பாகிஸ்தானை பாராட்டிய டிரம்ப் - இந்திய பிரதமர் மோதி குறித்து கூறியது என்ன?

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரானுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தான் தனிப்பட்ட முறையில் இஸ்லாமாபாத் செல்லக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைப் பாராட்டியதுடன், அவரைத் தனது 'நல்ல நண்பர்' என்றும் குறிப்பிட்டார்.

அமைதி செயல்முறைக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தற்போது தெஹ்ரானில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை இரவு (இந்திய நேரப்படி) அதிபர் மசூத் பெசெஷ்கியானையும் அவர் சந்தித்தார்.

டொனால்ட் டிரம்ப் என்ன கூறினார்?

இரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த டிரம்ப், "பாகிஸ்தான் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நான் இஸ்லாமாபாத் செல்ல முடியும். பாகிஸ்தானில் ஒப்பந்தம் கையெழுத்தானால், நான் இஸ்லாமாபாத் செல்ல முடியும்" என்று கூறினார்.

பாகிஸ்தானின் தலைமையைப் பாராட்டிய டிரம்ப், "பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷலும் பிரதமரும் மிகச்சிறந்த பணியைச் செய்து வருகின்றனர். நான் அங்கு செல்லக்கூடும்," என்றார்.

செவ்வாய்க்கிழமை அன்று 'நியூயார்க் போஸ்ட்' இதழுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கலாம் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோதிக்கு பாராட்டு

இது தவிர, மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் சமீபத்தில் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் பற்றிக் குறிப்பிட்ட அவர், "நான் அவருடன் மிகச்சிறந்த உரையாடலை மேற்கொண்டேன். அவர் எனது நண்பர். அவர் மிகச்சிறந்த பணியைச் செய்து வருகிறார்" என்று கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையிலான அமைதி முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் ஒரு தூதுக்குழுவுடன் தெஹ்ரானை வந்தடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு தாமதமாக அவர் இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானிடமும் பேசினார்.

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, 21 மணி நேர விவாதத்திற்குப் பிறகு எந்த முடிவும் எட்டப்படாமல் கடந்த சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நிறைவடைந்தது.

அந்தப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கத் தரப்பிலிருந்து அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்கத் தரப்பைச் சேர்ந்த பிற அதிகாரிகள் சனிக்கிழமை இஸ்லாமாபாத் வந்தடைந்தனர்.

இரானிய தூதுக்குழுவிற்கு இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகெர் காலிபாப் தலைமை தாங்கினார்.

'இரான் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்'

இதுதவிர, வியாழக்கிழமை இரவு (இந்திய நேரப்படி), அமெரிக்காவின் நெவாடாவில் நடைபெற்ற 'டாக்ஸ் டே ரவுண்ட்டேபிள்' நிகழ்வின் போது இரான் போர் விவகாரம் குறித்தும் டொனால்ட் டிரம்ப் பேசினார்.

இரான் போர் 'மிக விரைவில் முடிவுக்கு வர வேண்டும்' என்று டிரம்ப் கூறியுள்ளார்.

"இரான் போர் விவகாரம் நன்றாக முன்னேறி வருகிறது என்று நான் கூறுவேன்" எனக் குறிப்பிட்ட அவர், அது "மிக விரைவில் முடிய வேண்டும்" என்றும் கூறினார்.

இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த விவாதங்கள் "தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றும், ஆனால் அதற்கான நேரமோ அல்லது இடமோ இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டு, இரானியக் கப்பல்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கினால், போர்நிறுத்தம் மீறப்படலாம் என்று இரான் கூறியிருந்தது.

இரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை திங்கட்கிழமை முதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 24 மணிநேரத்தில் எந்தக் கப்பலும் முற்றுகையை மீறவில்லை என்றும், அதே நேரத்தில் ஓமன் வளைகுடாவில் ஆறு வணிகக் கப்பல்கள் பின்வாங்கிச் செல்ல வேண்டியிருந்தது என்றும் புதன்கிழமை அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

இதற்கிடையில், இரானின் புதிய அச்சுறுத்தல்களுக்கு முன்னதாக பதிவு செய்யப்பட்ட 'பாக்ஸ் நியூஸ்' உடனான நேர்காணலில், கூடுதல் விவரங்களை அளிக்காமல், ஹோர்முஸ் நீரிணை "திறக்கப்பட்டு வருகிறது" என்றும் "கப்பல்கள் திரும்பி வருகின்றன" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

இரான் குறித்துப் பேசிய டிரம்ப், "எங்கள் பணி இன்னும் முடிவடையவில்லை", ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கு "மிக நெருக்கத்தில்" இருப்பதாகத் தான் நம்புவதாகவும், இரானுடன் அமெரிக்கா ஒரு "சிறந்த ஒப்பந்தத்தை" செய்ய முடியும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம்

முன்னதாக, தெற்கு லெபனானில் இரான் ஆதரவுடன் செயல்படும் ஆயுதக் குழுவான ஹெஸ்பொலா, இஸ்ரேலுடன் அமல்படுத்தப்பட்டுள்ள போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் தெரிவித்திருந்தார்.

"இந்த இக்கட்டான நேரத்தில் ஹெஸ்பொலா கண்ணியமாகவும் முறையாகவும் நடந்துகொள்ளும் என்று நான் நம்புகிறேன்" என்று அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

மேலும், "அவர்கள் அவ்வாறு செய்தால், அது அவர்களுக்கு ஒரு 'சிறந்த' காலமாக அமையும். இனி கொலைகள் நடக்காது. இறுதியாக அங்கு அமைதி நிலவ வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்துள்ளதாக டிரம்ப் தனது மற்றொரு பதிவின் மூலம் அறிவித்திருந்தார்.

இந்தப் போர்நிறுத்தம் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்குத் தொடங்கியது.

போர்நிறுத்தத்தை அறிவித்த அந்தப் பதிவில், தான் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இந்தப் போர்நிறுத்தம் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவின் தளமான லெபனானுக்கும் இடையிலானது.

போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, "ஹெஸ்பொலாவின் தாக்குதல்களுக்கு மட்டுமே" இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்கும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்கப் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தார்.

நிலையான அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமானால், இரான் ஆதரவு பெற்ற அந்தக் குழு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு