சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க வரைபடம் - சமூக வலைதளத்தில் கிண்டல்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியாவில் சீனாவைப் புறக்கணிக்க வலியுறுத்தி நடந்த ஒரு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சீன வரைபடத்துக்கு பதிலாக அமெரிக்க வரைபடத்தை ஏந்தி வந்தது சமூக வலைத் தளத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது.

கடந்த ஜூன் 15-16 தேதிகளில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடன் நடந்த கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கொல்கத்தாவில் கடந்த ஜூன் 19-ம் தேதி சீனாவுக்கு எதிரான போராட்டக்காரர்கள் நடத்திய ஒரு போராட்டத்தில் இடம்பெற்றிருந்த பதாகைதான் சமுகவலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என ஷி ஜின்பிங் படத்துடன் ஒரு நாட்டின் வரைபடமும் அந்தப் பதாதையில் இடம்பெற்றிருந்தது. சீன நாட்டின் வரைபடத்துக்கு பதில் அமெரிக்க நாட்டின் வரைபடம் அதில் இருந்ததே கேலிக்கு காரணம்.

ஆனால் வேண்டுமென்றுதான் அந்தப் பதாகையில் அமெரிக்க வரைபடம் பயன்படுத்தப்பட்டதாகவும், சீனாவுக்கு பதிலாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய இந்தியா விரும்புவதாகவும் அதை உணர்த்தும் விதமாவே இந்த பதாகையில் அமெரிக்கப் படம் இடம்பெற்றுளளதாகவும் ரெட்டிட் சமூகவலைத்தளத்தில் ஒரு பயனர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வேறொரு போராட்டத்தில் அக்கட்சியினர் சீனப் பொருட்களை உடைத்து நொறுக்கினர்.

இந்து அமைப்புகளும் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தின.

ஜூன் 17-ம் தேதி நடந்த போராட்டம் ஒன்றில் சீனாவுக்கு எதிரான போராட்டக்காரர்கள் சீன பொம்மைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி சாலையில் அவற்றை கொட்டி மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: