You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பேட்டிங் வரிசை பிரமிப்பு தந்தாலும் கவலை தரும் ஒரு பலவீனம்' - சிஎஸ்கே ஒரு பார்வை
- எழுதியவர், வித்யுத் சிவராமகிருஷ்ணன்
- பதவி, சிஎஸ்கே முன்னாள் வீரர்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்த ஆண்டுக்கான டிரேட், ஏலம் எல்லாமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக அமைந்தது என்று நினைக்கிறேன். இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையைத் தனி ஆளாக வென்று கொடுத்த சஞ்சு சாம்சன் அணியில் இணைந்திருப்பது பெரும் பலம். சாம்சன், ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ் என சூப்பர் கிங்ஸின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது. பந்துவீச்சும் ஓரளவு நன்றாகவே இருக்கிறது.
2025 சீசனுக்கான ஏலத்தில் எமோஷனலாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒரே மாதிரியான பல வீரர்களை அவர்கள் வாங்கியிருந்தார்கள். தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் என அவர்கள் அனைவருமே ஒரேபோல் ஆடுபவர்கள். அங்கு வெரைட்டியே இல்லாமல் இருந்தது.
அதன்பிறகு வந்த மாத்ரே, உர்வில் பட்டேல், பிரெவிஸ் போன்ற மாற்றுவீரர்களாக சிறப்பாக அணியில் இணைத்தனர். அதுபோக இம்முறை இரு இளம் நட்சத்திரங்கள் கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர் ஆகியோரை வாங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கடந்த சீசன் இருந்த அணியை விட இந்த சீசன் அணி பலமானதாக இருக்கிறது.
ரவீந்திர ஜடேஜா இல்லாதது நிச்சயம் பெரிய பின்னடைவு தான். ஆனால், அகீல் ஹொசைன் அந்த இடத்துக்கு சிறந்த மாற்றாக இருப்பார். அவரால் பவர்பிளேவில் சிறப்பாகப் பந்துவீச முடியும். கடினமான ஓவர்களை அவரால் சிறப்பாக வீசமுடியும். திறமையான வீரர் அவர். அதனால் அவரை குறைத்து மதிப்பிட்டுவிடவே கூடாது.
ஒட்டுமொத்தமாக கடந்த சீசனை விட இந்த முறை நல்லதொரு அணியை சிஎஸ்கே கட்டமைத்திருக்கிறது.
பலமான பேட்டிங்
சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய பலம் அவர்களின் பேட்டிங் தான். சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய இரு பேட்டர்கள் இருக்கிறார்கள். ஐபிஎல் தொடங்கும்போது இருவருமே சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். சாம்சன் வந்திருப்பது சீரான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைய வழிவகுக்கும்.
துபேவின் சமீபத்திய ஃபார்ம் சிறப்பாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த டி20 உலகக் கோப்பையில் ஃபினிஷராகவும் அவர் நன்கு விளையாடினார். வேகப்பந்துவீச்சுக்கு எதிராகவும் தன்னால் அடித்து ஆட முடியும் என்று காட்டினார். அதனால் அவர் சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்குவார்.
அடுத்ததாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சீரான செயல்பாட்டைக் கொடுப்பார். தற்போது ஓப்பனராக விளையாட போவதாக அவர் அறிவித்திருக்கிறார். சூப்பர் கிங்ஸ் தங்களுடைய அனுபவ ஓப்பனர்கள் அணுகுமுறையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. நிலையான ஒரு வீரர் ஆடுவது மறுபக்கம் சாம்சனுக்கும் நெருக்கடியைக் குறைக்கும்.
டெவால் பிரெவிஸ் மிடில் ஓவர்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர். சுழல், வேகம் இரண்டுக்கு எதிராகவும் அதிரடி காட்டக்கூடியவர். சாம்சன், கெய்க்வாட், மாத்ரே, பிரெவிஸ், துபே என இந்த டாப் 5-ஐ பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது.
சிலபல ஆண்டுகளாக சூப்பர் கிங்ஸ் அணி 180+ ஸ்கோர்களை சேஸ் செய்ய தடுமாறியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒரு போட்டியில் 180 ரன்களை சேஸ் செய்தது. முழுமையான அதிரடி அணுகுமுறைக்கு ஏற்ற அணியாக சூப்பர் கிங்ஸ் இருக்கவில்லை. ஆனால், இம்முறை இந்த பேட்டிங் படை அதையெல்லாம் மாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் கிடைக்காத பெரும் நம்பிக்கையை அது கொடுக்கிறது.
முதல் போட்டியில் பிரெவிஸ் ஆடமாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
பலவீனமான பந்துவீச்சு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல ஏரியாக்கள் சரியாக சிறப்பாகவே இருக்கின்றன. பலவீனம் என்று குறிப்பிட வேண்டுமெனில் அவர்களின் டெத் ஓவர் பந்துவீச்சை குறிப்பிடலாம். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லும்படியான பௌலர் இந்த அணியில் இல்லை.
கலீல் அஹமது எப்படியும் நிச்சயம் டெத் ஓவரில் பந்துவீசுவார். ஆனால், வேறு யார் அங்கு பந்துவீசுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. மேட் ஹென்றி, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் என யார் பந்துவீசப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறி. அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இது ஒருவகையில் அந்த அணியைப் பாதிக்கலாம்.
இந்நிலையில் பெரிதும் நம்பப்பட்ட பௌலரான நாதன் எல்லிஸ் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறியிருக்கிறார். இது பந்துவீச்சை இன்னும் பலவீனமாக்கியிருக்கிறது. அவருடைய இடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் ஸ்பென்சர் ஜான்சனும் முழு ஃபிட்னஸோடு இல்லை என்று தெரிகிறது.
சொல்லப்போனால், சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சன்ரைசர்ஸ் பாணியைக் கடைபிடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. 'பந்துவீச்சு அதிக ரன் போய்விடலாம். பேட்டிங்கில் 20-30 ரன்கள் அதிகமாக எடுத்துவிடலாம்' என்று நினைத்துவிட்டார்களோ என்று நினைக்கிறேன்.
அதேசமயம் சிஎஸ்கே-வின் பேட்டிங் பலப்பட்டிருக்கும் விதம், அந்த பந்துவீச்சில் இருக்கும் குறை பெரிதாகத் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். பிளெமிங் மற்றும் அவரது பயிற்சியாளர் குழு இதை சரியாகக் கையாண்டுவிடுவார்கள் என நம்பலாம்.
கேப்டன் ருதுராஜுக்கு முக்கியமான சீசன்
இந்த சீசன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மிகவும் முக்கியமானது. தற்போது இரண்டாவது முழுமையான சீசன் என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்புகள் இருக்கும். அவரது முடிவுகள் அதிகம் கவனிக்கப்படும்.
அவர் தலைமைப் பண்பில் முன்னேற்றம் காண நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவர் தன் தவறுகளில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக்கொள்வார். தோனியே, "அவராகவே கற்றுக்கொள்ள விட்டுவிட வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். அது நிச்சயம் இந்த சீசனில் நடக்கும்.
என்ன, கடந்த ஆண்டு அவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. காயமடைந்து பாதியில் வெளியேறிவிட்டார். இந்த முறை அந்த அதிர்ஷ்டம் அவர் வசம் இருக்கும் என்று நம்புகிறேன்.
கடந்த ஆண்டு அவருக்கு ஒரு தரமான அணியும் கிடைக்கவில்லை. ஒரு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் கேப்டனின் செயல்பாடும் இருக்கும். அது அவருக்கு கடந்த சீசனில் அமையவில்லை. ஆனால், இப்போது நல்லதொரு அணி அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதனால், நிச்சயம் அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கும். அதை அவரால் பூர்த்தி செய்ய முடியும் என்றும் நான் நம்புகிறேன்.
தோனியின் பங்கு
மஹேந்திர சிங் தோனி காயம் காரணமாக முதல் இரு வாரங்கள் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது துரதிருஷ்டவசமான விஷயம். அதேசமயம் இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
இந்த புதிய சீசன் மஹேந்திர சிங் தோனியின் பங்கு அவ்வளவுதானா என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அவருடைய பங்களிப்பு நிச்சயமாக முடிந்துவிடவில்லை.
என்னைப் பொறுத்தவரை, காயத்திலிருந்து திரும்பியதும் தோனி நிச்சயம் விளையாடுவார். ஆனால், எல்லா போட்டிகளிலும் ஆடுவாரா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சாம்சனும் இருப்பதால் அவரும் கீப்பிங் செய்யக்கூடும். இங்குதான், தோனியை கீப்பராகப் பயன்படுத்தப் போகிறார்களா இல்லை அவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப் போகிறார்களா என்று பார்க்க வேண்டும்.
ஆனால், ஒரு விஷயம் நிச்சயம் - அவர் கண்டிப்பாக விளையாடுவார். இங்கு 'சிஎஸ்கே ஹை பெர்ஃபாமன்ஸ் மையத்தில்' நடந்த பயிற்சி முகாமுக்கு முன்னதாக அவர் ராஞ்சியிலேயே பயிற்சியில் ஈடுபட்டார். அங்கு அவர் தீவிரமாகப் பயிற்சி செய்தார். விளையாடப் போவதில்லை என்றால், அவர் அப்படி பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லையே! அவர் இந்த சீசன் களமிறங்குவது நிச்சயம்.
அதேசமயம், களத்துக்குள் இருப்பதை விட தோனியின் தாக்கம் களத்துக்கு வெளியே தான் இம்முறை அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்கள் தோனியோடு விளையாடும்போது அது அவர்களுக்கு பெரிய வகையில் உதவும். அவர்களால் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
தோனியின் தலைமையில் ஐபிஎல் ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவரைப் போல் இந்த ஆட்டத்தை புரிந்துகொள்ளக்கூடிய, கணிக்கக்கூடிய வீரர் கிடையாது. அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், பேசினால் அதில் நிறைய அர்த்தம் இருக்கும். அதனால்தான், ஒரு 'வழிகாட்டியாக' இந்த அணியில் தோனி பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன்.
இந்த சீசனுக்கான கணிப்பு
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்ட சூப்பர் கிங்ஸ், இம்முறை அதை உடைத்து நிச்சயமாக டாப் 4 இடத்தை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.
இந்த ஆண்டு நிறைய இளம் வீரர்களில் அந்த அணி நிர்வாகம் முதலீடு செய்திருக்கிறது. கடந்த சீசனின் கடைசி கட்டத்தில் இப்படியான இளம் வீரர்கள் தான் நம்பிக்கை கொடுத்தார்கள். அப்படி தரமான வீரர்களை நிறைய அணிக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். அது நிச்சயம் அணிக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியிருக்கிறது. மாத்ரே, பிரெவிஸ், பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, உர்வில் போன்ற இளம் வீரர்கள் அணியின் 'ஹிட்டிங்கை' பன்மடங்கு பலப்படுத்தியிருக்கிறார்கள்.
அதேசமயம் பல அனுபவ வீரர்களையும் அணிக்குள் புதிதாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதிகம் கவனம் ஈர்க்காத ராகுல் சஹார், முகேஷ் சௌத்ரி போன்றவர்கள் ஐபிஎல் அனுபவம் கொண்டவர்கள். அகீல் ஹொசைன் அப்படித்தான். அவர் உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் சோபித்திருக்கிறார். அதனால் அவர் நிச்சயம் இந்த சீசன் சென்னை அணியின் மிகமுக்கிய வீரர்களுள் ஒருவராக விளங்குவார்.
முன்பே சொன்னதுதான், இந்த சீசனின் மிகச் சிறந்த பேட்டிங் யூனிட்களுள் ஒன்றை சிஎஸ்கே கொண்டிருக்கிறது. ஆனால், பந்துவீச்சு தான் சற்று பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக டெத் பௌலிங். அதை சரியாகக் கையாள முடிந்தால் சிஎஸ்கே இந்த சீசனில் வெகுதூரம் செல்லலாம்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே நிச்சயம் முன்னேறும். அதற்கு மேல் அந்தந்த நாளில் அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது அவர்கள் முடிவைத் தீர்மானிக்கும்.
(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு