You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சிக்னல் அணைப்பு' - 2 இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரு திரவ பெட்ரோலிய எரிவாயு கப்பல்களான நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகியவை கடந்த சனிக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளன.
கப்பல்களின் பயணத்தை கண்காணிக்கும் இணையதளம் மரைன் டிராபிக் வழங்கிய தகவலின்படி, இந்த இரண்டு கப்பல்களும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன.
கப்பல்களின் பயணத் தகவல்கள்படி, நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகிய இரு கப்பல்களும் கத்தாரில் உள்ள துறைமுகத்தில் எரிவாயுவை ஏற்றியுள்ளன.
அதன் பிறகு அவை ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது தானியங்கி அடையாள அமைப்பு (AIS - ஏஐஎஸ்) என்ற சிக்னலை அணைத்துவிட்டு பயணம் செய்துள்ளன.
ஏஐஎஸ் என்பது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சிக்னல். இதன் மூலம் கப்பல்களின் பயணத்தை இணையத்தில் கண்காணிக்கலாம்.
மேலே உள்ள வரைபடத்தில் காட்டப்படும் புள்ளி கோடு அந்த கப்பல்கள் எவ்வாறு சென்றிருக்கலாம் என்று கணிக்கப்பட்ட பாதையைக் காட்டுகிறது.
மார்ச் 14 அன்று, அந்த எரிவாயு கப்பல்கள் ஏஐஎஸ் சிக்னலை அணைத்திருந்த நேரத்தில், அந்தப் பகுதியில் இரண்டு இந்தியப் போர்க் கப்பல்கள் இருப்பதையும் காண முடிகிறது.
நந்தா தேவி கப்பல், இரானின் கேஷம் தீவில் பல நாட்கள் நின்றிருந்தது. அந்த கப்பல் நாளை இந்தியாவின் கண்ட்லா துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு கப்பலான சிவலிக் இன்று காலையே இந்தியாவின் முந்தரா துறைமுகத்தை வந்து சேர்ந்தது.
ஜெய்சங்கர் கூறியது என்ன?
இரானுடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகள் இந்தியக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வர உதவியுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முன்னதாக தெரிவித்தார்.
இந்திய கப்பல்கள் செல்வதற்கு 'சாதாரண' அல்லது 'நிரந்தர ஒப்பந்தம்' எதுவுமில்லை என்றும், இதற்கு 'இரான் எதையும் பிரதிபலனாகப் பெறவில்லை' என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பைனான்சியல் டைம்ஸ்' இதழிடம் தெரிவித்தார்.
அவர் அந்தப் பேட்டியில், "நான் தற்போது அவர்களுடன் பேசி வருகிறேன். எனது பேச்சுவார்த்தை சில முடிவுகளைத் தந்துள்ளது. இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பலன் அளிக்கும் பட்சத்தில், இயல்பாகவே நான் இதைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்." என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு