குச்சி ஐஸ் போல இட்லி: சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியது ஏன்?

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இட்லி குறித்து சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் ஒன்று நடைபெற்று வருகிறது.

அது என்ன இட்லி குறித்த வார்த்தை போர் என நீங்கள் ஆச்சரியமடையலாம்.

மேலே உள்ள புகைப்படம்தான் அதற்கு காரணம்.

இந்த புகைப்படத்தில் குச்சி ஐஸ் போல காட்சியளிக்கும் இட்லி சாம்பாரில் முக்கப்பட்டுள்ளது.

இந்த படம் பெங்களூருவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த புதுவித யோசனையை பலர் பாராட்டினாலும் சிலர் இதுகுறித்து கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் சிஇஒ ஆனந்த் மகேந்திரா இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து இந்த புதுவித யோசனை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பலர் ஆதரவும் எதிப்பும் தெரிவித்திருந்தனர்.

இட்லி என்பது கைகளால் உண்ணப்படுவதுதான் வழக்கம் அதை இவ்வாறு எப்படி மாற்ற முடியும் என பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

பலர் இது தேவையில்லாத `புதுமை` என்று தெரிவித்திருந்தனர்.

பலர் பெங்களூரு எப்போதும் உணவில் புத்தாக்கம் செய்யப் பெயர்போனது என்றும் தெரிவித்திருந்தனர்.

பொதுவாக உணவு என்று வரும்போது அது பாரம்பரியம் தொடர்பானதாக பார்க்கப்படுவதால் அதுகுறித்த விவாதங்களும் தீவிரமானதாகவே அமைந்துவிடுகின்றன.

கடந்த ஆண்டு பிரிட்டனை சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் இட்லியை சுவாரஸ்யமற்ற உணவு என்று தெரிவித்ததால் பெருமளவில் கண்டனங்கள் எழுந்தன என்பது நினைவில் இருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :