"சாத்தானின் மலம்": கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு

    • எழுதியவர், டிம் ஹார்ஃபோர்ட்
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அது 1859ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27ஆம் தேதி. அமெரிக்க வணிகரான எட்வின் டிரேக், தன்னைத் திகைக்க வைத்த ஒரு செய்தியைப் பெற்றார். "உன் கடன்களை அடைத்துவிடு; தோல்வியை ஒப்புக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பிச் செல்" என்பதே அந்தச் செய்தி.

அப்போது, மேற்கு பென்சில்வேனியாவின் நிலப்பரப்பில் கண்டறியப்பட்ட 'பாறை எண்ணெய்' (rock oil) எனப்படும் ஒரு வகை பழுப்பு நிற கச்சா எண்ணெயை டிரேக் தேடிக்கொண்டிருந்தார்.

விளக்குகளை ஏற்றுவதற்காக, இந்த 'பாறை எண்ணெயில்' இருந்து மண்ணெண்ணெயை பிரித்தெடுக்க டிரேக் திட்டமிட்டிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில், விளக்குகளை எரியூட்ட திமிங்கில எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், அதன் விலை படிப்படியாக உயர்ந்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில், அவர் அந்தச் செய்தியைப் பெறுவதற்குச் சற்று முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஓர் அகழ்வாராய்ச்சியின்போது எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு எண்ணெய் வெளியேறியபோது, அதன் அழுத்தம் மிக அதிகமாக இருந்தது. அதுவொரு நீரூற்று போல எழுந்து, 21 மீட்டர் ஆழத்திலிருந்து எண்ணெய் தரைமட்டத்தை நோக்கி வரத் தொடங்கியது.

இந்த நிகழ்வு திமிங்கிலங்களின் உயிரைக் காப்பாற்றியதுடன், உலகையே மாற்றியமைக்கத் தொடங்கியது.

எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு

டிரேக் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தெற்கே நிகழ்ந்த சம்பவங்கள், அடுத்து வந்த பல ஆண்டுகளுக்குப் பயனுள்ள தடயங்களை வழங்கவிருந்தன.

'நியூயார்க் டைம்ஸ்' இதழின் ஒரு செய்திப்படி, 1864ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவிலுள்ள 'பிட்ஹோல் சிட்டி'யில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்த இடத்தைச் சுற்றியுள்ள பல மைல் சுற்றளவுக்குள் 50 பேர் கூட வசிக்கவில்லை.

ஆனால், எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட ஓராண்டுக்கு உள்ளாகவே, பிட்ஹோல் நகரில் பத்தாயிரம் பேர் குடியேறத் தொடங்கினர். 50 தங்கும் விடுதிகள், நாட்டின் மிகவும் பரபரப்பான தபால் நிலையங்களில் ஒன்று, இரண்டு தந்தி மையங்கள், கேளிக்கை விடுதிகள் அங்கு திறக்கப்பட்டன.

இந்த மாற்றம் சிலரை செல்வந்தர்களாக்கியது. ஆனால், ஓர் உண்மையான பொருளாதாரத்துக்குத் தேவையான பிற அடிப்படை அம்சங்களை பிட்ஹோல் சிட்டி கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக, ஓர் ஆண்டுக்கு உள்ளாகவே பிட்ஹோலின் செழிப்பு விரைவில் மங்கிப்போனது.

எண்ணெயை சார்ந்திருந்த பிட்ஹோலின் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையாமல் தோல்வியடைந்தது. ஆனால், எண்ணெய் மீதான தாகம் மட்டும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருந்தது.

உலகின் ஆற்றல் தேவைகள்

தற்போது உலகப் பொருளாதாரம் எண்ணெயை சார்ந்துள்ளதாகவும் அது உலகின் மூன்றில் ஒரு பங்கு ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் கூறலாம்.

இது நிலக்கரியைவிட அதிகம் மற்றும் அணுசக்தி, நீர்மின் சக்தி, மரபுசாரா ஆற்றல் மூலங்களின் ஒருங்கிணைந்த திறனைவிட இரண்டு மடங்காகும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு நமது மின்சாரத் தேவைகளில் கால் பகுதியை பூர்த்தி செய்வதுடன், நெகிழித் துறைக்கு மூலப் பொருட்களையும் வழங்குகின்றன.

இவற்றோடு, போக்குவரத்தும் பங்கு வகித்தது. பெட்ரோலை யார் வாங்குவார்கள் என்று எட்வின் டிரேக் வியந்தபோது, உள்பொருள் இயந்திரம் (கம்பஷன் இன்ஜின்) அவரது கேள்விக்கு பதிலளித்தது.

கார்கள் முதல் லாரிகள் வரை, சரக்குக் கப்பல்கள் முதல் ஜெட் விமானங்கள் வரை, நம் உலகை இயங்க வைப்பது எண்ணெய்தான்.

எனவே, உலகிலேயே மிக முக்கியமான விலை எண்ணெய் விலைதான் என்பதில் ஆச்சரியமில்லை.

கடந்த 1973இல், சில அரபு நாடுகள் சில பணக்கார நாடுகளுக்கு எண்ணெய் விற்பனைக்குத் தடை விதித்தபோது, வெறும் ஆறு மாதங்களுக்குள் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 3 டாலரில் இருந்து 12 டாலராக உயர்ந்தது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. 1978, 1990, 2001 ஆகிய ஆண்டுகளில், எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து அமெரிக்கா பொருளாதார மந்தநிலைகளைச் சந்தித்தது.

சில பொருளாதார நிபுணர்கள், 2008ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு எண்ணெய் விலையில் ஏற்பட்ட வரலாறு காணாத உயர்வே காரணம் என்றுகூட நம்புகிறார்கள். இருப்பினும், அதற்கு வங்கி நெருக்கடியே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

பொதுவாக எண்ணெய் விலைகள் உயரும்போது, பொருளாதாரங்களும் அதே பாதையில் செல்கின்றன.

ஆனால், நாம் ஏன் இதை இவ்வளவு சார்ந்திருக்கிறோம் என்ற கேள்வியை இது எழுப்புகிறது. எண்ணெயின் வரலாறு குறித்த டேனியல் யெர்கினின் 'தி பிரைஸ்' புத்தகம், வின்ஸ்டன் சர்ச்சில் எதிர்கொண்ட ஒரு தர்மசங்கடத்துடன் தொடங்குகிறது.

கடந்த 1911இல், சர்ச்சில் ராயல் கடற்படையில் (பிரிட்டன் கடற்படை) தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் பேரரசு, விரிவாக்கவாத ஜெர்மனியின் சவாலை, பாதுகாப்பான ஆதாரமான வெல்ஷ் நிலக்கரியால் இயங்கும் புதிய போர்க்கப்பல்களைக் கொண்டு எதிர்கொள்ளுமா அல்லது தொலைதூர பெர்சியாவில் இருந்து (இன்றைய இரான்) வரும் எண்ணெயை கொண்டு எதிர்கொள்ளுமா என்பதைத் தீர்மானிக்கும் முதல் முடிவுகளில் இதுவும் ஒன்று.

இத்தகைய பாதுகாப்பற்ற ஆதாரத்தை ஏன் யார் நம்புவார்கள்? ஏனெனில், எண்ணெயால் இயங்கும் போர்க்கப்பல்கள் விரைவாக வேகம் பிடித்தன, மேலும் குறைவான பணியாளர்களே தேவைப்பட்டனர். அதோடு, அந்தப் போர்க்கப்பல்கள் அதிக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டிருந்தன.

நிலக்கரியைவிட சிறந்த எரிபொருள்

ஏப்ரல் 1912இல் சர்ச்சில் எடுத்த முடிவு, எண்ணெயை நாம் சார்ந்திருக்கும் அதே தர்க்கத்தைப் பிரதிபலித்ததுடன், அப்போதிருந்து அது உலக அரசியலை வடிவமைத்து வருகிறது.

சர்ச்சிலின் முடிவைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கருவூலம், பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் முன்னோடியான ஆங்கிலோ-பெர்சியன் எண்ணெய் நிறுவனத்தில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியது.

கடந்த 1951இல் இரானிய அரசாங்கம் எண்ணெய் நிறுவனத்தை நாட்டுடைமையாக்கியது. பிரிட்டிஷார், "இது எங்கள் நிறுவனம்" என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இரானியர்கள், "இது எங்கள் எண்ணெய்" என்று பதிலளித்தனர். இந்த வாதம், வரவிருந்த பல பத்தாண்டுகளுக்கு உலகம் முழுவதும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

எண்ணெய் துறையில் சில நாடுகள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. சௌதி அரேபியா, தனது பரந்த எண்ணெய் வளத்தின் காரணமாக, உலகின் மிகவும் செல்வம் மிக்க நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

சௌதி அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான 'சௌதி அரம்கோ' ஆப்பிள், கூகுள், அமேசான் ஆகிய நிறுவனங்களைவிட அதிகளவிலான மதிப்பு கொண்டதாக உள்ளது.

உலகின் அதிக லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனமான சௌதி அரம்கோ, சமீபத்தில் ஆளில்லா விமான தாக்குதல்களுக்கு இலக்கானது. (இந்தச் சம்பவம் எண்ணெய் விலைகளை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தக்கூடும்.)

இருப்பினும், சௌதி அரேபியாவின் பொருளாதாரத்தை ஜப்பான் அல்லது ஜெர்மனியின் பல்துறை, வலுவான பொருளாதாரங்களுடன் ஒப்பிட முடியாது. அதைக் காட்டிலும், அது ஒரு பெரிய இடைநிறுத்த மையத்தைப் போலத்தான் இருக்கிறது என்று சொல்லலாம்.

பிற இடங்களில், இராக் முதல் இரான் வரையிலும், வெனிசுவேலா முதல் நைஜீரியா வரையிலும், சில எண்ணெய் வளம் மிக்க நாடுகள் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாகச் செழித்தோங்கின. பொருளாதார நிபுணர்கள் இதை "எண்ணெய் சாபம்" என்று அழைக்கின்றனர்.

கடந்த 1960களின் முற்பகுதியில் வெனிசுவேலாவின் பெட்ரோலிய அமைச்சராக இருந்த ஜுவான் பாப்லோ பெரெஸ் அல்போன்சோ, இதுகுறித்து இன்னும் தெளிவான விளக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் 1975இல் இதை "சாத்தானின் மலம்" என்று அழைத்ததோடு, "நாம் சாத்தானின் மலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்" எனவும் குறிப்பிட்டார்.

எண்ணெய் பிரச்னை ஏன் அதிகமாக உள்ளது?

அதை ஏற்றுமதி செய்வது ஒரு நாட்டின் நாணய மதிப்பை அதிகரிக்கிறது. இது எண்ணெய் தவிர பிற அனைத்தையும் உற்பத்தி செய்வதற்கு அந்த நாட்டில் ஆகும் செலவை அதிகரிக்கக்கூடும்.

அதாவது, உற்பத்தி அல்லது சிக்கலான சேவை தொழில்களை மேம்படுத்துவது கடினமாக இருக்கலாம். வரலாற்று ரீதியாக, பல அரசியல்வாதிகள் தங்கள் நாட்டின் எண்ணெயை தங்களுக்கும் தங்கள் கூட்டாளிகளுக்குமானதாக மாற்ற முயன்றுள்ளனர். சர்வாதிகாரங்கள் பொதுவான ஒன்றானது. பணம் சில விஷயங்களுக்கு நல்லது, ஆனால் அது பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகிறது. அதனால்தான் எண்ணெய்க்கு பதிலாக வேறு மாற்றைப் பயன்படுத்த நாம் முயல்கிறோம். காலநிலை மாற்றம் வெளிப்படையாக மற்றொரு பிரச்னையாக இருக்கிறது.

இருப்பினும், எண்ணெய் நீண்ட காலமாக பேட்டரிகளுக்கு மாற்றாக இருந்து வருகிறது. ஏனெனில், அதுவே தனது சொந்த ஆற்றல் மூலமாக இருக்கிறது. மேலும், இயந்திரங்களை இயக்குவதற்கு இலகுவான, சிறப்பான மூலமாக இருக்கிறது.

ஒரு கிலோகிராம் பெட்ரோலில், 60 கிலோகிராம் பேட்டரிகளுக்கு சமமான ஆற்றல் உள்ளது. அதோடு பயன்பாட்டுக்குப் பிறகு இல்லாமல் மறைந்துவிடும் வசதியான தன்மையைக் கொண்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, காலி பேட்டரிகள் மிகவும் கனமானவை.

ஒரு காலத்தில் எண்ணெய் விலைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் எனத் தோன்றியது. இது "உச்சபட்ச எண்ணெய் விலை" என்று அழைக்கப்பட்டது. இதனால் விலைகள் கடுமையாக உயர்ந்தன. மேலும், தூய்மையான, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இது நம்மைத் தூண்டியது.

ஆனால், உண்மையில் இன்று எண்ணெய் நுகர்வு எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிகமாக இருக்கிறது.

இதற்கான காரணங்களில் ஒன்று, 'ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்' அல்லது 'ஃபிராக்கிங்' எனப்படும் சர்ச்சைக்குரிய முறையின் வேகமான வளர்ச்சி. இதில், எண்ணெய் மற்றும் எரிவாயுவை வெளியேற்றுவதற்காக, நீர், மணல், ரசாயனங்கள் ஆகியவை மிகுந்த அழுத்தத்தில் நிலத்தடியில் செலுத்தப்படுகின்றன.

ஆகவே, உலகம் இன்னும் 'சாத்தானின் மலம்' என்று அழைக்கப்பட்ட எண்ணெயிலேயே மூழ்கிக் கொண்டிருக்கிறது போலத் தெரிகிறது. இந்த நிலை இன்னும் சில காலம் தொடரவும் கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு