கொரோனா வைரஸ்: அமேசான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் தெரியுமா? - இதுதான் காரணம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
அமேசான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் தெரியுமா?
அமெரிக்கா நியூயார்க் கிடங்கில் பணியாற்றிய அமேசான் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம். கொரோனா பெருந்தொற்று தொடர்பாக போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி அமேசான் ஊழியர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். இதன் காரணமாகவே அந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியூயார்க் அட்டர்னி ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். அமேசான் நிறுவனம் தாங்கள் மேற்கொண்ட முடிவு சரியானது என வாதிடுகிறது.

- கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?
- கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்

கொரோனா வைரஸ்: டெல்லி நிசாமுதீன் மசூதியில் இருந்த தமிழர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
டெல்லி, தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டான இடமாக டெல்லி நிசாமுதீனில் உள்ள 'பங்லேவாலி மஸ்ஜித்' என்று அழைக்கப்படும் நிசாமுதீன் மர்காஸ் மசூதி தெரிவிக்கப்படுகிறது.
இங்கு நடந்த 'தப்லிக்- ஈ - ஜமாஅத்' நிகழ்வில் கலந்துகொண்டு தெலங்கானா திரும்பியவர்களில் ஆறு பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

கபசுரக்குடிநீர் கொரோனவை கட்டுப்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images
"அறிவியல் ரீதியாக தற்போது வரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கபசுரக்குடிநீர் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன," என தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தாக்கத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் இரண்டு சதவீம் பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் கொரொனா தொற்று காரணமாக இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.இன்றைய தினம் புதிதாக 20 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

மலேசியாவில் நாடு திரும்பும் நபர்களால் தொற்று பரவும் ஆபத்து

பட மூலாதாரம், Getty Images
பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்களால் உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற மலேசியர்களைத் தேடி வருவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று மேலும் ஆறு பேர் உயிரிழந்ததையடுத்து மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று புதிதாக மேலும் 140 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












