலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன.
டியாகோ கார்சியா அமைந்துள்ள சாகோஸ் தீவுகள், இரானில் இருந்து சுமார் 3,800 கி.மீ தொலைவில் உள்ளன.
பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் சிஎன்என் போன்ற நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன, ஆனால் எந்த ஆயுதமும் அதன் இலக்கை அடையவில்லை என்று அவை தெரிவித்தன.
ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நடுவானில் தோல்வியடைந்ததாகவும், மற்றொன்று அமெரிக்கப் போர்க்கப்பலால் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் துல்லியமானவை என்று பிபிசி கருதுகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல நகரங்கள் இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும், இரான் இத்தகைய திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கத் திட்டமிட்டிருந்ததைக் கடந்த ஆண்டே வெளிப்படுத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர், சாகோஸ் தீவுகளை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்ட பிறகு, ஒரு சமூக ஊடக வீடியோவில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
"இரான் 4,000 கி.மீ தூரம் செல்லக்கூடிய இரண்டு நிலைகளைக் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது. இந்த ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்குவதற்காக ஏவப்படவில்லை" என்று அவர் கூறினார்.
மேலும், "அவற்றின் தாக்குதல் வரம்பு ஐரோப்பாவின் தலைநகரங்களை அடையும். பெர்லின், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய அனைத்தும் நேரடி அச்சுறுத்தல் எல்லைக்குள் உள்ளன"என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பாதுகாப்பு நிபுணரும், பிரிட்டன் கூட்டுப் படைக் கட்டளையகத்தின் முன்னாள் தலைவருமான ஜெனரல் சர் ரிச்சர்ட் பரோன்ஸ் உட்பட மற்றவர்கள் பிபிசியிடம் கூறுகையில், இவை அனைத்தும் இரானின் ஏவுகணை இருப்பு மற்றும் அவை எட்டும் தூரம் குறித்து மறு மதிப்பீடு செய்ய நிர்ப்பந்தித்துள்ளன என்று தெரிவித்தார்.
"இதற்கு முன்பு இரானின் ஏவுகணைகள் 2,000 கி.மீ தூரம் பாயும் திறன் கொண்டவை என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் டியாகோ கார்சியா 3,800 கி.மீ தொலைவில் உள்ளது."
இரான் இதுவரை தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்குத் தானே ஒரு வரம்பை விதித்துக்கொண்டதாகவும், அவற்றின் வரம்பை 1,240 மைல்களாக (2,000 கி.மீ.) மட்டுப்படுத்தியதாகவும் கூறிவந்தது.
இதன் பொருள், இஸ்ரேல் இரானுடைய ஏவுகணைகளின் தாக்குதல் எல்லைக்குள் இருந்தது, ஆனால் ஐரோப்பா இல்லை என்பதாகும்.
இது ஒரு அரசியல் ரீதியான தேர்வு என்றும், ஏவுகணைகளைத் தயாரிப்பதில் உள்ள தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளால் அல்ல என்றும் ராணுவத் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும் மறைந்த ஆயதுல்லா அலி காமெனயி 2021-ஆம் ஆண்டில் கூறியிருந்தார்.
அவர் இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தலைத் தொடர விரும்பினார். ஆனால் இரானின் இலக்கில் இல்லாத ஐரோப்பாவை அச்சமடையச் செய்ய விரும்பவில்லை.
இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பரில், இரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசுத் தொலைக்காட்சியில் கூறுகையில், ஐ.ஆர்.ஜி.சி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால் அந்த ஏவுகணையின் தூரம் குறித்த விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை.
ஏவுகணை வரம்பு திறன்கள்
'டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தியின்படி, இரானின் விண்வெளித் திட்டம் என்பது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை அது ஏற்கனவே உருவாக்கியிருக்கலாம் என்பதையே குறிக்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் தேவைப்படும் போது இந்தத் தொழில்நுட்பத்தை இரான் பயன்படுத்தக் கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
சில ஆய்வாளர்களும் இதனை ஒப்புக்கொள்கிறார்கள்.
லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் முனைவர் கரின் வான் ஹிப்பல் பிபிசி செய்தியிடம் கூறுகையில், "ஏவுகணைகள் டியாகோ கார்சியாவை அடைந்தன என்று வைத்துக்கொண்டால்... இரானியர்கள் 10,000 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உருவாக்கி வருகின்றனர், இருப்பினும் அவற்றை நாம் இன்னும் செயல்பாட்டில் காணவில்லை," என்றார்.
இதன் பொருள் இரானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியைச் சென்றடையும் சாத்தியம் உள்ளது என்பதாகும்.
இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சி, இரானின் ஏவுகணை வரம்பு மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், இந்த ஏவுகணைகள் இடையில் தடுத்து நிறுத்தப்படாமல் இருந்திருந்தாலும் கூட, அவை தங்களது இலக்கை அடைந்திருக்குமா என்பது சந்தேகமே என்று சிலர் கூறுகின்றனர்.
பிரிட்டனின் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஸ்டீவ் ரீட் பிபிசியிடம் கூறுகையில், "இரானியர்கள் பிரிட்டனைக் குறிவைக்கிறார்கள் என்றோ அல்லது அவர்கள் நினைத்தாலும் அவ்வாறு செய்ய முடியும் என்பதற்கோ எந்தவொரு குறிப்பிட்ட மதிப்பீடும் இல்லை," என்றார்.
இவ்வளவு நீண்ட தூரத் தாக்குதல்களை நடத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம், அதாவது ஏவுகணைகளை அவ்வளவு தூரத்தில் கட்டுப்படுத்தும் மற்றும் வழிநடத்தும் திறன் இரானிடம் கைவசம் உள்ளதா என்பதே இப்போதைய முக்கியக் கேள்வியாகும்.
மேலும் இதில் ஒரு வெளிப்படையான உளவியல் அம்சமும் உள்ளது.
இரான் இந்த இலக்குகளைத் தாக்குவதை ஒருபோதும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாகத் தனது நோக்கம் மற்றும் தடுப்பு ஆற்றல் குறித்த தெளிவான எச்சரிக்கைச் செய்தியை அனுப்பவே இரான் இவ்வாறு செய்ததாகவும் சிலர் கருதுகிறார்கள்.
முன்னாள் இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறை அதிகாரியும், தற்போது டெல் அவிவ் நகரைத் தளமாகக் கொண்ட தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் பணியாற்றுபவருமான டேனி சிட்ரினோவிச் லண்டனின் 'தி இன்டிபென்டன்ட்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "நாளை அவர்கள் லண்டன் அல்லது பாரிஸைத் தாக்குவார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை, ஆனால் என்னைப் பொறுத்தவரை இது அவர்களின் தற்காப்பைக் கட்டமைக்க உதவும் மற்றொரு அம்சம் என நான் நினைக்கிறேன்" என்றார்.
இந்த வாரம் இந்தியப் பெருங்கடலில் நடந்த நிகழ்வுகளுக்கு இஸ்ரேலின் எதிர்வினை ஒரு ஆதரவு திரட்டும் முழக்கமாகவும் கருதப்படலாம்.
ஐரோப்பாவிற்கான முன்னாள் நேட்டோ துணைத் தளபதி ஜெனரல் சர் ரிச்சர்ட் ஷெரிஃப், பிபிசியிடம் கூறுகையில், "நிச்சயமாக இஸ்ரேல் இதைத்தான் சொல்லப்போகிறது, ஏனெனில் போரை விரிவுபடுத்துவதும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து மற்ற நாடுகளை உள்ளே கொண்டு வருவதும் அவர்களின் விருப்பமாகும்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "நாம் அதை எதிர்க்க வேண்டும். இது தெளிவான முடிவு அல்லது உத்தி இல்லாத டிரம்பின் போர், இது ஒரு சிக்கலான புதைகுழியாக மாறுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே அணுசக்தித் திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக எங்களிடம் கூறப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வரும் எதையும் நாம் நம்ப முடியாது"என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு