‘இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்…பிரதமர் பொய் சொல்கிறார்’- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

பட மூலாதாரம், X/@RahulGandhi
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை மத்திய அரசு ஏமாற்றி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமரும் அவரது அமைச்சரவையும் பொய் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
"வங்கதேசத்திற்கு, அமெரிக்காவிற்கு ஆடை ஏற்றுமதி செய்வதற்கு 0% வரிச் சலுகை வழங்கப்படுகிறது. அதற்கான ஒரே நிபந்தனை, அது அமெரிக்கப் பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதுதான். இந்திய ஆடைகள் மீது 18% வரி அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கதேசத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது, மோதி அரசின் அமைச்சர், 'நமக்கும் இந்தச் சலுகை வேண்டுமென்றால், நாமும் அமெரிக்காவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும்’ என பதிலளித்தார்” என ராகுல் காந்தி கூறினார்.
"நாம் அமெரிக்கப் பருத்தியை இறக்குமதி செய்தால், நம்முடைய சொந்த விவசாயிகள் அழிந்து போவார்கள். அதை நாம் இறக்குமதி செய்யாவிட்டால், நமது ஜவுளித் தொழில்துறை சீரழிந்துவிடும். இப்போது வங்கதேசம், இந்தியாவிலிருந்து பருத்தி இறக்குமதியைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது."
“ஜவுளித் தொழில் மற்றும் பருத்தி விவசாயம், இந்தியாவில் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இவற்றைச் சார்ந்துள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் என இரு தரப்பினரின் நலன்களையும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கூறிய ராகுல் காந்தி, “இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் இந்த இரு துறைகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்றும் குறிப்பிட்டார்.






















